தி.மு.க. அரசை கண்டித்து 25-ந்தேதி சேலத்தில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கில் கழகத்தினர் பங்கேற்க ஏற்பாடு

சேலம்,
தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மின்சார கட்டணம் உயர்வு ஆகியவற்றை கண்டித்து 25ம்தேதி கழகம் சார்பில் சேலத்தில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பங்கேற்க செய்வது என்று சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து வருகிற 25ம்தேதி சேலத்தில், மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்த மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலம் மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மாவட்ட கழக அலுவலக்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட கழக அவைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த சேலம் மாநகர் மாவட்ட கழக செலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.வெங்கடாஜலம் பேசியதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் போல கழகத்தை வழி நடத்திக்கொண்டிருப்பவரும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேல் தமிழக முதலமைச்சராக இருந்து சிறப்பாக ஆட்சி செய்தவர் எடப்பாடியார், ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணங்களாக இருப்பவர் எடப்பாடியார் ஆவார். தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இன்றைக்கு ஆட்சியை இழப்பதற்கு காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கண்டிக்கிறேன்.
கடந்த பத்தாண்டு காலமாக கழக ஆட்சி மிக சிறப்பாக நடைபெற்றது. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என மக்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசு அலுவலர்கள் கூட பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் தி.மு.க.விற்கு ஓட்டு போட்டுவிட்டு, தற்போது ஏன் ஓட்டு போட்டோம் என்று வேதனைப்படுகிறார்கள். 2024 நாடாளுமன்றத்தேர்தல், சட்டமன்ற தேர்தலில் கழகம் நூறு சதவீதம் வெற்றி பெறும். 2024-ம் ஆண்டு எடப்பாடியார் முதலமைச்சர் ஆவார். கழகத்தை ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் வீழ்த்த முடியாது.
இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் பேசினார்.
இந்த கூட்டத்தின் போது வரும் 25ம்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை பங்கேற்க செய்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.