சிறப்பு செய்திகள்

விலை தாறுமாறாக உயரும் என்பதால் எழை, எளிய மக்கள் கடும் எதிர்ப்பு -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை

சென்னை

பாக்கெட்டுகளில் அடைத்து அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்களுக்கு 5 சதவீதமும், அஞ்சலக சேவைகளுக்கு 5 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விதிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு காரணமாக உணவகங்களில் அனைத்து உணவு வகைகளின் விலைகளையும் உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயரும் என்ற காரணத்தால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜிஎஸ்டியின் 47-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விடியா தி.மு.க. அரசின் நிதி அமைச்சரும் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பல பொருட்கள் வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள், சாமான்ய மக்கள் உட்பட அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பல அத்தியாவசிய பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது.

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை மற்றும் அரிசி மாவு, கோதுமை மாவு, பருப்பு, பன்னீர், தேன், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், உலர் பழங்கள், காய்கறிகள், நாட்டுச்சர்க்கரை, பொரி, இறைச்சி உட்பட பல உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அஞ்சலக சேவைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மேற்கண்ட பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயரும் என்ற காரணத்தால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள் குறிப்பாக தாய்மார்கள் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்த வரி விதிப்பினால், உணவகங்களில் அனைத்து உணவு வகைகளின் விலைகளையும் உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவகங்களை நம்பி இருக்கும் நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் மட்டுமல்ல, சிறு உணவகங்கள் நடத்தி வருபவர்களும், அதில் பணிபுரிபவர்களும் இந்த வரி விதிப்பினால் ஏற்படும் தொழில் பாதிப்பை எண்ணி கவலை அடைந்துள்ளனர்.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.