மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்

கன்னியாகுமரி,
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் சீன உளவுக் ப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் உட்பட தென் மாவட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுபோன்று எதிர்காலங்களிலும், சீன உளவுக்கப்பல் இலங்கையில் நிறுத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா தனது 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடி தேசிய கொடியை ஏற்றி பட்டொளி வீசி பறக்க செய்த அதே நேரத்தில் சீனா சென்டரல் டெலிவிசனில் இந்திய எல்கைக்கு அருகில் காரகோரம் மலைப்பகுதியில் உள்ள சம தள பகுதியில் சீன ராணுவம் போர் ஒத்திகை செய்யும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
இந்திய எல்கைக்கு அருகே இந்த ஒத்திகையை வேண்டுமென்றே சீனா தனது டெலிவிசனில் காட்டியது. ஆகஸ்ட் 15-ந்தேதி அன்று இந்திய கடற்படையில் பொதுவாக ரோந்து பணிக்காக பயன்படுத்தும் ‘‘டோர்னியர்’’ ரக விமானம் ஒன்று இலங்கைக்கு நன்கொடையாக இந்தியா வழங்கியது.
இதற்கு அடுத்த நாள் ‘‘யுவான் வாங்-5” என்ற பெயரில் சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைகோள் ஆய்வு பணி என்று பதிவு செய்யப்பட்டுள்ள உளவுக்கப்பல் இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வந்து நங்கூரமிடப்பட்டது. இத்துறைமுகத்தை இலங்கை, தான் வாங்கிய கடனை கழிப்பதற்காக கடந்த 2017-ம் ஆண்டு சீனாவிற்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு வழங்கியிருக்கிறது.
இந்த கப்பலை எரிபொருள் நிரப்புவதற்காகவும், உணவு பொருட்களை ஏற்றுவதற்காகவும் இந்த துறைமுகத்திற்கு வருவதற்கு 2022 ஜுலை 12 அன்று இலங்கையால் ராஜ்ய உறவு ஒப்புதல் வழங்கப்பட்டது. கப்பலை நிறுத்துவதற்கான அனுமதி முதலில் 2022 ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி முதல் 17-ம் தேதி வரையிலான காலத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த கப்பல் ஒரு உளவுக் கப்பல் என்ற பெயரில் பாதுகாப்பு கருதி இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று இந்தியா தனது எதிர்ப்பை இலங்கையிடம் தெரிவித்ததை தொடர்ந்து, இலங்கை வெளிவிவகாரத்துறை சீன தூதரகத்திடம் இப்பயணத்தை ஒத்தி வைக்க கேட்டுக் கொண்டது.
இந்த உளவுக் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வராமல் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் சீனா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இக்கப்பல் இலங்கைக்கு வந்து விட்டது.
இது குறித்து சீனா கருத்து தெரிவிக்கையில் ‘’யுவான் வாங்-5” கப்பலின் கடற்பகுதி விஞ்ஞான ஆராய்ச்சி நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் நடக்கிறதே தவீர வேறு எந்த நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்கோ, பொருளாதார நலன்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் 3-வது நாடு இதை தடுக்கக் கூடாது என்று விளக்கம் அளித்துள்ளது.
என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் இதுவரை நடைபெறாத வரலாற்றில் இல்லாத நிகழ்வாக இலங்கையில் சீன உளவுக் கப்பலை நிறுத்துவதற்கு அனுமதித்துள்ளது. இன்று வரை இந்த உளவுக் கப்பல் இலங்கையில் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், எதிர்காலத்திலும் இந்நிலை தொடருமானால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் இதனால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி சூரியன் உதயத்தையும், சூரியன் அஸ்தமனத்தையும் காணுகின்ற சிறப்பு மிகுந்த உலக சுற்றுலா இடமாகும். முக்கடலான அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்துமகா சமுத்திரம் போன்றவற்றை உள்ளடக்கி, மேலும் இயற்கை வளங்களும், இயற்கை வளங்களை பாதுகாக்கின்ற அணைகளும் நிரம்பி காணப்படுகின்றது.
மேலும் அரியவகை மணல்களை பிரித்தெடுக்கும் மணவாளக்குறிச்சி மணல் ஆலையும் உள்ளது. இதைப்போன்று திருநெல்வேலி மாவட்டத்தில் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணத்தில் அமைய இருக்கும் ராக்கெட் தளம் போன்ற இந்தியாவின் உயிர்நாடியான மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த மேற்குறிப்பிட்டவைகள் அமைந்துள்ளது.
இலங்கைக்கு மிக அருகாமையில் இப்பகுதிகள் உள்ள நிலையில் இலங்கையில் நிறுத்தப்படுகின்ற சீன உளவுக்கப்பல்களால் தமிழகத்தை சார்ந்த தென் மாவட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும் ஆபாயம் உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு முறையாக திட்டமிட்டு, அண்டை நாடான இலங்கையில் நமது நாட்டின் பாதுகாப்பு கருதி இதுபோன்ற உளவுக்கப்பல்கள் வருவதை தடுப்பதற்கு மத்திய அரசு முன்கூட்டியே திட்டமிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எதிர்காலங்களிலும் இதுபோன்று சீன உளவுக் கப்பல் இலங்கையில் நிறுத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் கூறியுள்ளார்.