தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகும் காலம் வெகுதொலைவில் இல்லை–கழக அமைப்பு செயலாளர் சொரத்தூர் இரா.இராஜேந்திரன் பேச்சு

கடலூர்,

தி.மு.க. ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும், எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் கழக அமைப்பு செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர் இரா.இராஜேந்திரன் பேசினார்.

கடலூர் தெற்கு மாவட்டம், நெய்வேலி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காடாம்புலியூர் எம்ஜிஆர் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளருமான சொரத்தூர் இரா.இராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் இரா.கோவிந்தராஜ், நெய்வேலி நகர செயலாளர் க.கோவிந்தராஜ், மாவட்ட கழக பொருளாளர் கே.தேவநாதன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டுரங்கன், மாவட்ட துணை செயலாளர்கள் ஞானச்செல்வி, கல்யாணசுந்தரம், ஒன்றிய அவைத்தலைவர் பி.குருநாதன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் இரா.இராஜசேகர், தகவல் தொழில் நுட்ப பிரிவு கோவை மண்டல துணைத்தலைவர் எஸ்.வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் பண்ருட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.கமலக்கண்ணன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் சொரத்தூர் இரா.இராஜேந்திரன், கழக அம்மா பேரவை மாநில துணை செயலாளர்கள் பெரும்பாக்கம் ராஜசேகர், எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், தலைமை கழக பேச்சாளர் ஆவடி குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர் இரா.இராஜேந்திரன் பேசியதாவது:-

அண்ணாவின் பெயரை கொண்டு நமது கழகத்தை ஆரம்பித்த புரட்சித்தலைவர் நாட்டு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொடுத்தார். அவர் கொண்டு வந்த சத்துணவு திட்டம் எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் நிறுத்த முடியாத திட்டமாக இருந்தது. அதேபோன்று புரட்சித்தலைவியும் தமிழக மக்களுக்கு தாலிக்கு தங்கம், விலையில்லா லேப்டாப் போன்ற நல்ல பல திட்டங்களை கொடுத்தார். அவர் வழியில் வந்த எடப்பாடியாரும் குடிமராமத்து திட்டம், மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் போன்ற திட்டங்களை தந்து மக்கள் மனதில் நாளைய நம்பிக்கை நட்சத்திரமாக நிலைத்து நிற்கின்றார்.

எடப்பாடியார் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அண்ணா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டு அதன்படி நாம் இந்த கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். ஸ்டாலின் ஊடகங்களை வைத்து பொய்யான தகவல்களை மக்களிடையே பரப்பி ஆட்சியை நடத்தி கொண்டிருக்கின்றார்.

ஒரு அனிதா இறந்ததற்கு ஒப்பாரி வைத்த ஊடகங்கள் என்று 16க்கும் மேற்பட்ட மாணவிகள் நீட் தேர்வால் இறந்திருக்கின்றனர். இதை எந்த தொலைக்காட்சியாவது செய்தி வெளியிடுகின்றதா. இந்த ஆட்சி கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நல திட்டங்களை நிறுத்துவதும், கழகத்தினர் மீது பொய் வழக்கு போடுவதும் போன்ற வேலையை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றது. திமுகவில் தற்போது நான்கு முதலமைச்சர் உள்ளார்கள் இவர்கள் தமிழ்நாட்டை கொள்ளையடித்து தங்கள் குடும்பத்தை மேலும் எப்படி உலக கோடீஸ்வரர் வரிசையில் கொண்டு சேர்ப்பது என்பதை மட்டுமே எண்ணிப் பார்த்து கொண்டிருக்கின்றார்கள். இந்த கொள்ளை கூட்டத்தின் தலைவனாக ஸ்டாலின் உள்ளார்.

குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று கூறினாரே ஸ்டாலின் என்னானது?. தேர்தல் வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றி இருக்கின்றரா. நாட்டு மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். தமிழகத்தில் வேளாண் மண்டலம் அமைத்து விவசாயிகளை பாதுகாத்தவர் எடப்பாடியார். நீட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி அரசு பள்ளி மாணவர்களை மருத்துவம் படிக்க வைத்து அழகு பார்த்தவர் எடப்பாடியார். திடீரென்று ஸ்டாலின் போல் அரசியலுக்கு அதிர்ஷ்டத்தால் வந்தவரா எடப்பாடியார். இல்லை சேவல் சின்னத்தில் நின்று சட்டமன்ற உறுப்பினராகி, வாரிய தலைவராகி, நாடாளுமன்ற உறுப்பினராகி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்து முதலமைச்சராகி இப்பொழுது எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டிருக்கின்றார்.

அண்ணா மறைவுக்குப்பின் நாவலர் முதல் இடத்தில் இருந்தபோது ராமாபுரம் தோட்டத்தில் ரகசியமாக எம்ஜிஆர் காலில் விழுந்து முதலமைச்சர் பதவியைப் பெற்ற நயவஞ்சகன் நச்சுப் பாம்பு கருணாநிதி தனது குடும்பத்தை மட்டுமே வளர்த்து உலக பணக்காரர் வரிசையில் விட்டுவிட்டு சென்றிருக்கின்றார். அந்த கருணாநிதிக்கு 134 அடியில் பேனா சிலை தமிழக அரசின் சார்பில் ஸ்டாலின் வைக்க போகிறார்.

இதை அண்ணாவுக்கு வைக்க வேண்டுமா கருணாநிதிக்கு வைக்க வேண்டுமா. இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும். நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் நலத் திட்டங்களை கொடுத்தவர்கள் புரட்சித்தலைவரும், அம்மாவும், எடப்பாடியாரும். அப்படிப்பட்ட நம்மை மக்கள் எப்படி மறப்பார்கள். தி.மு.க ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள். கழகத்தின் அடிமட்ட தொண்டன் தற்போது தலைமைப்பொறுப்பில் இருக்கின்றார். நாம் விசுவாசமாக பணியாற்றினால் எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வரும் காலம் வெகுதொலைவில் இல்லை.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர் இரா.இராஜேந்திரன் பேசினார்.

இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.வி.குமரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஏ.ஜி.கே.கல்யாணசுந்தரம், டி.பிரபு, கே.எஸ். சட்டநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிலில் ஒன்றிய கழக துணைச்செயலாளர் ஆர்.எஸ்.அண்ணாமலை நன்றி கூறினார்.