தற்போதைய செய்திகள்

கோட்டையில் நம் கொடி பறக்கும் நாள் வெகு விரைவில் வரும்

கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் ச.கல்யாணசந்தரம் திட்டவட்டம்

கடலூர்

எடப்பாடியார் மீண்டும் முதல்வராகி கோட்டையில் நம் கொடி பறக்கும், நாள் வெகு விரைவில் வரும் என்று கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் ச.கல்யாணசுந்தரம் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

கடலூர் கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.முருகுமாறன் முன்னிலை வகித்தார். மாவட்ட கழக அவைத்தலைவர் எம்.எஸ்.என்.குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். சிதம்பரம் நகர கழக செயலாளர் ஆர்.செந்தில்குமார் துவக்க உரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் கழக செய்தி தொடர்பாளரும், நமது அம்மா நாளிதழின் ஆசிரியருமான பேராசிரியர் ச.கல்யாணசுந்தரம், தலைமைக்கழக பேச்சாளர்கள் குன்றத்தூர் கோவிந்தராஜ், பாளை ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் ச.கல்யாணசுந்தரம் பேசியதாவது:-

அண்ணா எதற்காக அரசியல் கட்சி துவங்கினார். காலம். காலமாக பண்ணையார்களின் கையில் இருந்த அதிகாரம் சாதாரண மக்களின் கைகளில் வர வேண்டும் என்பதற்காக. குடிசையில் வாழ்கின்றவன் இந்த நாட்டில் கோலோச்ச வேண்டும் என்பதற்காகத்தான் திமுகவை துவக்கினார்.

அந்த கழகத்தில் இருவரில் ஒருவர் கருணாநிதி, மற்றொருவர் புரட்சித்தலைவர். அண்ணாவின் கழகத்தை கபளீகரம் செய்து களவாடிக்கொண்டவர் கருணாநிதி. அண்ணாவின் கொள்கைகளை அரவணைத்து கொண்டவர் எம்ஜிஆர்.

கருணாநிதி திமுகவை குடும்ப கட்சியாக மாற்றிக்கொண்டார். அண்ணாவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட கழகம் இன்று சிலுவம்பாளையத்தில் இருந்து வந்த ஒரு கிளை கழக செயலாளரை பொதுச்செயலாளராக வைத்து அழகு பார்க்கின்றது.

அண்ணா ஆரம்பித்த கழகத்திற்கு ஸ்டாலின் இன்று தலைவர் என்றால் அதேபோல் ஒரு கேவலம் வேறு ஏதேனும் உண்டா. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் என்றார் அண்ணா. ஏன் தெரியுமா. இறைவன் என்பவன் வேறு எங்கும் இல்லை. ஏழை சிரிக்கும் நிலை வந்துவிட்டால் அதுதான் இறைவன் ஆட்சி செய்யும் நாடு. என்கிறார் அண்ணா.

இந்த ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்து சொல்லும் தேவை எங்களுக்கு உள்ளதால் நாங்கள் இங்கு வந்து நிற்கின்றோம். தமிழக முழுவதும் போதைப்பொருள் நிரம்பி இருக்கின்றது. இதை தடுக்க முடியாத துப்புகெட்ட காவல்துறை தமிழகத்தில் உள்ளது.

இதுபோன்று அம்மா காலத்திலும், எடப்பாடியார் ஆட்சி காலத்திலும் நடக்குமா. சென்னையில் வி.ஆர்.மாலில் போதை பொருள் பார்ட்டி நடந்து. அதில் 23 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவத்தை ஏன் காவல்துறை தடுக்கவில்லை என்றால் அமைச்சர் சொல்கிறார். உளவுத்துறை கணிக்க தவறிவிட்டது என்று.

ஊர் கூடி தேர் இழுக்கும் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 12 பேர் இறந்து விட்டனர். தேர் திருவிழா நடக்கும் பொது ஏன் மின்சாரத்தை நிறுத்தவில்லை என்று கேட்டால் அமைச்சர் சொல்கிறார் தேர் திருவிழா நடந்தது தெரியாது என்று. உளவுத்துறை தமிழ்நாட்டில் செயல் இழந்து போய் நிற்கின்றது. இது திமுகவின் கடைசி ஆட்சி காலம் என்பது உண்மை.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஊர் ஊராக போய் பிரச்சாரம் செய்தோம். ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் பெண் பிள்ளைகள் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என்று. தற்போது என்ன நடக்கின்றது போரூரில் ஒரு பெண்ணை கடத்திச்சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

அம்மா ஆட்சியில் இதுபோன்று நடக்குமா. ஒரு பெண்ணை தொட வேண்டும் என்று நினைத்தாலே அவன் கையில் கட்டு இருக்கும். பாத்ரூமில் வழுக்கி விழுவான். இப்போது சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சந்தி சிரிக்கின்றது.

இந்த அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தால் நமக்கு ஒரு நன்மை நடந்திருக்கின்றது. இதுவரை ஊடகங்கள் இபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என்று பேசிக்கொண்டிருந்தன. ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டு இருக்கின்றது.

