சேலம்

ஆத்தூர் அருகே கார் மீது சொகுசு பேருந்து மோதி பயங்கர விபத்து-ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி

சேலம்,

ஆத்தூர் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி கார் மீது சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை உட்பட 6 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் லீபஜார் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவர் கடந்த 30 தினங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இவரது 30ம் நாள் துக்க நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஆறுமுகத்தின் உறவினர்கள் எல்லோரும் பங்கேற்று உள்ளனர்.

இந்நிலையில் ஆறுமுகத்தின் துக்க நிகழ்ச்சிக்கு திருச்செங்கோட்டில் இருந்து வந்திருந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ் என்பவர் தனது ஆம்னி காரில் சென்று துக்க நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அவருடன் கோட்டை பகுதியை சேர்ந்த சரண்யா, சுகன்யா,

சந்தியா மற்றும் ராஜேஷின் தங்கை ரம்யா, தன்சிகா, உள்பட 11பேர் ஆம்னி காரில் டீ குடிப்பதற்காக லீ பஜாரில் இருந்து ஆத்தூர் புறவழிச்சாலை வழியாக சென்றுள்ளார்கள். அப்பொழுது ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூர் புறவழிச்சாலையில் ஆம்னி கார் சென்றபோது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு பேருந்து கார் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராஜேஷ் (29), சரண்யா (26), சுகன்யா (28), ரம்யா (25), சந்தியா(20) சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 5பேர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

அப்போது சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி தன்சிகா (11) இறந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் தீயணைப்பு துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.


இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆம்னி பேருந்து ஓட்டுநரை தேடி வருகிறார்கள். துக்க நிகழ்விற்கு வந்த நிகழ்வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது