சிறப்பு செய்திகள்

கழக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடியாரிடம் ஒப்படைக்க வேண்டும்

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு- கழகத்தினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

சென்னை

கழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த 11-ம்தேதி நடைபெற்றது.
சட்டப்பூர்வமான முறையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் வந்திருந்தனர். இதன் காரணமாக அந்த பகுதி மட்டுமல்ல சென்னை முழுவதுமே விழா கோலம் பூண்டிருந்தது.

அதேநேரத்தில் அப்போது கழகத்தின் பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் காலை 8.30 மணிக்கு தனது இல்லத்திலிருந்து தலைமைக்கழகம் வர துவங்கினார்.

அப்போது அவரின் வாகனம் முன்பும் பின்னம், மேலும் அவரின் வாகனத்தை சுற்றியும் குண்டர்கள், ரவுடிகள் கைகளில் கற்களையும், கம்புகளையும் வைத்திருந்த காட்சிகள் பொதுமக்களை அச்சமடைய செய்தது.

தொடர்ந்து குண்டர்கள் படை சூழ ஓ.பன்னீர்செல்வம் தலைமை கழகத்தில் நுழைய முயன்றார். கழகத்தின் கோயிலுக்குள் குண்டர்கள் நுழையவதை அனுமதிக்க மறுத்த கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.

இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. குண்டர்கள் பூட்டியிருந்த கழக அலுவலகத்தை தங்களுடைய காலால் உதைத்தும், பொருட்களால் தாக்கி சேதப்படுத்தி உள்ளே சென்றனர்.இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவருடன் வந்தவர்களும் உள்ளே நுழைந்தனர்.

உள்ளே அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை எல்லாம் எடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் வாகனத்தில் ஏற்றினர். தொடர்ந்து அங்கு இருந்த மின் சாதனங்கள் அனைத்து அடித்து நொறுக்கப்பட்டது. பதாகைகள் கொளுத்தப்பட்டது. இந்த காட்சியை பார்த்த கழகத்தினரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

கழகத்தின் கோயிலை இப்படி குண்டர்கள் தாக்குதல் நடத்திய போது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கழக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை சீல் வைத்தது.

கழக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றக்கோரி கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அலுவலகத்திற்கு செல்லும் வரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவர்கள் நுழைந்த பிறகே லேசான தடியடியை நடத்தி உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை திரட்டி ஆயுதங்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்தது, வன்முறையக் கட்டவிழ்த்தது போன்றவற்றை செய்திருக்கக்கூடாது. காவல்துறை உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வன்முறை தடுக்கப்பட்டிருக்கும்.

பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் கட்சியின் பெருமான்மையினரின் முடிவு. அவற்றை உரிமையியல் நீதிமன்றம் ரத்து செய்யாத வரை, அந்த முடிவே மேலோங்கி நிற்கும். ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவர் கட்சி அலுவலக கட்டடத்தின் மீதான சுவாதீன உரிமையை கோர முடியாது. மோதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே ஆர்.டி.ஓ. உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மனதை செலுத்தாமல் இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 5 முதல் 11-ம் தேதி வரை கட்சி அலுவலகத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பது, கட்சி அலுவலகம் ஒ.பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து எடப்பாடி கே. பழனிசாமி கட்டுப்பாட்டில் இருந்ததும் தெளிவாகிறது.பொதுக்குழு மற்றும் வன்முறை நடந்த ஜூலை 11ஆம் தேதி கட்சி அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் இருந்தது என எவ்வித விசாரணையும் நடத்தாமல் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தவறு.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டவர், அந்த கட்சி அலுவலகத்தில் எவ்வித உரிமையும் கோர முடியாது. தனிப்பட்ட நபருக்கு சொந்தமில்லாத கட்சி அலுவலகத்தை உடைத்து அலுவலகத்திற்குள் நுழைந்தது அத்துமீறி நுழைவதாகத்தான் கருத வேண்டும்.

சீல் வைக்க வேண்டும் என்றால் நிலம், மற்றும் அசையா சொத்துகள் தொடர்பான உண்மையான பிரச்சினை இருக்க வேண்டும். கலவரத்தை உருவாக்கி பிரச்சினை இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது என்பது, கட்சி அலுவலகத்தில் உண்மையான பிரச்சினையாக கருத முடியாது.

காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், சாவியை எடப்பாடி கே.பழனிசாமியிடம் ஆர்.டி.ஓ. ஒப்படைக்க வேண்டும். அலுவலகத்திற்கு காவல்துறை 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

ஒரு மாதத்திற்கு ஆதரவாளர்கள், தொண்டர்களை எடப்பாடி கே.பழனிசாமி அனுமதிக்கக்கூடாது. சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற ஓ.பி.எஸ்.கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

இவ்வாறு வழக்கை முடித்து நீதிபதி வைத்தார்.