கட்சி 100 சதவீதம் எடப்பாடியார் வசம் இருக்கின்றது. அதை அவர் போராட்டங்கள் மூலம், பொதுக்கூட்டத்தின் மூலம் நிரூபித்து விட்டார் என்று. சில தினங்களுக்கு முன்பு கூட ஓபிஎஸ், ஸ்டாலினை ஆதரித்து பேசுகிறார்.

வரலாறு உங்களை மன்னிக்காது ஓபிஎஸ். நீங்கள் அமைதியாக இருந்தால் கூட வரலாறு உங்களை விட்டு வைக்கும். நீங்கள் இந்த கழகத்திற்கு துரோகம் செய்தால் காலம் உங்களுக்கு பதில் சொல்லும். அம்மாவிற்கு பிறகு கழகம் இருக்காது என்று இனி முழுவதும் நாம் தான் என்று ஸ்டாலின் பகல் கனவு கண்டார். அதை எடப்பாடியார் உடைத்து எம்ஜிஆர், அம்மாவிற்கு பிறகு வலிமைமிக்க மூன்றாம் தலைமுறை தலைவராக உருவாகி விட்டார்.

2011 திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்த நேரம் புரட்சித்தலைவி தேர்தல் பொதுக்கூட்டத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களில் மின்வெட்டை மாற்றி காட்டுவோம் என்று பேசினார். கழகம் ஆட்சிக்கு வந்தது அம்மாவின் அயராத உழைப்பினால் ஆறு மாதங்களில் தமிழகத்தை மின்தடையற்ற மாநிலமாக மாற்றி காட்டினார்.

இதுதான் நிர்வாக திறமை. இதோடு மட்டுமல்ல இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி காட்டியதோடு மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதல் 100 யூனிட்டுகள் மின்சாரம் இலவசம் என்று அறிவித்து இலவசம் மின்சாரத்தை வழங்கினார்.

அன்று தொடங்கிய மின்வெட்டு இல்லா தமிழகம் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் கடைசி நிமிடம் வரை மின்வெட்டு இல்லாமல் நீடித்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வழக்கம்போல் திரும்பவும் மின்வெட்டு. ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்கிறார் அணில்கள் மின்கம்பிகள் மீது ஓடுகின்றது என்று. ஏன் செந்தில் பாலாஜி எடப்பாடியார் காலத்தில் அணில்கள் எல்லாம் ஆந்திராவிற்கா சென்று விட்டது.

தமிழகத்தில் திடீரென்று சொத்து வரி உயர்வு, மின்கட்டணம் உயர்த்தி என மக்களை வாட்டி வதைக்கிறது திமுக. இதைப் பற்றி எல்லாம் அமைச்சர்கள் பேசினால் அவர்களை ஒடுக்குகின்ற வேலையாக அவர்கள் வீட்டில் சோதனை.

நடத்துகிறது ஸ்டாலின் அரசு. சரி ரெய்டு தான் நடத்தினீர்களே என்ன எடுத்தீர்கள், ஒன்றும் இல்லை. இந்த சொதனைக்கெல்லாம் கழக தொண்டன் பயப்பட மாட்டான். இங்குள்ள அதிகாரிகள் அனைவரும் நல்ல அதிகாரிகள் தான். ஆனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஸ்டாலின் குடும்பமே செய்வதால் அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன.

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என அடுத்தடுத்து மக்களுக்கு இன்னல்கள் கொடுத்த திமுக அடுத்து கழக அரசின் அனைத்து மக்கள் நலத்திட்டங்களுக்கும் மூடு விழா நடத்தி வருகின்றது, தாலிக்கு தங்கம், விலையில்லா மடிக் கணினி, மானிய விலையில் இருசக்கர வாகனம் என அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விட்டது.

ஏழை எளிய மக்கள் பசி ஆறிய அம்மா உணவகத்தை ஆட்சிக்கு வந்தவுடன் மூட முடிவெடுத்த போது கழகத்திற்கு முன்னதாகவே பொதுமக்கள் போராடியதால் அந்த முடிவை திமுக கைவிட்டது.

2000 அம்மா மினி கிளினிக் பொதுமக்களுக்காக எடப்பாடியார் உருவாக்கினார். அதற்கும் முழுமையாக மூடு விழா நடத்தி விட்டது ஸ்டாலின் அரசு. மாதம் ஆயிரம் ரூபாய் குடும்ப தலைவிக்கு உரிமைத் தொகை தருவேன், சிலிண்டருக்கு மானியம் கொடுப்பேன் என வாக்குறுதி கொடுத்த ஸ்டாலின் எதை நிறைவேற்றினார்.

கடந்த 15 மாத ஆட்சி காலத்தில் மத்திய அரசு சொன்ன திட்டத்தை எதிர்த்து தமிழக மக்களின் உரிமையை நிலைநாட்டினோம் என்று ஏதாவது ஒரு திட்டத்தை சொல்ல முடியுமா. கழக ஆட்சி காலத்தில் எந்த காலத்திலும் மாநில உரிமையை நாம் விட்டுக் கொடுத்தது இல்லை. எடப்பாடியார் மீண்டும் முதல்வராகி கோட்டையில் நம் கொடி பறக்கும், நாள் வெகு விரைவில் வரும்.

இவ்வாறு கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் ச.கல்யாணசுந்தரம் பேசினார்.