திருவண்ணாமலை

மக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை-சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ உறுதி

திருவண்ணாமலை

ஆரணி தொகுதியில் மக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஜமாபந்தி கடந்த 3-ந்தேதி துவங்கியது. நிறைவு விழாவில் விவசாயிகள் மாநாடும் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேர்தல் பிரிவு கோ.குமரன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்ர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ பங்கேற்று பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, உட்பிரிவு மனுக்கள், சமூக பாதுகாப்பு மனுக்கள் என 79 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

ஆரணி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க ஆட்சியில் நான் அமைச்சராக இருந்த போது வருவாய் கோட்டம் கொண்டு வந்து அதற்கான கட்டிடமும் கட்டப்பட்டது. ஆரணி கல்வி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டு வரப்பட்டது. ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினமும் ஆரணிக்கு 30 லட்சம் லிட்டர் தண்ணீர் பொதுமக்களுக்கு தரப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ஆரணி வளர்ச்சி பெற்றுள்ளது. தொடர்ந்து நான் ஆரணி தொகுதியில் மக்கள் பிரச்சினைகள் கேட்டறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். எனவே பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வழங்கி பயனடையுங்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் எ.அசோக்குமார், மாவட்ட ஆவின் தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய கழக செயலாளர்கள் வக்கீல் க.சங்கர், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், ஜெயப்பிரகாசம், மாவட்ட கவுன்சிலர்கள் கவுரி ராதாகிருஷ்ணன், பூங்கொடி திருமால், முன்னாள் அரசு வழக்கறிஞர் வி.வெங்கடேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.