சிறப்பு செய்திகள்

விடியா அரசின் முதலமைச்சர், அமைச்சருக்கு கடும் கண்டனம் – கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை

சென்னை

திராவிட மாடல் என்று பீற்றிக்கொள்வதில் எந்த குறையும் இல்லை என்றும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது முதலமைச்சருக்கு அக்கறையில்லை என்றும் கூறி உள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பாதிப்ைப ஏற்படுத்தும் ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் காக்கும் விடியா அரசின் முதலமைச்சர், அமைச்சருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் போது, ஒவ்வொரு முறையும் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அரசின் சார்பாக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழகத்தின் சார்பாக பல அத்தியாவசிய பொருட்களுக்கு வாதாடி வரி விலக்கு பெறப்பட்டது. ஒருசில பொருட்களுக்கு வரி குறைப்பும் பெறப்பட்டது.

மேலும், கோவை மாவட்டத்தில் சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிபெற வேண்டும் என்ற முறையில் வரிக்குறைப்பு பெறப்பட்டது. குறிப்பாக, இல்லங்கள் தோறும் பயன்படுத்தும் மாவு அரைக்கும் வெட் கிரைண்டர்களுக்கான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.

தற்போது இந்த வரி 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது இப்பகுதியில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த விடியா அரசு பொறுப்பேற்றதில் இருந்து நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற இந்த விடியா அரசின் நிதி அமைச்சர், மக்களை பாதிக்கக்கூடிய வரி உயர்வுகளுக்கு ஆட்சேபனையோ, எதிர்ப்போ தெரிவிக்காமல் வாயில்லா பூச்சியாக இருந்தது ஏன்?

ஆனால், திராவிட மாடல் என்று பீற்றிக்கொள்வதில் எந்த குறையும் இல்லை. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சிறுமைப்படுத்தி, தாங்கள் தான் வலிமையானவர்கள் என்று கூறிக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனம் இதன் மூலம் வெளிப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட விடியா அரசின் நிதி அமைச்சர், உணவுப்பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரி விதிப்பிற்கு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல், மவுனம் காத்தது கண்டிக்கத்தக்கது. இதன்மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் மீது இந்த விடியா அரசின் முதலமைச்சரும், தி.மு.க.வினரும் கொண்டுள்ள அக்கறை இன்மை நன்கு வெளிப்பட்டுள்ளது.

ஏழை, எளிய, நடுத்தர மக்களை குறிப்பாக, தாய்மார்களை பெரிதும் பாதிக்கும் உணவுப்பொருட்கள் மீதான இந்த வரி விதிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சிலையும், மத்திய அரசையும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காத இந்த விடியா தி.மு.க. அரசை வன்மையாக கண்டிப்பதோடு, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தினசரி வாழ்க்கையில் பெரும் சுமையை ஏற்படுத்தும் இந்த வரி விதிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு, விடியா தி.மு.க. அரசின் சார்பில் அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.