தி.மு.க. ஒன்றியக்குழு தலைவருக்கு அனைத்து கவுன்சிலர்களும் எதிர்ப்பு

வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டம்-மாதனூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு
திருப்பத்தூர்
மாதனூர் ஒன்றிய குழு கூட்டத்தில் நாற்காலி உடைக்கப்பட்டதோடு, கூச்சல், குழப்பம் நிலவியது. தி.மு.க.வை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் என்று சரமாரி குற்றம்சாட்டி துணைத்தலைவரும், தி.மு.க. மற்றும் கழக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் அதன் தலைவர் ச.சுரேஷ்குமார் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணைத்தலைவர் சாந்தி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டம் தொடங்கியதுமே திமுக ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார், நாற்காலிகள் வாங்க டெண்டர் விடப்பட்டு மூன்று மாதங்களாயும் இன்று வரை எங்களுக்கு உட்கார நாற்காலி கூட வாங்கி தரவில்லை எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் டெண்டர் விடுகிறார்.
எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார் மரபுகளை மீறி செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டி, நாற்காலியை தூக்கி வீசி தனது எதிர்ப்பை தெரிவித்தார். மேலும் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தார்.
இதனை தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்த ஒன்றியகுழு துணைத்தலைவர் சாந்தி சீனிவாசன் தலைமையில் அக்கட்சியின் கவுன்சிலர்களும், கழக கவுன்சிலர்கள் விஜயலட்சுமி, மகாதேவன், சம்பங்கி, மனோகரன், இந்துமதி ஆகியோரும் ஒன்றியக்குழு தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றியக்குழு கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். ஒன்றிய கவுன்சிலர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக சர்வாதிகாரி போல் செயல்படும் தி.மு.க ஒன்றிய குழு தலைவருக்கு, திமுக கவுன்சிலர்கள் மற்றும் கழக கவுன்சிலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு முறையாக தெரிவிக்காமலும், ஆலோசிக்காமலும், தன்னிச்சையாக திமுக ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார் இதுவரை சுமார் ரூ.2 கோடி 32 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விட்டுள்ளார். எந்த பகுதியிலும் வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்று தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
மிட்டாளம் கிராமத்தில் மயானத்திற்கு வழி ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை வைத்து ஐந்து மாதங்கள் ஆகியும் இன்று வரை செய்து தரவில்லை என கழக கவுன்சிலர் மகாதேவன் குற்றம் சாட்டினார். திமுக ஒன்றிய குழு துணைத்தலைவர் உட்பட திமுக, அதிமுக மொத்தம் 16 கவுன்சிலர்கள் ஒன்றிய குழு கூட்டத்தை புறக்கணித்ததால் தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் தி.மு.க ஒன்றிய குழு தலைவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நிர்வாக திறமையற்ற தி.மு.க ஒன்றியக்குழு தலைவர் மீது குற்றம் சாட்டி தி.மு.க, அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர். இதே நிலை தொடர்ந்தால் விரைவில் தி.மு.க ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவும் வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது.
தி.மு.க ஒன்றியக்குழு தலைவர் ச.சுரேஷ்குமார் மீது திமுக ஒன்றிய கவுன்சிலர்களே குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்ததால் தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.