கழக ஆட்சியின் திட்டங்களுக்கு விடியா அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு
திருச்சி
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு இந்த விடியா தி.மு.க. ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தான் நடந்து கொண்டிருக்கிறது என்றும், அம்மாவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எல்லாம் தாங்கள் கொண்டு வந்தது போல் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.
கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி இல்லத்திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்த எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு எழுச்சிமிகு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த வரவேற்பை ஏற்றுகொண்ட முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள வயர்லெஸ் ரோட்டில் அலைகடலென திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் உரையாற்றியதாவது:-
திருச்சி மாநகரமே குலுங்குகின்ற வகையில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் போல் காட்சியளிக்கின்றனர். இந்த சிறப்பான வரவேற்பு அளித்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கிட்டதட்ட 30 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். தமிழகத்தில் அதிக ஆண்டு காலம் ஆட்சி புரிந்த கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை துவக்கினார். அதன் பிறகு புரட்சித்தலைவி அம்மா இந்த இயக்கத்தை கட்டிக்காத்தார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களும் சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு தந்து, தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் நலம்பெற, வளம்பெற சிறந்த அடித்தளமிட்டார்கள்.
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் இருந்த காரணத்தினால் தான் இன்றைக்கு தமிழகம் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது என்பதை யாராலும் மறக்க முடியாது.
இன்றைக்கு ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைந்து 15 மாதம் ஆகிறது. 15 மாதத்தில் திருச்சி மாவட்டத்திற்கு எந்த ஒரு திட்டத்தையாவது யாராவது கொண்டு வந்திருக்கிறார்களா என்றால் இல்லை.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அம்மா முதலமைச்சராக இருக்கின்ற காலத்தில், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் மறைவுக்குப்பிறகு நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை, முடிவுற்ற திட்டப்பணிகளை இப்போது இருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் ரிப்பன் பெட்டி திறந்து வைத்துக்கொண்டிருக்கிறார். இதுதான் இந்த ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு இந்த ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தான் நடந்து கொண்டிருக்கிறது என்பது என்னை விட இங்கே கூடியிருக்கின்றவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.
இப்போது இருக்கின்ற முதலமைச்சர் எந்த புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. துவக்கி வைக்கவும் இல்லை. ஏற்கனவே அம்மா அரசு கொண்டு வந்த முடிவுற்ற திட்டப்பணிகளை தான் இன்றைய முதலமைச்சர் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு விழா எடுத்து கொண்டிருக்கிறார்.
கோயம்புத்தூரில் நடந்த கூட்டத்தில் பேசிய இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் திட்டங்கள் எல்லாம் முடங்கிப்போய் இருக்கின்றது என்கிறார். நடப்பது அவர்கள் ஆட்சி என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்.
திட்டங்களை கொண்டு வந்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அம்மாவுடைய அரசு. அந்த திட்டங்களில் பல முடிவுறாமல் இருக்கின்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் என்பதற்காகவே பல திட்டங்களை முடக்கியுள்ளார்கள்.
தற்போது, அம்மா அரசு கொண்டுவந்த பல திட்டங்கள் முடங்கிப்போய் இருக்கின்ற நிலையைத்தான் நாம் இப்போது பார்க்கின்றோம். அம்மா அரசு கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க அரசு முடக்கும் வேலையைத்தான். தற்போது செய்து கொண்டிருக்கின்றது என்பதை தான் நான் சுட்டி காட்டுகின்றேன். இதைக்கூட புரிந்துகொள்ள முடியாமல் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் திட்டங்கள் எல்லாம் முடங்கிப்போய் இருக்கின்றது என்று பேசுகிறார்.
நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் முடக்காமல் சரியான முறையில் செயல்படுங்கள். நாங்கள் மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் இந்த அரசால் முடங்கி போயிருக்கின்றன. அதேபோல், அம்மா அரசு இருந்தபோது திருச்சி மாவட்டத்தில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றோம். நிறைவேற்றித் தந்திருக்கின்றோம்.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இருந்த கதவணை உடைந்த போது, உடனடியாக 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான தடுப்பணையை கட்டிக்கொண்டிருக்கின்றோம்.
