தற்போதைய செய்திகள்

தி.மு.க. ஆட்சியாளர்கள் வாழ மக்களை பலிகடா ஆக்குவதா?முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடும் தாக்கு

விருதுநகர்

தி.மு.க. ஆட்சியாளர்கள் வாழ்வதற்காக சொத்துவரியை உயர்த்தி மக்களை பலிகடா ஆக்குவதா? என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

சொத்து வரியை 150 சதவீதமாக உயர்த்திய தி.மு.க அரசை கண்டித்தும், கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நிறுத்திய தி.மு.க அரசை கண்டித்தும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் சிவகாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வா அல்லது மக்களின் சொத்து பறிப்பா என்ற நிலையில் வாக்களித்த மக்கள் தவித்து கொண்டிருக்கின்றனர். சத்தம் போடாமல் சொத்து வரியை உயர்த்தியதன் மூலம் சத்தம் போடாமல் சங்கு அறுக்கும் வேலையில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது.

ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் கழக ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. பழைய வரியை தான் மக்கள் செலுத்தி வந்தனர். இன்றைக்கு சிவகாசி மாநகராட்சிக்கு 150 சதவீதம் வரியை உயர்த்தியதால் மக்கள் பெரும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

சிவகாசி மாநகராட்சியில் கூலித்தொழிலாளர்கள், பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் அதிகம் வாழ்கின்றனர். இன்றைக்கு திடீரென்று சொத்து வரியை உயர்த்தினால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

வரியை செலுத்த முடியாமல் வீட்டை விற்க கூடிய சூழ்நிலை தான் ஏற்படும். வீட்டு வரி ஆயிரம் ரூபாய் செலுத்துபவர்கள் வருடத்திற்கு 2500 ரூபாய் செலுத்த சொன்னால் வீட்டு வாடகையை உயர்த்தி விடுவார்கள். வாடகைக்கு குடியிருப்பவர்கள் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். வீட்டு உரிமையாளரும் கஷ்டப்படுவார்கள். பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்திப்பார்கள்.

சொத்து வரி உயர்வை உடனடியாக தி.மு.க அரசு திரும்பப்பெற வேண்டும். சொத்து வரி உயர்வை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். சிவகாசியில் தற்போது பட்டாசு, தீப்பெட்டி தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இப்போது சொத்து வரியை உயர்த்தியதால் மக்கள் பெரிய பாதிப்பை சந்திப்பார்கள்.

மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டித்தொழில் முற்றிலும் முடங்கி போய் உள்ளது. பட்டாசுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக கழக ஆட்சியில் தான் எனது முயற்சியால் தான் குறைக்கப்பட்டது. அதனால் தான் இன்றைக்கும் தீப்பெட்டி, பட்டாசு தொழில் கொஞ்சமாவது உயிரோடு இருக்கின்றது.

இன்று பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டு இருக்கின்ற நெருக்கடியான சூழ்நிலையை யாருமே கண்டு கொள்ளவில்லை. பட்டாசு, தீப்பெட்டி, விவசாய தொழிலையோ யாருமே கண்டு கொள்ளவே இல்லை. பட்டாசு தொழிலாளர்கள் வேலை இன்றி வீதியில் நிற்கின்றனர்.

சிவகாசியில் பட்டாசு தொழில் பிரச்சினை பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டி ஆலைகளை தற்போது மூடியுள்ளனர். இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலை எல்லாம் மாற வேண்டும் என்று சொன்னால் ஆளுகின்ற தி.மு.க. அரசு சொத்து வரி உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லை என்று சொன்னால் அதனுடைய சாதக பாதங்களை தி.மு.க. ஆட்சி சந்திக்க நேரிடும். அடுத்து பஸ் கட்டணம், சினிமா டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்த உள்ளனர். பால், தயிர், நெய் உட்பட எல்லா பொருட்களின் விலையையும் உயர்த்தி விட்டனர்.

இப்படியே எல்லா பொருட்களின் விலைகளையும் உயர்த்திக்கொண்டே போனால் இன்னும் 2 ஆண்டுகளில் மூன்று மடங்கு விலை உயர்ந்து விடும். திரையரங்கில் சினிமா டிக்கெட் விலையையும் உயர்த்தி உள்ளனர்.

எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருகின்றனர். தி.மு.க. ஆட்சியாளர்கள் வாழ்வதற்காக மக்களை பலிகடா ஆக்குவதா? மக்கள் எப்போதும் போல் மகிழ்ச்சியாக வாழ கழகம் தொடர்ந்து குரல் கொடுக்கும்.

இந்த இயக்கம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி. கழகத்தை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது. கழகத்தில இருப்பதே பெருமை. கழகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு சிறுமைதான் வந்து சேரும். ஆகவே இயக்கத்தை விட்டு சென்றவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம். இயக்கத்தின் ஆணிவேராக, ரத்த நாளங்களாக தொண்டர்கள் இருக்கின்றனர்.

ஆகவே கழகம் என்றைக்கும் விருட்சமாக வளர கூடிய இயக்கம். ஆலை அதிபர்களையோ, மிகப்பெரிய கோடீஸ்வரர்களையோ, தொழில் அதிபர்களையோ நம்பி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை.

பட்டாசு தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளி இப்படி கூலித்தொழிலாளர்களை நம்பி தான் இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் ஆரம்பித்தார். ஆகவே மீண்டும் கழகமே ஆட்சியை பிடிக்கும். தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர்வது உறுதி.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.