விடியா அரசின் மெத்தன போக்கினால் மழைநீர் வீணாக கடலில் கலக்கும் நிலை-எதிர்க்கட்சி தலைவர் வேதனை

கோவை,
விடியா அரசின் மெத்தன போக்கினால் மழைநீர் வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இங்கு மெட்ரோ ரயில் திட்டத்தை ஏற்கனவே அறிவித்தோம். நான் முதலமைச்சராக இருக்கின்றபோது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றது. இப்போது அதனைக் கிடப்பில் போட்டுள்ளார்கள்.
இதனையும் எடுத்துசெய்யவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டம் பிரமாண்டமான திட்டம். இன்றைக்கு கோவை மாநகராட்சி வளருவதற்கு இது ஒரு அடிப்படை திட்டம். இந்த திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றவில்லை.அதுவும் கிடப்பில் தான் உள்ளது.
அத்திக்கடவு-அவினாசி திட்டம் நீண்ட கால திட்டம். ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட மக்கள் பயன்பெறும் விதத்தில் சுமார் 1652 திட்டத்தை அறிவித்து நானே அடிக்கல் நாட்டி அங்கு பணிகள் துவங்கப்பட்டு, பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. ஒரு நான்கு மாதத்திற்கு முன்பே இந்த பணிகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
இன்றைக்கு மேட்டூர் அணையிலிருந்து வெளியேறுகின்ற உபரி நீரும், பவானிசாகரிலிருந்து வெளியேறும் உபரி நீரும் வீணாக சென்று கடலில் கலக்கிறது. இந்த திட்டம் நிறைவேற்றியிருந்தால், இந்த திட்டத்தின் மூலமாகப் பல ஏரிகளை நிரப்பியிருக்கலாம்.
வறண்ட பகுதியில் இருக்கின்ற நிலங்கள் பாசன வசதி பெற்றிருக்கும். நிலத்தடி நீர் உயர்த்திருக்கும். இந்த விடியா அரசின் மெத்தனப்போக்கின் காரணமாக இன்றைக்கு பருவ காலத்தில் பெய்கின்ற மழைநீர் அனைத்தும் கடலில் சென்று வீணாக கலக்கிறது. எந்த திட்டத்தையும் இவர்கள் முழுமையாக நிறைவேற்றவில்லை.
கோவை மாநகரத்தில் போக்குவரத்து அதிகமாக உள்ள காரணத்தினாலே மேற்கு புறவழி திட்டத்திற்காக நில எடுப்பு பணிகள் துவங்கப்பட்டது. நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் அந்த பணிகள் வேகமாக, துரிதமாக செயல்பட்டு அந்த பணிகள் நிறைவு பெறுவதற்காக நடவடிக்கை எடுத்தோம்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தினால் இதனையும் கிடப்பில் போட்டு விட்டார்கள். மூன்றாவது கூட்டுக்குடிநீர் திட்டம். சுமார் ரூ. 750 கோடியில் அம்மாவின் அரசால் திட்டம் தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் சூழ்நிலையிலே ஆட்சி மாற்றம் வந்தவுடன் இதனையும் கிடப்பில் போட்டு விட்டார்கள்.
கோவை விமான நிலைய விரிவாக்கம். இதற்கு அம்மாவின் அரசில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கும் தேவையான நிதி ஒதுக்காத காரணத்தினாலே அந்த விரிவாக்கப்பணி இன்றைக்கு முடங்கியுள்ளது. ஆனைமலையாறு-நல்லாறு அணை திட்டம் இந்த திட்டத்திற்கு கேரளா மாநிலத்துடன் பேச்சுவார்த்தைக்கு முன்னெடுத்து செல்வதில் ஆர்வம் இல்லாமல் இந்த அரசு இருக்கிறது.
நான் முதலமைச்சராக இருந்தபோது முன்னாள் அமைச்சர் வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், கே.சி.கருப்பணன் ஆகியோர் நேரடியாக சென்று கேரளா முதல்வரை சந்தித்து திட்டம் விரைவாக செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் இப்போது ஆளும் திமுக அரசு இதில் அக்கறை செலுத்தவில்லை.
நிறைய பாலம் தொடர்பான திட்டங்களை நாங்கள் அறிவித்தோம். அந்த பாலம் பணிகள் எல்லாம் இன்றைக்கு செயல்படாமல் உள்ளது. ஒரு சில பணிகள் தான் செயல்பட்டு முடிந்து துவக்கி வைத்துள்ளார்கள். இன்னும் பல பணிகள் செயல்படாமல் உள்ளது. இதனையும் விரைவாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.