அதை நீங்கள் (தி.மு.க. அரசு) பார்க்கத்தான் முடியும். அந்த திட்டத்தை கொண்டு வந்தது நாங்கள். இந்த பணியையாவது வேகமாக நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்.
அதேபோல், அய்யன் பாலத்தை 85 கோடி ரூபாயில் நாங்கள் தான் கட்டி முடித்து இருக்கின்றோம். சத்திரம்பேருந்து நிலையம்-சென்னை வழிச்சாலையை இணைக்கும் திருவானைக்கோவில் ரயில்வே மேம்பாலத்திற்கு சுமார் 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, திட்டத்தை நிறைவேற்றியதும் அம்மா அரசு.
அதேபோல், சென்னையிலுள்ள நேப்பியர் பாலத்திற்கு இணையாக திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூபாய் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டி கொடுத்ததும் அம்மாவுடைய அரசாங்கம்.
ஓடத்துறை ரயில்வே மேம்பாலம் ரூ. 30 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் தொழில் பூங்கா 43 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை அம்மாவுடைய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.
“ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் சத்திரம் பேருந்து நிலையத்தில் சுமார் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நிறைவு பெற்றுள்ளது.
இப்படி அம்மா அரசால் துவங்கப்பட்ட சீர்மிகு திட்டங்களை எல்லாம் தற்பொழுது விடியா அரசு திறந்து வைத்து வருகிறது. இந்த திட்டத்தை எல்லாம் இந்த விடியா அரசாங்கம் தான் செய்த மாதிரி இன்றைக்கு காட்டிக்கொண்டிருக்கிறது. இவைகள் எல்லாம் அம்மாவுடைய அரசால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஆகும்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் முக்கொம்பு வரை 11 கிலோ மீட்டர் கரூர் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தேன்.
ஆனால் இந்த விடியா அரசு இன்றுவரை இந்த பணியை துவக்கவில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு இருக்கிறார்கள். அந்த திட்டத்தையும் துவக்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள்.
திருச்சி அரிஸ்டோ பாலம் சுமார் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணி முடிக்கப்பட்டு திருச்சி-திண்டுக்கல்-மதுரை சாலைகள் இணைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. திருச்சி துவாக்குடியில் இருந்து ஜீயபுரம் வரை ரூபாய் 123 கோடி ரூபாயில் சாலைப்பணி நடைபெற்று கொண்டிருக்கின்றது. அந்த பணியையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று இந்த நேரத்தில் இந்த விடியா அரசை கேட்டுக்கொள்கின்றேன்.
நவலூர்குட்டப்பட்டில் தேசிய சட்டப்பள்ளியை அம்மா அரசு உருவாக்கி கொடுத்திருக்கிறது. அதேபோல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மணிகண்டம் சேதுரப்பட்டியில் மகளிருக்காக வேளாண் ஆராய்ச்சி பல்கலைக்கழகம், பாலிடெக்னிக் கல்லூரி, சேதுராப்பட்டி பொறியியல் கல்லூரி, மணிகண்டம் சர்வதேச தகவல் தொழில்நுட்ப கழகம், ஐ.ஐ.டி, தமிழ்நாடு காகித தொழிற்சாலை, வண்ணத்துப்பூச்சி பூங்கா, ஸ்ரீரங்கத்தில் யாத்திரி நிவாஸ், ஸ்ரீரங்கத்தில் உள் விளையாட்டு அரங்கம். இவைகள் எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு கொண்டுவந்த திட்டங்கள் ஆகும்.
ஆனால், தி.மு.க எத்தனை திட்டங்களை கொண்டு வந்தார்கள். ஆனால், எப்பொழுது பார்த்தாலும் அண்ணா தி.மு.க ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்தில் மட்டும் தான் நான் முதலமைச்சராக இருக்கின்ற பொழுது செய்த பணிகளை இங்கே குறிப்பிட்டேன். இப்படி எவ்வளவோ முக்கிய திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றோம்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.