40 தொகுதிகளையும் கழகம் வென்றெடுக்கும்- கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டம்

திருவண்ணாமலை
எடப்பாடியார் தலைமையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சாதனை படைப்போம். 40 தொகுதிகளையும் கழகம் வென்றெடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
போளூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் போளூர் பேருந்து நிலையம் அண்ணாபூங்கா அருகில் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணை செயலாளரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
போளுர் நகர செயலாளர் ஜி.பாண்டுரங்கன், சேத்பட் நகர செயலாளர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன் களம்பூர் நகர செயலாளர் பஞ்சாட்சரம் ஆகியோர் வரவேற்றனர்
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும்,
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ பேசியதாவது:-
இங்கு கூடியுள்ள கூட்டத்தை பார்த்தால் நாளையே தேர்தல் நடந்தாலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் என திமுகவினைரை அச்சுறுத்தும் வகையில் தொண்டர்கள் கூடி உள்ளனர். போளூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்டமே வருகை தந்துள்ளது.
இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கழகம் சிறப்பான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தங்குதடையின்றி அதிமுகவை வழிநடத்தி வரும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளையும் கழகம் வென்றெடுக்கும்.
அறிஞர் அண்ணா தனது பேச்சாற்றலால் பாமரனும் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும் என்பதை நிரூபித்து காட்டினார். அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் உயிர்மூச்சு இருக்கும் வரையில் தமிழக நிரந்தர முதல்வராக இருந்து வரலாறு படைத்தார். எந்த பணியை கொடுத்தாலும் அதை திறம்பட செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர் தான் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.
மனிதநேயமிக்கவராகவும் மக்களையும், தொண்டர்களையும் நேசிப்பவராகவும் உள்ள காரணத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எந்த சட்டமன்ற தொகுதியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி போட்டியிட்டாலும் எளிதில் வெற்றிபெறுவார். அவரை யாராலும் வெல்லமுடியாது. தொண்டர்கள் மற்றும் மக்களின் பேராதரவு எப்போதும் அதிமுகவிற்கும், அக்ரி எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்திக்கும் உண்டு.
48 லட்சம் மாணவர்கள் பசியாறும் சத்துணவு திட்டத்தை 1980-ம் ஆண்டில் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். உலக தலைவர்கள் அனைவராலும் அம்மா என்று அழைக்கப்பட்ட ஒரே தலைவர் புரட்சித்தலைவி. இந்திய தலைவர்களுக்கு இல்லாத ஆற்றல் புரட்சித்தலைவியிடம் இருந்தது.
ஆறு மொழிகளில் புலமை பெற்றவர். பாரதி கண்ட கனவை நிறைவேற்றியவர். அன்னை தெரசாவால் பாராட்டு பெற்றவர். தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு முடக்கியுள்ளது. மக்களை உணராத திமுக அரசால் கட்டிட கட்டுமான பொருட்கள் முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
வல்லரசு நாடுகளே கொடுக்க முடியாத மடிக்கணினிகளை, மாணவ-மாணவிகளுக்கு தந்து, அவர்களின் மேற்படிப்பு வளர்ச்சிக்காக மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்தி காட்டியது அம்மாவின் அரசு. ஏழை எளிய மாணவர்களும் மருத்துவ படிப்பை பெற 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியவர் எடப்பாடி கே.பழனிசாமி.
அதிமுக தலைமை என்றால் அது எடப்பாடி கே.பழனிசாமி தான். அடுத்த தமிழக முதல்வரும் அவர் தான். தமிழ் மண்ணில் அண்ணா திமுக என்ற இயக்கத்தை எவராலும் சாய்த்து விட முடியாது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ பேசினார்.