தற்போதைய செய்திகள்

நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தற்கொலை

கோவை

நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அடுத்துள்ள கொண்டயம்பாளையத்தில் உள்ள தனியார் அகாடமியில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் கடந்த இரு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் பொறுப்பு முதல்வராக பிரகாஷ் என்பவரும், முதல்வராக சுகுமார் என்பவரும் இருந்து வருகின்றனர்.

இந்த பயிற்சி மையத்தில் 65 மாணவிகள் உட்பட 130 பேர் பயின்று வருகின்றனர். இம்மையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்வேதா (வயது 18) பயிற்சி மையத்தின் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இவருடன் திருச்சியை சேர்ந்த பிரியங்கா, கரூரை சேர்ந்த காவ்யா ஆகியோர் ஒரே அறையில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஸ்வேதா உடல் நிலை சரியில்லாததால் பயிற்சி வகுப்புக்கு செல்லாமல் அறையிலேயே தங்கி இருந்துள்ளார்.

இதனால் பிரியங்கா, காவ்யா ஆகிய இருவரும் நீட் வகுப்பிற்கு சென்றுள்ளனர். வகுப்பு முடிந்து ஸ்வேதாவிற்கு மெஸ்ஸில் இருந்து உணவு வாங்கி கொண்டு வந்து பார்த்த போது அறை உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதனால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த இருவரும் ஸ்வேதா மின் விசிறியில் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அறை கதவை உடைத்து ஸ்வேதாவை மீட்டு குருடம்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கோவில்பாளையம் காவல் துறையினர் விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட மாணவி ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.