சிறப்பு செய்திகள்

தன்னை விளம்பரப்படுத்தவே ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

மதுரை,

ஒன்றரை வருடத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் எந்த திட்டப்பணிகளை தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை என்றும், இப்போது முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்தி கொள்ளவே

தீர்க்க முடியாத பிரச்சினைகள் எது என்று கேட்டு எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதுகிறார். அதில் போதைபொருள் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறுகிறார். முதலமைச்சர் கையில் தான் காவல்துறை உள்ளது. முதலமைச்சர் அதிகாரிகளை கொண்டு, இரும்புக்கரம் கொண்டு அடக்கலாம்.

இதைத்தான் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் வலியுறுத்தி வருகிறார். அதேபோல் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர். இதை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் குரல் எழுப்பி வருகிறார். ஆனால் அதற்கு முதலமைச்சர் குழு அமைத்து வருகிறார்.

அதேபோல் சட்டமன்ற உறுப்பினருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். அதில் தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை பட்டியலிட்டு, 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழங்க வேண்டும் என்று கூறுகிறார்.

எனது திருமங்கலம் தொகுதியை எடுத்துக்கொண்டால், மூன்று ஒன்றியங்கள், 116 ஊராட்சிகள், 324 வருவாய் கிராமங்கள், 1 நகராட்சி, 2 பேரூராட்சி உள்ளது. ஏறத்தாழ ஒரு லட்சத்து 10 ஆயிரம் குடும்பங்கள் உள்ளது. மக்களை எடுத்து கொண்டால் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் உள்ளனர்.

ஏற்கனவே இந்த தொகுதியின் நீண்டநாள் கோரிக்கையான ரயில்வே மேம்பாலம் பணிகளை விரைவு படுத்த வேண்டும், பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். திருமங்கலம் சுங்கச்சாவடி அகற்றவேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் அரசை வலியுறுத்தி தான் வருகிறோம்.

தற்போது முதலமைச்சர் ஒரு தொகுதிக்கு 10 கோரிக்கை என்று கூறுகிறார். இந்த 10 கோரிக்கை என்பது ஒரு ஆண்டிற்கு மட்டுமா அல்லது ஐந்தாண்டுக்கு மட்டுமா என்பதை முதலமைச்சர் தெரிவிக்கவில்லை.

மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்களை செயல்பட மக்கள் அனுமதித்து உள்ளனர். அதில் பத்து கோரிக்கையை மட்டும் எப்படி கட்டுக்குள், வட்டத்துக்குள் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மக்களுக்கு நிறைய தேவைகள் உள்ளன. இந்த ஆயிரம் கோடி என்பது பத்தாது. ஏற்கனவே தொகுதி மேம்பாட்டின் மூலம் மூன்று கோடி ரூபாய் மக்களுக்காக திட்டங்களை செய்து வருகிறோம்.

கடந்த ஒன்றரை ஆண்டு காலம் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில், எந்த வளர்ச்சி திட்டங்களையும் தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை. மதுரையில் 10 தொகுதியில் உள்ளன. இதில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொகுதியை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் தி.மு.க அரசு பார்க்கிறது.

முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். இல்லையென்றால் குழு அமைக்கிறார். ஆனால் வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் வேறுபாடு இன்றி திட்டங்கள் வகுக்கப்பட்டது.

முதலமைச்சர் உச்சவரம்பு இன்றி கோரிக்கையை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லையென்றால் வளர்ச்சிக்கான வழித்தடமாக இருக்காது. மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணியை விரைவுபடுத்திட வலியுறுத்தி வருகிறோம். அதேபோல் பள்ளி கட்டிடங்கள் மிகவும் பழுதாக உள்ளது. அதை எல்லாம் சரி செய்ய வேண்டும். கடந்த அம்மா ஆட்சி காலத்தில் சாலைப்பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. குறிப்பாக கிராம சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்தி கொள்ளவே எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். ஆகவே வட்டம், சதுரம் என்று திட்டங்களை சுருக்காமல் மக்களுக்கு உச்சவரம்பின்றி என்று கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.