குடும்ப ஆட்சி நடத்தி தமிழக மக்களை கொடுமைப்படுத்துகிறது தி.மு.க அரசு-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசம்

மதுரை,
அடுக்கடுக்கான விலைவாசி உயர்வை சுமத்தி குடும்ப ஆட்சி நடத்தி தமிழக மக்களை கொடுமைப்படுத்தி வருகிறது இந்த விடியா தி.மு.க. அரசு என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசத்துடன் கூறி உள்ளார்.
நேபாள நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில், மதுரை சேர்ந்த ஹரிணி, சிவசந்தியா, ஸ்நேகா, கலா, ஸ்ரீபூஜா ஆகிய மாணவிகளும், சிலம்பம் போட்டியில் வசந்த் கிஷோர் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றனர்.
இதனை தொடர்ந்து அந்த மாணவர்கள் கழக அமைப்பு செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பாவிடம் வாழ்த்து பெற்றனர். அவர்கள் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
அதன் பின்னர் கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மாவும், எடப்பாடியாரும் மாணவர்களின் நலனை சிந்தித்துப்பார்த்து திட்டங்களை நிறைவேற்றினர். குறிப்பாக ஐ.நா.சபையே பாராட்டிய சத்துணவு திட்டத்தை தந்தவர் புரட்சித்தலைவர்.
ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் எல்லாம் பாராட்டும் வகையில் மடிக்கணினி திட்டத்தை தந்தவர் புரட்சித்தலைவி அம்மா ஆவார். அதுபோல அடித்தட்டு மக்களின் கனவை நனவாக்கும் வகையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவக்கல்வி பயில 7.5 சதவீத இட ஒதுக்கீடு தந்தவர் எடப்பாடியார்.
இன்றைக்கு கல்வியிலும், விளையாட்டு போட்டிகளும் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு அடித்தளமிட்டவர்கள் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் ஆவர். தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு ஆகிறது.
ஆனால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
குறிப்பாக பள்ளிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவிகளுக்கு எதிரான பாலியல்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு காலத்தில் ஸ்காட்லாந்துக்கு இணையாக இருந்த காவல்துறை, தற்போது பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள காவல்துறையை காட்டிலும் மோசமாக உள்ளது.
தினந்தோறும் ஒவ்வொரு துறையிலும் அவலங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் 20 சதவீதம் தான் ஊடகங்களில் வெளி வருகின்றன. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விட்டது என்பது போல், முதலமைச்சர் இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று கூறுகிறார். இவர் கூறுவதை பார்த்தால் ரோம் நகர் பற்றி எரியும் பொழுது அதைப்பற்றி கவலைப்படாமல் மன்னன் பிடில் வாசித்தானாம் அந்த கதையாக அல்லவா இருக்கிறது.
வெறும் விளம்பரத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்த முடியாது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. அதுபோல் விளம்பரத்தால் நீங்கள் செய்த அவலங்களை மறைக்க முடியாது. அன்று நாட்டை ஆங்கிலேயர்கள் ஆண்டு மக்களை கொடுமைப்படுத்தினார்கள்.
இன்றைக்கு குடும்ப ஆட்சி நடத்தி சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என்று அடுக்கடுக்கான விலைவாசி உயர்வை தந்து மக்களை கொடுமைப்படுத்தி வருகிறது தி.மு.க விடியா அரசு.
இந்த விடியா தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி அமைகின்ற நாள் தான் மக்களுக்கு விடியும் அரசாக இருக்கும்.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கூறினார்.