தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமைய சூளுரை ஏற்போம்

கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேச்சு

திண்டுக்கல்

நமக்கு இப்போது ஒரே எதிரி தி.மு.க.வை தோற்கடிப்போம். எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமைய சூளுரை ஏற்போம் என்று கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல் மாவட்ட கழக அலுவலத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின் போது கழக பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கருணாநிதியை எதிர்த்து 1972ல் தனியாக இயக்கம் கண்டார். அதனையடுத்து திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில் 1.62 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கழகம் அமோக வெற்றியை பெற்றது.

மக்களின் பேராதரவை பெற்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 3 முறை தமிழக முதலமைச்சராக இருந்தார். அவர் மறைவிற்குப்பின் புரட்சித்தலைவி அம்மா 5 முறை முதலமைச்சராக இருந்தார். அம்மாவிற்கு ஒரு சூழ்நிலை வரும் பொழுது ஓபிஎஸ்சை இடைக்கால முதலமைச்சராக தேர்ந்தெடுத்தோம்.

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கையொப்பமிட்டு கடந்த 23ம்தேதி அன்று பொதுக்குழு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு முன் தலைமைக்கழகத்தில் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் ஒற்றை தலைமை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஓபிஎஸ் தான் இருக்க வேண்டும் ஈபிஎஸ் தான் இருக்க வேண்டும் என யாரும் கூறவில்லை. இருவருக்குள் பேசி முடிவு செய்யுங்கள் இரட்டை தலைமையால் பிரச்சினைகள் ஏற்படுகிறது என கூறினோம்.

இதுகுறித்து பேசி தீர்க்க வேண்டிய இடம் கட்சி அலுவலகம். ஆனால், திடீரென ஓபிஎஸ் கோர்ட்டுக்கு சென்று பொதுக்குழு நடத்தக் கூடாது என வழக்கு தொடுக்கிறார்.

பொதுக்குழு நடத்தலாம் என கோர்ட் தீர்ப்பளிக்கிறது. அன்று இரவோடு இரவாக இருவர் கொண்ட நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சுக்கு சென்று வழக்கு தொடுக்கிறார்.

பொதுக்குழு நடத்தலாம் ஆனால், 23 தீர்மானங்களுக்கு மேல் நிறைவேற்றக்கூடாது என உத்தரவு வந்தது. இதெல்லாம் செய்தது ஓபிஎஸ்.

இதனால் கோபம் கொண்ட தொண்டர்கள் நிர்வாகிகள் பொதுக்குழுவின் போது ஓபிஎஸ்சுக்கு எதிராக குரல் எழுப்பினர். இதனால் அவர்கள் கிளம்பி சென்று விட்டனர். அக்கூட்டத்தில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். 11-ம்தேதி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972ல் எப்படி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டாரோ, புரட்சித்தலைவி அம்மா எப்படி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டாரோ அதேபோல் எடப்பாடியாரையும் பொதுக்குழு இடைக்கால பொதுச் செயலாளராக வரலாற்று சிறப்புமிக்க தேர்வை செய்தது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என கோர்ட்டுக்கு சென்றார் ஓபிஎஸ். அதேபோல் எனது அனுமதி இல்லாமல் வங்கியில் பணம் கொடுக்கக் கூடாது என வழக்கு தொடுக்கிறார்.

ஆனால் இதில் எடப்பாடியாருக்குத் தான் மாபெரும் வெற்றி கிடைத்தது. ஓபிஎஸ் போட்ட வழக்குகளில் எதாவது வெற்றி கண்டுள்ளாரா? தொண்டர்கள், மக்களின் அன்பை எடப்பாடியார் பெற்றுள்ளார். எனவே, ஓபிஎஸ் எந்த கோர்ட்டுக்கு சென்றாலும் எடப்பாடியாருக்கு தான் வெற்றி கிடைக்கும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும். தர்மம் நிச்சயம் வெல்லும். எடப்பாடியார் பக்கம் தான் தர்மம் உள்ளது. 75 மாவட்ட செயலாளர்களின் 70 பேர் நமது பக்கம் உள்ளனர் அதேபோல் மூன்று எம்எல்ஏக்கள் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் உள்ளனர்.

மேலும், பொதுக்குழு உறுப்பினர்களும் அதிக அளவில் நமது பக்கமே உள்ளனர். இதுதான் உண்மையான அ.தி.மு.க. ஓபிஎஸ் பக்கம் இருந்தவர்கள் எல்லாம் எடப்பாடியாருக்கு ஆதரவு அளித்துள்ளனர். தனது உயரம் என்ன என்பதை ஓபிஎஸ் உணர வேண்டும்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கண்ட கனவு படி கட்சி சிறப்பாக உள்ளது. நல்லவர்கள் பாராட்டுகிறார்கள்.
நமக்கு இப்போது ஒரே எதிரி என்றால் அது தி.மு.க தான். மு.க. ஸ்டாலின் தான்.

வருகிற 25-ம்தேதி விடியா திமுக அரசை கண்டித்து நடைபெறக்கூடிய போராட்டம் மாபெரும் வெற்றியை பெற வேண்டும். 1972ல் கழகம் உருவான பொழுது நாங்கள் எப்படி உழைத்தோமோ அதேபோல் கழக நிர்வாகிகள் தற்போது உழைக்க வேண்டும். எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமைய சூளுரை ஏற்போம்.

இவ்வாறு கழக பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.