பொதுக்குழு நடக்கவுள்ள நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி விடுகிறது தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை
லஞ்ச ஒழிப்புத்துறையை முடுக்கி விட்டு, பொதுக்குழு நடக்கும் நேரத்திலே மக்களை திசை திருப்பும் வேலையை செய்து தி.மு.க. அரசு செய்து வருகிறது. சிறையில் அடைத்தால் அடங்கி ஒடுங்கி விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். இன்னும் குரலை உயர்த்தி பேசுவோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சென்னை பசுமை வழிசாலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: ஒரு புறம் முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு, மறுபுறம் அ.தி.மு.க நிர்வாகிகள், அவர்களின் ஆதரவாளர்கள் குறிப்பாக சந்திரசேகர் ஆகியோர் மீது ஐடி ரெய்டு நடத்துவது குறித்து உங்கள் கருத்து.
பதில்: வருமானவரித்துறையானாலும் சரி, லஞ்ச ஒழிப்புத்துறையானாலும் சரி, நீதிமன்றம் என்று ஒன்று உள்ளது. நிச்சயமாக அங்கு நீதியை நிலைநாட்டுவார்கள்.
கேள்வி: லஞ்ச ஒழிப்புதுறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமானவரித்துறையும் சோதனை நடத்துகிறதே. இதனை எப்படி பார்க்கிறீர்கள்.
பதில்: எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள். அனைத்தையும் நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வோம்.
கேள்வி: இது உங்களுக்கான நெருக்கடி ( கட்சிக்கு) என்று நினைக்கிறீர்களா.
பதில்: லஞ்ச ஒழிப்புத்துறையை முடுக்கி விட்டு, பொதுக்குழு நடக்கும் நேரத்திலே மக்களை திசை திருப்பும் வேலையை செய்து வருகிறது. தி.மு.க அட்டகாசங்கள், மக்கள் விரோத போக்கை யாரும் பேசக்கூடாது. அப்படி பேசாமல் இருக்க வேண்டும் என்றால் ரெய்டு என்ற ஆயுதத்தை எடுப்பது தான் இவர்கள் வேலை.
கேள்வி: ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ். முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து பேசினார். இப்போது நடக்கும் ரெய்டுக்கு அவர்கள் தரப்பிலிருந்து தூண்டி விட்டுள்ளார்கள் என்று நினைக்கிறீர்களா.
பதில்: நீங்கள் குறிப்பிடும் நபர் ஒரு பொருட்டே இல்லை. அவருக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதல்வர் என்ன பேசுகிறார் என்று சொல்லுங்கள் நான் பதில் சொல்கிறேன். எதிர்கட்சி வரிசையில் உள்ளவர்கள் யார் கேட்டாலும் நான் பதில் சொல்கிறேன். யாரோ ஒரு வழிப்போக்கர் பேசுகிறார். அவருக்காக நேரத்தை வீணாக்காதீர்கள்.
கேள்வி: இதுபோன்ற சோதனைகள் மூலமாக அ.தி.மு.க.வை அச்சுறுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா.
பதில்: 1972ம் ஆண்டிலிருந்து நாங்கள் ( கழகம்) பார்க்காத அடக்குமுறை கிடையாது. அனைத்து வழக்குகளையும் சந்தித்து, அவற்றை எல்லாம் தவிடுபொடியாக்கி பெரிய அளவுக்கு சரித்திரம் படைத்தது அ.தி.மு.க. என் மீது நான்கு வழக்குகளை போட்டார்கள். ஒரு வழக்கு முடிந்து விட்டது. இன்னும் மூன்று வழக்குகள் உள்ளது. சிறையில் அடைத்தால் அடங்கி ஒடுங்கி விடுவார்களா. இன்னும் குரலை உயர்த்தி பேசுவோம். உலகத்திற்கே எங்கள் குரல் கேட்பது போல பேசுவோம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.