9 லட்சம் டன் ரேஷன் அரிசி புழுத்துப்போய் வீணான அவலம் – நிர்வாக திறமையற்ற தி.மு.க. அரசே காரணம்

எதிர்க்கட்சி தலைவர் சரமாரி குற்றச்சாட்டு
சென்னை,
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்ைகயில் கூறியிருப்பதாவது:-
ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து, தவ வாழ்வு வாழ்ந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியிலும், அம்மாவின் நல்லாசியோடு செயல்பட்ட கழக ஆட்சியிலும் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதும்,
அம்மாவின் பெயரால் நடைபெற்று வந்த பல மக்கள் நலத்திட்டங்களுக்கு மூடு விழா நடத்துவதையுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த விடியா தி.மு.க. ஆட்சியில், சுமார் 9 லட்சம் டன் ரேஷன் அரிசி புழுத்துப்போய், பாழாய் போனதாக மத்திய அரசின் இந்திய உணவுக்கழகம் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளது.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை, உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாத காரணத்தால் அவை மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் போவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே, விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று நான், சட்டமன்றத்திலும், பேட்டிகள் வாயிலாகவும், அறிக்கைகள் வாயிலாகவும் பலமுறை இந்த விடியா அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். அப்படி இருந்தும் இந்த ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்தினார்கள்.
அப்படியே நெல் கொள்முதல் செய்யப்பட்டாலும், நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகிறது என்றும், அதனை உடனடியாக, முறையாக பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கக்கோரி நான் பலமுறை இந்த விடியா அரசிடம் எடுத்துக்கூறியும்,
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பாக வைக்க தவறியதாலும், குறித்த நேரத்தில் அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பாததாலும், மக்களின் பல கோடி ரூபாய் வரிப்பணம் இந்த அரசால் விரயமாக்கப்பட்டுள்ளது.
நான் இந்த அவலங்களை சுட்டிக்காட்டும் பொழுதெல்லாம், எனக்கு பதில் அளிப்பது என்ற போர்வையில் சால்ஜாப்பு வார்த்தைகளை சொல்லக்காட்டிய அக்கறையை, இந்த விடியா அரசின் உணவுத்துறை அமைச்சர், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பதில் காட்டவில்லை.
தன்னுடைய நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி, தன்னுடைய ரத்தத்தை நெல் மணிகளாக விளைவித்து, இந்த அரசின் கைகளில் கொடுத்த அப்பாவி விவசாயிகள், தங்கள் உழைப்பை இந்த விடியா அரசு வீணடித்து விட்டதே என்று எண்ணி எண்ணி ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
இந்த விடியா அரசின் முதலமைச்சர், கடந்த மாதம் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பெண்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட புழுத்த அரிசியை அவரிடம் காட்டி கோஷமிட்டனர். மேலும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரம் இல்லாமல், உண்ண முடியாத நிலையில் இருப்பதால்,
வெகுண்டெழுந்த மக்கள் மத்திய அரசுக்கு அனுப்பிய புகார்களின் அடிப்படையில், இந்திய வாணிப கழக அதிகாரிகள் டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான குடோன்களில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் மூலம் சுமார் 9 லட்சம் டன், அதாவது சுமார் 92 கோடி கிலோ அரிசி மக்கள் பயன்படுத்துவதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதை கண்டுபிடித்துள்ளதாக ஊடகங்களிலும், இன்றைய நாளிதழ்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.
தற்போது, கால்நடைகள் கூட உண்ண முடியாத தரமில்லாத இந்த அரிசியை, ரேஷன் கடைகள் மூலம் அப்பாவி மக்களின் தலையில் கட்ட விடியா தி.மு.க அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
தொட்டதற்கெல்லாம் மத்திய அரசை குறை சொல்வதும், அத்தியாவசிய பொருட்கள், சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் போன்றவற்றை தன்னிச்சையாக உயர்த்தும் போது, மத்திய அரசு ஆணையிட்டதால் தான் உயர்த்தினோம் என்று கூறி, கண்ணாம்மூச்சி ஆட்டம் காட்டும் இந்த விடியா அரசு, மத்திய அரசின் இந்திய உணவுக்கழகம் புழுத்துப்பாழாய் போன அரிசியை பற்றி கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் அளிக்கப்போகிறது?
கோடிக்கணக்கான கிலோ அரிசி பாழாய் போனதற்கு இந்த விடியா அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? இந்த விடியா அரசின் அலட்சியம், நிர்வாக திறமையின்மை காரணமாக, சுமார் 9 லட்சம் டன் அரிசிக்கு உண்டான பல கோடி ரூபாய் பண இழப்பை இந்த விடியா தி.மு.க. அரசு என்ன செய்யப் போகிறது? இதேபோன்று, தமிழகம் முழுவதும் எத்தனை லட்சம் டன் அரிசி வீணாகி உள்ளது என்பதையும் இந்திய உணவுக்கழகம் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்ைகயில் கூறி உள்ளார்.