தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்-எதிர்க்கட்சி தலைவர் திட்டவட்டம்

சென்னை
தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றியுள்ள தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக ஆட்சி வருவதற்கு முன்பு 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது திமுக சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள். சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தரப்படும் என்றார்கள். இதுவரையில் தரவில்லை. பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்றார்கள்.
அதனையும் செய்யவில்லை. கல்வி கடன் ரத்து என்றார்கள். இதனையும் செய்யவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்றார்கள். அதனையும் செய்யவில்லை. முதியோர் ஓய்வூதிய தொகையை உயர்த்தி தருவோம் என்றார்கள்.
இதனையும் உயர்த்தவில்லை. இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் வழங்குவோம் என்றார்கள். இதனையும் வழங்கவில்லை. முக்கிய அறிவிப்புகள் எதனையும் நிறைவேற்றவில்லை.
100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தப்படும் என்றார்கள். இதனையும் செயல்படுத்தவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்றார்கள். அதனையும் செய்யவில்லை. பல திட்டங்களை செயல்படுத்தவில்லை. இன்றைக்கு இந்த விடியா அரசு ஒன்றை மட்டும் தெளிவாக செய்து வருகிறது.
எதற்கெடுத்தாலும் குழு போட்டுள்ளது. 15 மாத தி.மு.க ஆட்சியில் சுமார் 38 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய சரித்திரத்தை இந்த அரசு சாதித்துள்ளது. இன்றும் ஒரு குழு மட்டும் தான் போட வேண்டும். இந்த 38 குழுவும் எப்படி செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு குழு போடவேண்டும். இந்த குழு போட்டால் முடிந்து விடும். குழு அரசு இந்த அரசு.
சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழிந்து வருவதை பார்த்து கொண்டுள்ளோம். எங்கு பார்த்தாலும் டன் கணக்கில் போதை பொருட்களை பிடித்து வருகிறார்கள்.
இதனை இந்த அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று பல முறை ஊடகத்தின் வாயிலாகவும், பத்திரிக்கை வாயிலாகவும், அறிக்கையின் வாயிலாக இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும், கவனக்குறைவாக இருந்த காலத்தினாலே, மெத்தன போக்கின் காரணமாக இன்றைக்கு போதை பொருட்கள் தாராளமாக கிடைத்து கொண்டிருக்கிறது.
போதை பொருட்கள் நிறைந்த மாநிலமாக இன்றைக்கு தமிழகம் காட்சியளித்து கொண்டுள்ளது. இதுவும் கண்டிக்கதக்கது.
ஆன் லைன் ரம்மி சூதாட்டத்தை ஏற்கனவே அம்மாவின் அரசு தடை செய்தது. ஆனால் அந்த நிறுவனம் நீதிமன்றம் சென்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தது.
சரியான தரவுகளை எடுத்து வைக்காத காரணத்தினாலே ஆன்லைன் நிறுவனத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்துவிட்டது. அப்போது நீதிபதி மீண்டும் ஒரு சட்டத்தை சட்டமன்றத்திலே இயற்றி அமல்படுத்தலாம் என்று சொன்னார்.
சட்டத்துறை அமைச்சரும் தெரிவித்தார். நான்கு மாதத்தில் சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யப்படும் என்று சொன்னார். ஆனால் இன்றைக்கு ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. இதனை கிடப்பிலே போட்டுள்ளார்கள். அதற்கும் மேலாக ஒரு விசித்திரமான ஒன்றை செய்துள்ளார்கள்.
ஆன்லைன் ரம்மிக்கு கருத்து கேட்கிறார்கள். உலகத்தில் எங்காவது சூதாட்டத்திற்கு எங்காவது கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தியதுண்டா. உலகத்தில் எங்கும் கிடையாது. முதலமைச்சர் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தி வருகிறார்.
இதனை எப்போது முடிப்பார் என்று தெரியவில்லை. அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அதில் என்ன முடிவு எடுத்தார் என்று தெரியவில்லை.
ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் ஒரே குரலாக ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்து வருகிறது. ஆனால் இந்த குரல் தமிழக முதல்வருக்கு கேட்கவில்லை. இதற்கு தகுந்த பாடத்தை வரும் தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.