ஓ.பன்னீர்செல்வம் செயல் சட்டத்திற்கு புறம்பானது-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

சென்னை
ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிடுவது சட்டத்திற்கு புறம்பான செயல் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பியும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்திலே 2532 பொதுக்குழு உறுப்பினர்களின் அபிடவிட்களையும் தாக்கல் செய்திருந்தோம். நாங்கள் அளித்த அபிடவிட் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிந்து கொள்வதற்காக வந்தோம்.
ஆனால் இதற்கு இடையிலே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் தேர்தல் ஆணையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு 11.7.2022 அன்று நடைபெற்ற பொதுக்குழு செல்லும்.
பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த தீர்ப்பின் நகலையும், இன்றைய தேதி வரை கழகத்தின் 11ம்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கலந்துகொண்டு பொதுக்குழு உறுப்பினர்களின் அபிடவிட்டையும் இன்றைக்கு தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்துள்ளோம்.
விரைந்து இதன் மீது நடவடிக்கை எடுத்து, அந்த தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்று அதனை தங்களுடைய வலைத்தளத்தில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். ஆவன செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-
கேள்வி : ஓ.பன்னீர்செல்வம் இன்னும் தன்னை ஒருங்கிணைப்பாளர் என்றே அறிக்கை வெளியிட்டு வருகிறாரே
பதில் : இது மிகவும் தவறான செயல். சட்டத்திற்கு புறம்பான செயல். முதலமைச்சராக இருந்தவர். சட்டத்தின் விதிமுறைகளை மீறி செய்யக்கூடிய ஒரு செயல். அவருடைய செயல் ஒன்றும் ஆச்சரியம் கிடையாது. ஒரு முதலமைச்சராக இருந்தவர் குண்டர்களையும், ரவுடிகளையும் அழைத்துச்சென்று தனக்கு எந்த இயக்கம் பதவி அளித்ததோ, முதலமைச்சர் பதவி வழங்கி அழகு பார்த்ததோ,
அந்த அலுவலகத்தை எட்டி உதைத்து சூறையாடி, அங்கு இருந்த ஆவனங்களை திருடி சென்ற அப்படிப்பட்ட நபர் இதுபோன்ற தவறான செயல் செய்வது ஒன்றும் ஆச்சரியமில்லை. நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் எல்லாம் முடிந்த பிறகு இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி :ஓ.பன்னீர்செல்வம் தான் உண்மையான அதிமுக என்று ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளாரே.
பதில் : இவை தவறானது. அவர் நான் தான் உண்மையான அதிமுக. பொதுக்குழு என் பின்னால் தான் இருக்கிறது. எனக்கு இத்தனை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்று எந்த இடத்திலும் கடிதம் அளிக்கவில்லை. என் பின்னால் தான் அதிமுக இருக்கிறது என்ற எந்த ஆதாரத்தையும் அவர் தரவில்லை. நான் தான் ஒருங்கிணைப்பாளர், நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று கிளிப்பிள்ளை போல சொல்லி வருகிறார்.
அந்த ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது ரத்தாகி விட்டது. 13ம்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அது ரத்து செய்யப்பட்டு விட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி ரத்து செய்யப்பட்டு விட்டது. பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு,
இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு 2663 பொதுக்குழு உறுப்பினர்களில் 2532 பேர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். 61 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
அதிலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அவர் மகன். வேறு எங்கும் அவர் போக முடியாது. அவர் எங்கேயும், எந்த இடத்திலும் தான் தான் அதிமுக என்று எந்த ஆதாரத்தையும் தெரிவிக்கவில்லை.
கேள்வி : ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக எந்த நடவடிக்கையும் இருக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் ஏதாவது கோரிக்கை வைத்துள்ளீர்களா?
பதில் : நாங்கள் அந்த கோரிக்கையை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் தான் அதிமுக. பொதுக்குழு முறையாக, சட்டப்படி கூடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றைக்கு அதற்கான ஆதாரங்களை அளித்துள்ளோம். பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு வெளியிட வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.