வெள்ளலூர் பேருந்து நிலைய இடத்தை மாற்றினால் கழகம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் -எதிர்க்கட்சி தலைவர் பேட்டி

கோவை,
எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அம்மாவின் அரசு இருக்கின்றபோது கோவை மாநகராட்சி கோவை மாவட்டத்திற்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றியது. விடியா தி.மு.க அரசு பொறுப்பேற்ற நாள் முதல் கழக அரசு கொண்டு வந்த திட்டங்களை முடக்குவது, ரத்து செய்வது போன்றவற்றை இந்த 15 மாத கால ஆட்சியில் செய்து வருகிறது.
கோவை மாநகராட்சியில் சுமார் 500 பணிகளை அம்மாவின் அரசு எடுத்துக்கொண்டு ரூ. 150 கோடியில் அந்த பணிகள் செயல்படுத்துகின்ற சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பிறகு அந்த திட்டத்தை ரத்து செய்து விட்டார். ஒரு திட்டம் இல்லை, இரண்டு திட்டம் இல்லை, 500 திட்டங்கள் 150 கோடியில் கோவை மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக போடப்பட்ட திட்டத்தை ரத்து செய்த அரசு இந்த விடியா திமுக அரசு.
இன்றைக்குத் திமுக அரசு 133 பணிகளை 44 கோடியில் எடுத்துக்கொண்டார்கள். அதற்கு 18 சதவீதம் கமிஷன் கேட்ட காரணத்தினாலே எந்த ஒப்பந்ததாரரும் ஒப்பந்தம் எடுக்க முன் வரவில்லை. 11 முறை டெண்டர் விடப்பட்டு எந்த ஒப்பந்ததாரரும் பணியை எடுக்க முன்வரவில்லை. இது பத்திரிகையில் வந்த செய்திகள்.
அதோடு அம்மாவின் அரசு வெள்ளளூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 168 கோடியில் டெண்டர் விடப்பட்டு, பணிகள் எல்லாம் துவங்கி சுமார் 50 சதவீத பணிகள் நிறைவு பெற்று விட்டது. அந்த திட்டத்தையும் இன்றைக்கு கைவிட இருக்கிறார்கள். நேற்றைய தினம் கோவை மாவட்ட ஆட்சியர் வெள்ளலூர் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதாக பத்திரிகையின் வாயிலாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்றைய தினம் மின்சாரத்துறை அமைச்சர் பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசுகிறார். கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன்படி நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார். அம்மாவின் அரசு நீண்டகாலமாகக் கோவை மாநகர மக்களின் கோரிக்கையை ஏற்று, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நகர்ப்புற வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை வந்த போது இது குறித்து பேசினார். வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகிறது.
விரைவாக அந்த பணியை முடிக்க வேண்டும் என்று அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தவுடன், அப்போது அமைச்சர் நேரு அந்த பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு முடிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதற்கு காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நெருக்கமான ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் அந்த பைபாஸில் நுற்றுக்கணக்கான நிலத்தை வாங்கி குவித்துள்ளார்.
இந்த பேருந்து நிலையத்தை அங்கு மாற்றினால் அந்த நிலங்கள் எல்லாம் அதிக விலைக்கு போகும். ஆகவே இந்த பேருந்து நிலையத்தை மாற்றுவதற்கு இது தான் காரணம். வேறு எந்த காரணமும் கிடையாது.
இன்றைக்கு அரசின் பணத்தை வீணடிக்கின்றார்கள். இது அரசின் நிலத்தில் கட்டப்படுவது. இது அங்கே சென்றால் அது தனியார் நிலம். அதனை விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.
இனி இந்த கட்டிடத்தை என்ன செய்யபோகிறார்கள் என்று தெரியவில்லை. இவை அனைத்தும் மக்களின் வரிப்பணம். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகின்றது. இப்படி இந்த விடியா அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு அம்மாவின் அரசு கொண்டு வந்த திட்டத்தை எல்லாம் ஒவ்வொன்றாக ரத்து செய்து வருகிறார்கள். எனவே வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மாற்ற முற்பட்டால் தொடர் உண்ணாவிரதபோராட்டம் கோவை மாநகராட்சியில் நடைபெறும்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.