பத்திரிகையாளரை அடிக்க பாய்ந்த அமைச்சர் பெரிய கருப்பன்-சிவகங்கையில் பரபரப்பு சம்பவம்

சிவகங்கை
நான் தாமதமாக வந்ததாக யாரடா நியூஸ் போட்டது எனக்கேட்டு பத்திரிக்கையாளரை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகாத வார்த்தையால் திட்டி அடிக்க பாய்ந்த சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ராஜா துரைசிங்கம் கல்லூரியில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற இருந்த இளைஞர் திறன் திருவிழாக்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் தி.மு.க மாவட்ட செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பன் விழாவை காலை 9 மணிக்கு தொடங்கி வைப்பதாக இருந்தது. இதற்காக காலை 8 மணியளவில் தனியார் பேருந்தின் மூலம் சுமார் 2500 நபர்கள் கொரோனா விதிமுறைகள் சரியாக பின்பற்றாமல் அந்த அரங்கில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்த பெரும்பலானோர் காலை உணவு கூட உட்கொள்ளாமல் அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சர் வராததால் தனியார் தொலைக்காட்சி நிருபர் செய்தி சேகரித்து வெளியிட்டதால் பரபரப்பானது.
இந்த நிகழ்வுக்கு பின்பு பிற்பகல் 12 மணி அளவில் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த அமைச்சர் யாரடா நான் தாமதமாக வந்ததாக செய்தி போட்டது என்று ஆத்திரத்துடன் பேசினார். அந்த இடத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருந்தனர். ஆனாலும் அவர்கள் மத்தியில் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் அந்த செய்தியாளரை நோக்கி தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். அபபோது செய்தியாளரை அடிக்கவும் முற்பட்டார். அமைச்சரின் இந்த அடாவடி செயலை கண்டு அச்சமடைந்து பொதுமக்கள் பின்னோக்கி சென்றனர். தி.மு.க. அமைச்சரின் அடாவடி, அராஜக செயலை படம் பிடிக்க முயன்ற செய்தியாளர்களும் தி.மு.க.வினரால் தடுக்கப்பட்டனர். மேலும் அவர்களை தி.மு.க.வினர் மிரட்டினர். அமைச்சர் பெரிய கருப்பனின் அருவருப்பான செயல் செய்தியாளர்களை மட்டுமில்லாமல் அங்கிருந்த பொதுமக்கள் அரசு ஊழியர்களை முகம் சுழிக்க வைத்தது.