சிறப்பு செய்திகள்

விடியா அரசின் அலட்சியத்தால் செயற்கையான உரத்தட்டுப்பாடு

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்த ஆண்டு காவேரி, வைகை, தாமிரபரணி, பவானிசாகர் போன்ற அனைத்து நீர்நிலைகளில் இருந்தும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், அதே நேரம் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரம் மற்றும் இடுபொருட்களை திட்டமிட்டு போதுமான அளவு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் இருப்பு வைக்க தவறிவிட்டது.

இதனால், விவசாயப்பணிகள் முறையாக, முழுமையாக நடைபெறவில்லை. மேலும், வேளாண் பெருங்குடி மக்களை நசுக்கிப்பிழியும் வகையில் இடுபொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, விலை ஏற்றத்தினால் அவர்களை தவிக்கவிடும் அவலத்தையும் இந்த விடியா திமுக அரசு ஏற்படுத்தி உள்ளது.

தனியார் கடைகளில் யூரியா உரத்தின் விலை சுமார் ரூ.270 மட்டுமே. ஆனால், செயற்கை தட்டுப்பட்டை ஏற்படுத்தி, கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை செய்யப்படுவதுடன், விவசாயிகள் விளைவிக்கும் பயிருக்கு தேவைப்படாத, உரத்தின் விலைக்கு இணையான மதிப்புள்ள இணை இடுபொருட்களை (மிக்சர் பெர்டிலைசர்) கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று விவசாயிகள் வற்புறுத்தப்படுகின்றனர்.

இதனால், விவசாயிகள் தேவையில்லாமல் இருமடங்கு விலை கொடுத்து உரங்களை வாங்கி பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அம்மாவின் அரசில், நான் முதலமைச்சராக இருந்தபோது, தேவையான உரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தேவைப்படும் நேரத்தில் வழங்கப்பட்டது.

வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் யூரியா போன்ற உரங்கள் நெல் நடவு பருவத்திற்கு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவு யூரியா இல்லை. தற்போது தாமதமாக உரங்கள் வரப்பெற்று, விவசாயிகளுக்கு யூரியா விநியோகிக்கும் நிலையில், நானோ யூரியா என்ற உயிரி உரமான திரவத்தையும் வாங்க வேண்டும் என்று விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

ஏற்கனவே, விவசாயிகள் தங்கள் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கி பயிர் செய்யும் சூழ்நிலையில், கூட்டுறவு சங்கங்கள் யூரியாவுடன், உயிரி யூரியாவையும் வாங்க கட்டாயப்படுத்துவதால், திட்டமிட்ட செலவை விட கூடுதல் செலவு சுமை ஏற்படும் அவலமும் உருவாகி இருக்கிறது.

சம்பா பயிரிடும் விவசாயிகளுக்கும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற கடைமடை டெல்டா மாவட்டங்களில் தற்போது தண்ணீர் சென்றடைந்த பகுதிகளிலும், கடும் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது.‘இதனை பல்வேறு விவசாய சங்கங்கள் ஊடகங்களின் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

தங்களுடைய வாழ்வாதாரம் பாழாகி விடுமோ என்று விவசாயிகள் ஏக்கப்பெருமூச்சு விடுகிறார்கள். இவர்களுடைய சுமையை குறைக்க இந்த விடியா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்ததன் காரணமாக, தோட்ட பயிர்களான திராட்சை, எலுமிச்சை போன்ற பயிர்களுக்கு தேவையான கலப்பு உரங்கள், நுண்ணுயிர் உரங்கள் அம்மாவின் அரசில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்த விடியா அரசில் நுண்ணுயிர் உரங்கள் கூடுதல் விலைக்கு அரசின் தோட்டக்கலை துறையின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

எதற்கெடுத்தாலும் அண்டை மாநிலங்களோடு ஒப்பிட்டு பஞ்சாயத்து பேசுவதையே இந்த விடியா திமுக அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. நம் மக்களின் தலை மீது மின் கட்டண உயர்வு என்ற சுமையை சுமத்தக்கூடாது என்று குரல் கொடுத்தால், கர்நாடகாவை பார், கேரளாவை பார், ஆந்திராவை பார், வட மாநிலங்களை பார் என்றெல்லாம் ஒப்பீடு செய்து, நம் மாநிலத்தில் மின் கட்டணம் குறைவு என்று பசப்பு வார்த்தைகள் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது இந்த அரசு.

எந்த கட்டணத்தை உயர்த்தினாலும் இதே டயலாக்கை பேசும் இந்த விடியா அரசு, தோட்டக்கலை மூலம் விவசாயிகளுக்கு விற்கப்படும் உர விலையை அண்டை மாநிலங்களோடு ஒப்பிடத் தயாரா? கர்நாடகா அக்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் என்ற கம்பெனி,

மல்டி பிளக்ஸ் என்ற பெயரில் ஒரு கிலோ ரூ.70 என்ற விலையில் தோட்டக்கலை பயிர்களுக்கு நுண்ணூட்டு உரம் விற்பனை செய்கிறது. அதே நுண்ணூட்டு சத்து அளவுள்ள உரம் தமிழக அரசு வேளாண் டிப்போக்களில் ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, கிலோவுக்கு ரூ.34- அதிக விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த 34 ரூபாய் வித்தியாசம். யார் வீட்டு கஜானாவிற்கு செல்கிறது?

விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான், நாம் சோற்றிலே கை வைக்க முடியும் என்பதை இந்த விடியா தி.மு.க அரசின் முதலமைச்சர் உணர வேண்டும். உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோர் என்ற பழமொழிக்கு ஏற்ப,

நம்மையெல்லாம் வாழ வைக்கும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் போக்கை இந்த சுயநல அரசு உடனடியாக கைவிட வேண்டும். நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தூங்கி வழியும் இந்த அரசின் வேளாண்மைத்துறை அமைச்சர் உடனடியாக விழித்துக்கொண்டு விவசாயிகளை காக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.