தற்போதைய செய்திகள்

விடியா தி.மு.க அமைச்சர்களோ உதயநிதியின் புகழ் பாடுகிறார்கள் -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை,

மாணவிகளின் மர்ம மரணங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிக்கல்வித்துறை சீரழிந்துள்ளது. அமைச்சர்கள் எல்லாம் உதயநிதியின் புகழ் பாடுகின்ற வேலையை தான் செய்து வருகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-

2006-2011-ல் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் அவர்களின் குடும்பம் தான் ஆதிக்கம் செலுத்தியது. அதேபோல செஸ் போட்டியிலும் அவர்கள் குடும்ப ஆதிக்கம் தான். சுற்றிலும், முற்றிலும் சர்க்கஸ் கம்பெனி போல அவர்கள் குடும்பம் தான் இருக்கிறது. உதயநிதியை புகழ்பாடும் அமைச்சர்கள் தான் இருக்கிறார்கள். கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் எந்த வேலையும் செய்யவில்லை.

மாணவிகளின் மர்ம மரணங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிக்கல்வித்துறை சீரழிந்துள்ளது. இதனை கவனிக்க அவருக்கு நேரம் இல்லை. உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக அன்பில் மகேஷ் வேலை செய்து கொண்டிருக்கிறாரே தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

அமைச்சர்கள் எல்லாம் உதயநிதியின் புகழ் பாடுகின்ற வேலையை தான் செய்து வருகிறார்களே தவிர வேறு எதுவும் செய்யவில்லை. பொய்யை மட்டுமே மூலதனமாக்கி, பொய்யிலே ஆட்சி செய்து விளம்பத்தின் மூலம் ஆட்சி செய்கின்ற விடியா அரசு தான் தி.மு.க அரசு.

கேள்வி: நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அரசு தான் அகற்ற வேண்டும். ஆனால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆபத்தாண்டவனாக முதல்வர் இருக்கிறார் என்று அமைச்சர் மா.சு. தெரிவித்துள்ளாரே.

பதில் : உள்ளத்திலிருந்தது வந்து விட்டது. நில அபகரிப்பு சட்டம் கொண்டு வந்ததே இவர்களுக்காகத்தான். திமுக முழுக்க முழுக்க நில அபகரிப்பு செய்து வருகிறார்கள் என்று தான் அம்மா இந்த சட்டத்தைக கொண்டு வந்தார்.

அந்த சட்டத்தின் மூலம் தி.மு.க.வினரை அம்மா கைது செய்தார். ஆனால் இப்போது நில அபகரிப்பாளர்களுக்கு நாங்கள் தான் ஆதரவானவர்கள் தி.மு.க.வினர் என்று அவரே ஒத்துக்கொண்டார்.

கேள்வி : பல்வேறு இடங்களில் மழை நீர் அகற்றும் பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளதே.

பதில் : வருமுன் காப்பவன் தான் அறிவாளி. வந்தபின் தடுப்பவன் தான் ஏமாளி. கடந்த முறை பெய் மழைக்கு சென்னை என்ன ஆனது. முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற அலுவலகமே பல நாட்களாக மூழ்கி இருந்தது.

தன்னுடைய தொகுதியே பராமரிக்க முடியாத, தன்னுடைய தொகுதியை வெள்ளத்திலிருந்து காப்பாற்ற முடியாத ஒரு முதலமைச்சரை இந்த நாடு பெற்றிருப்பது தான் வேதனைக்குரிய விஷயமாக நாம் பார்க்க முடியும்.

இந்த மழையிலாவது உருப்படியாக ஏதாவது பணியை செய்தால் நல்லது. ஆனால் செய்வார்களா என்றால் நிச்சயமாக செய்ய மாட்டார்கள். போட்டோ சூட் மட்டும் நடக்கும். விளம்பர அரசு மட்டும் நடக்கும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.