தற்போதைய செய்திகள்

வேலைவாய்ப்பு, பயிற்சி நிறுவனத்தின் சான்றிதழை அங்கீகரிக்க வேண்டும் -முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தல்

சென்னை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சான்றிதழையும் அங்கீகரிக்க வேண்டும் என்று நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 29.7.2022 அன்று அறிவித்த விளம்பர எண். 622, அறிவிப்பு எண். 18/2022-ன் படி, தமிழ்நாடு அரசுத்துறைகளில் 1089 சர்வேயர் பணியிடங்களுக்கான விளம்பரம் வெளியிடப்பட்டது.

அந்த விளம்பரத்தில் கல்வித் தகுதியாக, இந்திய அரசின் தொழிற்பயிற்சி நிறுவன சான்றிதழை (NCVT – National Council for Vocational Trading) பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பால், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் இப்பதவிக்கான போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாக ஆகியுள்ளார்கள்.

தமிழ்நாட்டிலே படித்து, தமிழக அரசின் தொழிற்பயிற்சி நிறுவன சான்றிதழை (SCVT – State Council for Vocational Trading) பெற்றிருக்கின்ற தமிழக இளைஞர்களை, மேற்கண்ட வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாக ஆக்கியுள்ளது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இந்த அறிவிக்கை.

எனவே, சர்வேயர் பணியிடங்களுக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்கும் கால அளவை நீட்டிப்பு செய்தும், தமிழக அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயின்று சான்றிதழ் பெற்ற (SCTV – State Council for Vocational Trading) அனைத்து தமிழக மாணவர்களையும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாக திருத்தம் செய்தும், புதிய அறிவிப்பினை வெளியிடுவதற்கு விடியா திமுக அரசு உரிய ஆலோசனையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு வழங்குமாறு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

லட்சக்கணக்கான தமிழக மாணவர்கள் அரசு வேலைக்காக ஏங்கி தவிக்கின்ற இன்றைய கால சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இனிவரும் காலங்களில் நடத்துகின்ற தேர்வுகளை மிகுந்த கவனத்தோடு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு அறிவிப்பாணைகளை வெளியிடுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.