தற்போதைய செய்திகள்

விடியா தி.மு.க. அரசின் மின் கட்டணத்தை பார்த்தாலே மக்களுக்கு ஷாக் அடிக்கிறது – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு

மதுரை

விடியா தி.மு.க. அரசின் மின் கட்டணத்தை பார்த்தாலே மக்களுக்கு ஷாக் அடிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடுமையாக தாக்கி உள்ளார்.

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம் மைனர் தோப்பு வடக்குதெரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30.50 லட்சம் செலவில் சமையலறை மற்றும் கழிப்பிட வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள சமுதாய கூடத்தை கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட கழக பொருளாளர் ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மின் கட்டண உயர்வால் தி.மு.க அரசு தமிழக மக்களை கசக்கி பிழிகிறது என்று தான் சொல்ல வேண்டும். தி.மு.க அரசு சொன்னதை எதையுமே நிறைவேற்றவில்லை. ஒன்று இரண்டை நிறைவேற்றி விட்டதாக அமைச்சர்கள் சொல்கிறார்கள். முழு பூசணிக்காயை குண்டா சட்டிக்குள் மறைக்க பார்க்கின்றனர்.

பொய் சொல்லி மக்களை ஏமாற்றி உள்ளனர். நாங்கள் குறை சொன்னால் எதிர்க்கட்சி காழ்ப்புணர்ச்சியால் பேசுகிறார்கள் என கூறுகின்றனர். மக்களே சொல்கின்றனர் தி.மு.க எதுவும் செய்யவில்லை என்று வீட்டுவரி உயர்வு, மின் கட்டண உயர்வால் மக்கள் கொதித்து போய் உள்ளனர். தி.மு.க. அரசு எதையுமே செய்யாமல் வாகளித்த மக்களை வாட்டி வதைத்து வருகின்றது.

வாக்களித்த மக்கள் இந்த ஆட்சி பிடிக்கவில்லை. வேறு ஆட்சியை மாற்றிக்கொள்ளலாம் என சட்டம் இருந்தால் தி.மு.க. அரசு மாற்றப்பட்டு கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மக்களால் கொண்டு வரப்படும். அப்படி ஒரு வாய்ப்பு இல்லையே என மக்கள் ஏங்கி கொண்டிருக்கின்றனர்.

தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு துன்பம், துயரம் நிறைந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் ஒரு கொடுமை சென்றால் இன்னொரு கொடுமை நடக்கிறது. கொரோனா போனால் குரங்கம்மை வருகிறது. தி.மு.க ஆட்சி அமைந்ததில் இருந்தே மக்கள் பயத்தில் உள்ளனர். பயத்தில் உள்ள மக்களுக்கு பூஸ்டாக ஏதாவது கொடுக்க வேண்டும். ஆனால் துன்பத்தையும், துயரத்தையும் மட்டுமே கொடுக்கும் வகையில் அரசு செயல்படுகிறது.

தி.மு.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கேலிக்கூத்தாகி விட்டது. மாணவிகளுக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தொழிலதிபர்கள் சந்தோஷமாக இல்லை. மின்சார வெட்டு இருக்கும் போது மின்சார கட்டண உயர்வு வேறா.

ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என எப்போதும் மத்திய அரசை குறைசொல்லி, எங்களை அடிமை அரசு எனக்கூறி தற்போது தி.மு.க. அடிமை அரசாக உள்ளது. கேட்டால் திராவிட மாடல் அரசு என சொல்வது கேலிக்கூத்தாக இருக்கிறது.

கழக ஆட்சியில் வீட்டு வரி உயர்வுக்கு அட்டையை பிடித்து நின்ற ஸ்டாலினின் தற்போதைய ஆட்சியில் மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்றால் மின்சார கட்டண உயர்வை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது. ஒரு சீட் இரண்டு சீட் தி.மு.க தற்போது கூட்டணி பலத்தோடு ஆட்சியில் அமர்ந்துள்ளனர். எங்கள் கட்சியில் நாங்கள் எடப்பாடியாரை அனைவரும் ஏற்றுக்கொண்டு பொதுச்செயலாளர் ஆக்கி உள்ளோம்.

நாளைக்கே தேர்தல் வைக்கச்சொல்லுங்கள். தேர்தல் ஆணையத்தில் தி.மு.க சொல்லி ஆட்சியை வாபஸ் பெறுகிறோம் என ஸ்பெஷல் ஆக கூறி மீண்டும் தேர்தல் நடத்துங்கள். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் அரசியலை விட்டே விலகுகிறோம்.

கள்ளக்குறிச்சி சம்பவம் ஒரு மோசமான விபத்து. ஸ்ரீமதி விவகாரத்தில் வேகமாக எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. தூங்கிக்கொண்டிருக்கிற அரசாங்கம் தி.மு.க. அரசு. காலையில் பள்ளி நிர்வாகம் மீது தவறில்லை என டிஜிபி கூறி விட்டு மாலையில் 3 பேரை கைது செய்கிறார். ஆட்சியர், எஸ்பியை நீக்கம் செய்கிறார்கள். தும்பை விட்டு வாலை பிடிக்கும் அரசாக தி.மு.க. உள்ளது.

சென்னைக்கு சிறப்பு நிதி ஒதுக்கிய அரசு மதுரைக்கு நிதி ஒதுக்கவில்லை. ஒரு சமூகத்தை விட்டு நீக்கியவருக்கு பதிலாக அதே சமூகத்தை சேர்ந்தவருக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த சமுதாயம் ஏமாறக்கூடாது என்ற அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கலாம். ஆர்.பி.உதயகுமார் சிறப்பாக பணியாற்றக்கூடியவர். கொடுத்த பணிகளை சிறப்பாக செய்பவர். நல்ல சட்டமன்ற உறுப்பினர். தென் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆனது பெருமை அளிக்கிறது.

அ.தி.மு.க எப்போதும் சாதி மத இன பாகுபாடு பார்க்காத கட்சி. அதிமுக ஒன்றாகத்தான் உள்ளது. தொண்டர்கள் நிர்வாகிகள் ஒன்றாகத்தான் உள்ளோம். பல இன்னல்களிடயே அ.தி.மு.க வளர்ந்தது. எம்.ஜி.ஆர், அம்மா காலம் தொட்டே அ.தி.மு.க பல்வேறு பிரச்சினைகளிடையே வளர்ந்து தொண்டர்களால் செயல்பட்டு வருகிறது. அதிமுகவில் பல்வேறு கால கட்டங்களில் பிரிந்து சென்ற தலைவர்கள் திரும்பி வருவது உண்டு.

ஆர்.எம்.வீரப்பன் தொடங்கி கண்ணப்பன் வரை கட்சியை விட்டு சென்று விட்டு திரும்பி வந்துள்ளனர். அவர்களை அமைச்சர்களாக்கி அழகு பார்த்தவர் அம்மா. தியாகம் செய்து வளர்ந்த கட்சி அ.தி.மு.க. பிரிந்து சென்றவர்கள் திரும்பி வர வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம் பெறுவோம் எனக்கூறி மாணவர்களை தி.மு.க அரசு திரும்ப திரும்ப ஏமாற்றக்கூடாது.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ கூறினார்.