தற்போதைய செய்திகள்

கழக முன்னாள் எம்.எல்.ஏ தலைமையில் படகில் சென்று மீனவர்கள் போராட்டம்

அம்பத்தூர்

கொசஸ்தலை ஆற்றில் உயர் மின்அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் தலைமையில் கழகத்தினர் படகில் சென்று மீனவர்கள் போராட்டம் நடத்தினர்

வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து புதிதாக மின்சாரம் கொண்டு செல்வதற்காக எண்ணூர் அருகே கடலும் ஆறும் கலக்கும் முகத்துவார பகுதியில் புதிதாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த கோபுரங்கள் அமைக்கப்பட்டால் மீனவர்களுக்கு மீன்பிடி தொழில் செய்வதில் பல பிரச்சினைகள் ஏற்படும் என கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவொற்றியூர் தொகுதி கழக முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்களுடன் கோபுரம் கட்டப்படும் கடல் பகுதிக்கு சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

அப்போது அங்கு பணியில் ஈடுபடுபவர்களை எங்களுக்கு தீர்வு காணப்படும் வரை இங்கு பணி செய்யக்கூடாது அதிகாரிகளை எங்களுடன் பேச சொல்லுங்கள் என மீனவ கிராம மக்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பனும் கேட்டுக்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் செய்தியாளர்களிடம்
கூறியதாவது:-

மின்சாரம் தேவை தான் அதற்கு நாங்கள் மாற்றுக்கருத்து சொல்லவில்லை. ஆனால் ஆற்றில் மீன் பிடிக்கும் 20 ஆயிரம் குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். அம்மா ஆட்சியில் மீனவ கிராம மக்கள் ஆயிரம் பேருக்கு நிரந்தர வேலையை நான் பெற்றுக்கொடுத்தேன்.

அதேபோல் இப்போது 8 கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும். மேலும் வடசென்னை அனல் மின்சாரத்தில் இருந்து சுடுநீர் ஆற்றில் விடப்படுவதால் மீன்கள் வளர்ச்சி தடைபட்டுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் கண்டிப்பாக செய்ய வேண்டும். இந்த பகுதியில் தனியார் தொழிற்சாலையில் இருந்து வாயு கசிகிறது. மீண்டும் போபால் சம்பவம் போல் ஒன்று நடந்து விடாமல் அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போராட்டத்தில் கவுன்சிலர் கே.கார்த்திக் உள்பட 8 மீனவ கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள், கழகத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.