மாணவர்களே எதிர்கால வாழ்க்கை யுக்திகளை வளர்த்துக்கொள்ளுங்கள்-வைகைச்செல்வன் அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி
எதிர்கால வாழ்க்கை யுக்திகளை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று மாணவர்களுக்கு, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிவுறுத்தி உள்ளார்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப்பேரவையின் எண்ணாண்டு எழில்தமிழ் பண்பாட்டுப் பெருவிழா, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவித்யா மந்திர் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளருமான டாக்டர் வைகைச்செல்வன், போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றியதாவது:-
இந்தியாவின் வளர்ச்சியே மாணவர்களின் கையில் தான் இருக்கிறது என்று சொல்வார்கள். மண்ணை குழைத்தால் தான் பாண்டம் வரும். மாணவர்களை செம்மைப்படுத்தினால் தான் இந்தியா வளரும். இந்தியாவின் ஆக்கப்பூர்வ சக்தியே இந்த மாணவர்கள் தான். மாணவர்களின் வளர்ச்சியில் தான் இந்தியாவின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது.
தேசிய தலைவர்கள் பலரும் மாணவர் பருவத்திலேயே இந்தியாவிற்கு ஆற்ற வேண்டிய பங்குகளை ஆற்றியதால் தான் இன்றும் அவர்கள் சரித்திரத்தில் நிலைத்து இருக்கிறாகள். மாணவர்களின் சேவைகளில் தான் இந்தியாவின் தேவைகள் எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய கால கட்டத்தில் இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதங்களை ஒடுக்குவதற்கு மாணவர் சமுதாயம் பல நல்ல யுக்திகளை கையாள வேண்டும்.
படிக்கின்ற பருவத்திலேயே இடையூறு வந்தால் தான் சிறந்த சிந்தனை வளரும். ஈர மண்ணில் தான் பூக்கள் அழகை கொட்டும். மாணவ பருவத்தில் தான் மனதை கட்டுப்படுத்த முடியும். அதற்கான பயிற்சிகள் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பயிற்சி பெற்ற மாணவர் சமுதாயத்தின் மூலம் இந்தியாவின் தேவைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அன்புக்குரிய மாணவச் செல்வங்களே, உங்களுக்கு அன்பை வெளிப்படுத்தும் அழகான குட்டிக்கதை ஒன்றைக் கூறுகிறேன். ஒரு பள்ளியில் ஆசிரியை ஒருவர், அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பி வைத்தார்.
திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப்பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது. முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள்.
ஏனென்று கேட்டபோது சொன்னாள், நானும் மலரை பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப்பூச்சியை பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய் பறக்கட்டும் என்று விட்டு விட்டேன். குஞ்சு பறவையை பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன் என்றாள்.
அந்த மாணவியை அணைத்துக்கொண்ட ஆசிரியை சொன்னார், “அன்பு என்றால் இது தான்” ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும். எதையும், யாரையும் காயப்படுத்தாமல் இருப்போமே. நாம் உலகிற்கு எதையேனும் கொடுக்க வேண்டுமென நினைத்தால் அன்பைக்கொடுப்போம்.
ஏனெனில் உலகில் எங்கும் பரவிக்கிடப்பது அன்பு ஒன்று தான்.. ஆனால் உலகம் அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத் தான்.. அனைவரிடமும் அன்புடன் பழகுவோம் என்று ஆசிரியை மாணவச்செல்வங்களுக்கு விளக்கம் அளித்தார். அன்பு ஒன்றுதான் அனைத்துக்குமே ஆதாரம் என்பது இந்த கதையின் மூலம் புலப்படுகிறது.
முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளருமான டாக்டர் வைகைச்செல்வன் பேசினார்.
இந்நிகழ்ச்சியின் இறுதியில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் வழங்கினார்.