தற்போதைய செய்திகள்

தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேடுக்கு இதுவே சாட்சி -கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா கடும் தாக்கு

மதுரை

ஒருபுறம் மின்வெட்டு, மறுபுறம் மின் கட்டண உயர்வு என மக்களை வஞ்சித்து வருகிறது. இதுவே 14 மாத தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேடுக்கு சாட்சி என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா கூறி உள்ளார்.

மின் கட்டணத்தை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 25-ம்தேதி அன்று கழகம் சார்பில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ பேசியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் சரிவர நிறைவேற்றவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் ஆகிறது. இதுவரை ரத்து செய்யப்படவில்லை. ஆனால் நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மரணங்கள் அதிகரித்து தான் வருகிறது.

அது மட்டுமல்ல கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியில் மாதம் ஒருமுறை மின் கட்டணம் என்று சொல்லியிருந்தார்.

அதை பொய்யாக்கும் வகையில் தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு செய்வதும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை யூனிட்டில் அதிகமாக கூடிய ஒரு நிலையில் பொதுமக்கள் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

தற்போது பொதுமக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளது. அதில் பொதுமக்களை வஞ்சிக்கும் வகையில் தற்போது மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது ஒருபுறம் மின்வெட்டு, மறுபுறம் மின் கட்டண உயர்வு என மொத்தத்தில் இந்த 14 மாத ஆட்சியில் தி.மு.க நிர்வாக சீர்கேட்டுக்கு இதுவே சாட்சி.

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தி.மு.க அரசை கண்டித்து கருப்பாயூரணியில் 25-ம்தேதி நடைபெற இருக்கும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மிக பிரம்மாண்டமாக அமைய வேண்டும்.

இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி கே.பழனிசாமியின் நிர்வாக திறமைக்கும், அவருடைய கரங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அமைய வேண்டும். இதில் பொதுமக்களையும் பங்கேற்க செய்ய வேண்டும்.‘

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்.