தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகார்
சென்னை
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தை பொறுத்தவரையில் இரண்டு பிரதான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று அம்மாவின் அரசு இருக்கின்ற போதே, நான் முதலமைச்சராக இருக்கின்ற போதே பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஒன்று கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்திற்கு தேவையான நீர் கிடைக்கும்.
விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான் முதலமைச்சராக இருந்த கால கட்டத்திலே பல்வேறு முறை பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் கோரிக்கை வைத்தோம். அதனை அவர் பரிசீலிப்பதாக சொன்னார்.
தற்போது அது டிபிஆர் அளவில் இருப்பதாக அறிகிறேன். அதனை வேகப்படுத்தி, துரிதப்படுத்தி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவரிடத்தில் கோரிக்கை வைத்துள்ளோம். இரண்டாவது அம்மா அரசு இருக்கும் போது பிரதமரிடம் நடந்தாய் வாழி காவேரி என்ற திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
காவிரியில் கலக்கின்ற மாசு பெற்ற நீரை சுத்தம் செய்து காவிரியில் விடுவதற்காக இந்த திட்டம் இந்த திட்டத்தை பிரதமர் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரையில் அது இடம்பெற்றது. அந்த திட்டத்தையும் வேகமாக, துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
அதோடு தமிழகத்தில் அடியோடு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தமிழகம் முழுவதும் தடையின்றி போதைப்பொருட்கள் கிடைக்கின்றன. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியக்கூடிய சூழ்நிலையை எடுத்து சொல்கின்றோம்.
இதுகுறித்து நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசி முதல்வரின் கவனத்திற்கக் கொண்டு வந்துள்ளேன். அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளோம். ஆனால் அவர்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் மத்திய உள்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். அதோடு உயர்கல்வித்துறை அமைச்சர் தமிழகத்தில் உள்ள போதைப் பொருட்கள் குறித்து பேட்டி அளித்தார். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை.
எங்கே போதைப்பொருட்கள் விற்றாலும், தமிழகத்திற்கு வந்தாலும் அதனைத் தடுத்து நிறுத்தி சட்ட ரீதியாக,யார் இந்த கடத்தலில் ஈடுபடுகிறார்கள், யார் இந்த போதைப்பொருட்களை விற்பனை செய்கிறார்களே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்த அரசு மெத்தனமாக இருக்கின்ற காரணத்தினாலே, அலட்சியமாக இருக்கின்ற காரணத்தினாலே தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது.
இவை அனைத்தையும் திமுக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்க தவறி விட்டார்கள். அதனால் நாங்கள் மத்திய உள்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம்.
அதோடு தமிழகத்தில் திருட்டு, கொலை. கொள்ளை, வழிப்பறி, பாலியல் கொடுமைகள் தொடர்ந்து நிலவிக் கொண்டிருக்கிறது. இதனையும் நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம்.
தமிழகத்தில் எல்லா துறைகளிலும் கமிஷன், கலெக்சன், கரெப்சன், நடைபெற்று கொண்டிருக்கிறது. எந்த ஒரு துறையிலும் நியமான பணிகள் நடைபெறவில்லை. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.