தி.மு.க. குடும்ப கட்சி கழகம் மக்கள் கட்சி – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேச்சு
திருப்பூர்
தி.மு.க. குடும்ப கட்சி என்றும், கழகம் மக்கள் கட்சி என்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.
திருப்பூர் புறநகர் மாவட்டம் தாராபுரத்தில் நகர, ஒன்றிய கழகம் சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை தாங்கினார். நகர கழக செயலாளர் டி.டி.காமராஜ், ஒன்றிய கழக செயலாளர் சின்னப்பன் (எ) பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்ட கழகத்தை ஆலமரமாக வளர்த்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சி கழகம். குடும்ப நலனில் அக்கறை கொண்ட கட்சி திமுக. கொள்கை என்பதே திமுக கட்சிக்கு கிடையாது. திமுக என்றுமே குடும்ப கட்சி. அவர்கள் வாரிசுகள் மட்டுமே அந்த கட்சிக்கு தலைவராக இருக்க முடியும். திமுகவினர் கவர்ச்சி திட்டங்களை கூறி மக்களை திசை திருப்பி ஏமாற்றி வருகிறார்கள். மக்களை ஏமாற்றுவது தி.மு.க.வினருக்கு கைவந்த கலை. நில அபகரிப்பு கட்ட பஞ்சாயத்து தான் திமுகவினரின் லட்சியம். ஆனால் அம்மாவின் அரசு மக்களுக்கான அரசு.
உழைப்பவருக்கு உயர்வு கழகத்தில் மட்டுமே உண்டு. இளைஞர்களை எல்லா இயக்கங்களும் வரவேற்பதில்லை. கழகத்தில் மட்டுமே எண்ணற்ற வாய்ப்புகள் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாசறையில் சிறப்பாக செயலாற்றிய பலர் இன்று உயர்ந்த பதவியில் உள்ளனர். ஆகவே இளைஞர், இளம்பெண்கள் பணியாற்றிட சரியான ஒரே இயக்கம் கழகம் தான். இது தொண்டர்களுக்கான கட்சி. ஜனநாயகம், உயிரோட்டம் ஆகியவை உள்ள கட்சி கழகம் மட்டும்தான். இது வேறு எந்த இயக்கத்திலும் இல்லை.
2021 வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலிலும் வெற்றி பெற்று அம்மாவின் நல்லாட்சியே தொடர வேண்டும். இதற்கு நாம் அனைவரும் மிக கடுமையாக உழைக்க வேண்டும். முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் ஓய்வின்றி உழைத்து நம் மாநிலத்தை எல்லாவற்றிலும் முதன்மையாக்கி வருகிறார்கள். இந்த சாதனைகளை எல்லாம் நாம் ஒவ்வொரு வாக்காளரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். தேர்தல் பணி மிக கடுமையான பணி. அதற்கேற்றாற் போல் நீங்கள் கடுமையாக உழைத்து மூன்றாவது முறையும் கழகமே ஆட்சி கட்டிலில் அமர வைக்க பாடுபட வேண்டும்.
இவ்வாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரேவதி குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பானுமதி, ஒன்றிய கழக துணை செயலாளர் குண்டடம் குமாரரத்தினம், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் டி.பி.எம்.ஜின்னா, ஆவின் துணைத்தலைவர் டி.எஸ்.சிவக்குமார், ஆவின் இயக்குநர் பி.ரத்தினசாமி, நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் பங்க் மகேஷ் குமார், பேரூராட்சி கழக செயலாளர் சதாசிவமூர்த்தி, மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்க தலைவர் ஏ.பழனிக்குமார், எல்.டி. பேங்க் குணசேகரன், ஜி.ஆர்.பாலு, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் கவுரி சித்ரா முருகேஷ், நகர மகளிர் அணி துணை செயலாளர் தனலட்சுமி, சரஸ்வதி, தனலட்சுமி தங்கவேல், டி.பி.எம்.ஆத்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.