சிறப்பு செய்திகள்

லஞ்சம் வாங்குவதில் முதன்மை முதலமைச்சர் ஸ்டாலின்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசம்.

காஞ்சிபுரம்,

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்றுமுன்தினம் காஞ்சிபுரம் வருகை தந்தார். அப்போது அவருக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது,

இதன்பின்னர் அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய பேருரை வருமாறு:-

ஒரு சாதாரண கிளை செயலாளர் இன்றைய தினம் இயக்கத்தினுடைய இடைக்கால பொதுச்செயலாளராக வந்திருக்கிறேன் என்று சொன்னால் அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் மட்டும் தான் நடக்கும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழம் ஜனநாயக அமைப்பு உள்ள ஒரு கட்சி.

இங்கு உழைக்கின்றவர்கள், இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கின்றவர்கள் என்றைக்காவது ஒரு நாள் உயர்ந்த பதவி, உச்ச பதவிக்கு வர முடியும். தி.மு.க.வில் வர முடியுமா, வந்துவிட முடியுமா, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என திமுகவில் நிதிகள் மட்டும் தான் தொடர்ச்சியாக வாரிசாக பதவிக்கு வர முடியும்.

அண்ணா தி.மு.க.வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். எம்எல்ஏ ஆக முடியும். எம்பி ஆக முடியும். ஏன் நான் முதலமைச்சராகி இருக்கின்றேன் உங்களால். தி.மு.க.வில் வர முடியுமா?என்னை சுற்றி பல பேர் இருக்கிறார்கள். ஸ்டாலினை சுற்றி நிற்க முடியுமா? ஏனென்றால் நாங்கள் எல்லாம் குடும்பமாக இருக்கின்றோம். நீங்களும் குடும்பத்தில் ஒரு உறுப்பினர்களாக இருக்கிறீர்கள். இது தான் அண்ணா தி.மு.க.

தி.மு.க.வில் அப்படியல்ல, மக்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள். வீட்டு மக்களை பற்றி தான் கவலைப்படுவார்கள். வீட்டில் இருக்கிறவர்களுக்கு யாருக்கு பதவி கொடுக்க வேண்டும். கட்சியில் அதிகாரம் வழங்க வேண்டும் அதிகாரப்பதவிகளை இப்படி கூறு போட்டு நடத்துகின்ற கட்சி தி.மு.க கட்சி. தி.மு.க ஒரு கட்சி இல்லை. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.

பேரறிஞர் அண்ணா புரட்சித்தலைவர் எம்ஜிஆர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் இன்றைக்கு ஒவ்வொரு மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் முப்பெரும் தலைவர்கள் மூன்று தலைவர்கள்,

நாட்டை ஆளுகின்ற பொழுது நாட்டு மக்களுக்கு கிடைத்த நன்மைகளை அப்படியே நான் நான்கு வருடம் இரண்டு மாதம் முதலமைச்சராக இருந்த பொழுது அம்மாவுடைய அரசு முப்பெரும் தலைவர்களுடைய கனவுகளை நனவாக்கினோம்.

14 மாதம் தி.மு.க. ஆட்சியில், இந்திய நாட்டிலேயே முதன்மை முதலமைச்சராம் ஸ்டாலின், எதிலே லஞ்சம் வாங்குவதிலா?, இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும், ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சி தான்.

கழகத்தினர் மீது பொய் வழக்கு போடுவது, நிர்வாகியின் மீது வழக்கு போடுவது, கஷ்டப்படுத்துவது, துன்பப்படுத்துவது, அதனால் அண்ணா தி.மு.க. மிரட்டி அடக்கப்படுமாம், ஒருபோதும் நடக்காது ஸ்டாலின்.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.