உங்கள் சித்து விளையாட்டை தோலுரித்து காட்டாமல் பின்வாங்க மாட்டேன்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை
மதுரை,
இதுதான் உங்களுக்கு இறுதி அத்தியாயம். உங்களின் போலி வேஷம், நரித்தனம் எடுபடாது என்றும், உங்கள் சித்து விளையாட்டுகளை தோலுரித்து காட்டாமல் நான் பின்வாங்க மாட்டேன் என்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்து உள்ளார்.
முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சசிகலாவை மீண்டும் சந்திப்பேன். கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அறிவிப்பு கொடுக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அவர் நிகழ்த்தி வரும் நாடகத்தை கண்டு சிரிப்பதா, அழுவதா தெரியவில்லை. சசிகலாவை சிறையில் தள்ளி, அவரை அரசியல் அனாதை ஆக்கியது சாட்சாத் ஓ.பன்னீர்செல்வம் தான்.
சுயநல அரசியலின் மொத்த உருவம் அவர். தனக்கு பதவி இல்லை என்று சொன்னால் இந்த கட்சியை அழிக்க தயாராகி விடுவார். அ.தி.மு.க.வை அழிக்காமல் ஓய மாட்டார் என்பது தான் அவர் எடுத்து வரும் நடவடிக்கை. இந்த இயக்கத்திற்கு என்ன தியாகம் செய்தார் என்பதை அவர் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்.
என்னோடு அரசியல் பயணம் செய்த அய்யப்பனை தன்னோடு இணைத்துக்கொண்டு, ஏதோ வெற்றிக்கொடி நாட்டியது போல் நினைத்து கொண்டீர்கள்.
உங்களுக்கு மானம், வெட்கம், ரோஷம் இருந்திருந்தால், நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்ட லோகிராஜனை வெற்றிபெற செய்திருந்தால், நீங்கள் அ.தி.மு.க.வில் உண்மையான தொண்டன் என்று எல்லோரும் ஏற்றுக்கொண்டு இருப்பார்கள்.
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வெற்றிபெற்ற ஆண்டிப்பட்டி தொகுதியில் லோகிராஜனை தோற்கடிக்க விட்டு விட்டு, உசிலம்பட்டியில் வெற்றிபெற்றவரை உங்கள் தவப்புதல்வன் மூலம் வத்தலகுண்டுக்கு, அனுப்பி, நீங்க நடத்திய நாடகம் வெற்றிபெற்று இருப்பதாக மமதையுடன் இருக்க வேண்டாம் ஓ.பன்னீர்செல்வம்.
நான் எந்த தியாகத்திற்கும் தயாராக இருக்கிறேன். உங்கள் சித்து விளையாட்டுகளை தோலுரித்து காட்டாமல் நான் பின்வாங்க மாட்டேன்.
இந்த அய்யப்பனுக்கு உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தலில் நான் எடப்பாடியாரிடம் பரிந்துரை செய்தேன். நீங்கள் அவருக்கு பரிசீலனை செய்யவில்லை என்பதை உங்கள் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்.
உசிலம்பட்டி தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுக்க வேண்டும் என ஒற்றைக்காலில் தவம் இருந்தவர் நீங்கள். இன்றைக்கு வெற்றி பெற்று வந்தவரை வேடன் விரித்த வலையில் மாட்டிய மணிப்புறா போன்று நீங்கள் செய்துள்ளீர்கள். இதன் மூலம் எந்த பின்னடைவும் எனக்கு வரவில்லை.
அ.தி.மு.க.வை உங்கள் குடும்ப சொத்தாக நினைப்பது நான் இருக்கும் வரை ஒருபோதும் நடக்காது. உங்கள் பணம் பாதாளம் வரை பாயட்டும். அதுக்கு நான் கவலைப்படவில்லை. பார்த்து விடலாம் எத்தனை நாள் நடக்கிறது உங்கள் திருவிளையாடல், சித்து விளையாட்டு. எச்சரிக்கையாக சொல்கிறேன். இதுதான் உங்களுக்கு இறுதி அத்தியாயம். உங்கள் போலி வேஷம், நரித்தனம் எடுபடாது.
இந்த இயக்கத்துக்காக எடப்பாடியார் கடுமையாக போராடி வருகிறார். அன்று கூட நீங்கள் தனிமைப்பட்டு, அரசியல் அடையாளம் இல்லாமல், அனாதையாக இருந்தீர்கள். உங்களை அழைத்து கழகத்தின் தலைவராக்கி, நாட்டின் துணை முதலமைச்சராக அழகு பார்த்த எடப்பாடியார்.
அவருக்கு உங்களால் எத்தனை, எத்தனை சங்கடங்கள், சோதனைகள் ஏற்பட்டது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். உங்களின் உண்மை முகம் தெரிவதற்கு நாள் வெகு தொலைவில் இல்லை.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.