இயக்கத்திற்கு துரோகம் செய்ய நினைப்பவர் அம்மாவுக்கு எப்படி விசுவாசியாக இருப்பார்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசம்
திருச்சி
தி.மு.க.வோடு கைகோர்த்துக்கொண்டு கட்சியை அழிக்க பார்க்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்ய நினைத்து கொண்டிருப்பவர் எப்படி அம்மாவுக்கு விசுவாசியாக இருக்க முடியும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசமாக கூறி உள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி வருகை தந்த எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி விமானநிலையம் எதிரே உள்ள வயர்லெஸ் ரோட்டில் நடைபெற்ற பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியதாவது:-
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கட்டிக்காத்த இயக்கம். மக்களுக்காக பாடுபடுகின்ற இயக்கம். மக்கள் சேவையே நம்முடைய பிரதான கொள்கை என செயல்பட்டு கொண்டிருக்கின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் உள்ள சிலபேர் வேண்டுமென்றே திட்டமிட்டு திராவிட முன்னேற்ற கழகத்தோடு கூட்டணி போட்டு, கைகோர்த்து கொண்டு அண்ணா.தி.மு.கவை பிளவுபடுத்த எண்ணுகிறார்கள். அவர்களுடைய கனவு ஒருபோதும் நிறைவேறாது.
நானும் ஒரு தொண்டனாக இருந்து உங்கள் முன் பேசுகின்ற நல்ல வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறீர்கள். நான் ஒரு பெரிய தலைவனாக இருந்து வரவில்லை. இந்த இயக்கத்திற்கு பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தலைவராக இருந்தார்.
அதற்கு பிறகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா இருந்தார்கள். இந்த இரு தெய்வங்களும் சென்ற அந்த பாதையிலே, இருவருடைய ஆசியோடு உங்களோடு நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன். சிந்தித்து பாருங்கள். சில பேர் பேசுகிறார்கள். அவருக்கு உயர்ந்த பதவியை கொடுத்தோம்.
எங்களோடு இணைகின்ற பொழுது அவர்களுடன் வெறும் 10 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களும், 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் இருந்தார்கள். நம்முடைய நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒன்றாக இணைய வேண்டும் எண்ணினார்கள். அந்த எண்ணத்தை நிறைவேற்றிட நாம் இணைத்தோம். இன்றைக்கு நிலைமை என்ன? மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையாக ஆகிவிட்டது.
எண்ணிப்பாருங்கள். அவர் சொன்னார் அம்மாவுடைய அரசாங்கத்தை காப்பாற்றினேன் என்று. எந்த அரசாங்கத்தை காப்பாற்றினீர்கள். நான் முதலமைச்சராக இருக்கின்ற பொழுது அம்மா அரசாங்கத்தை உருவாக்கி வைத்து விட்டு சென்றார்கள். நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தது.
அப்போது அம்மாவுடைய அரசாங்கத்தை எதிர்த்து ஓட்டு போட்டவர் (ஓ.பன்னீர்செல்வம்) எப்படி அம்மாவுடைய அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருந்தேன் என்று சொல்கிறார். நாம் தான் விசுவாசமாக இருந்தோம்.
வெளியில் போனவரை அழைத்து வந்து பெரிய பதவி கொடுத்து, துணை முதலமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தோம். அந்த நன்றியை கூட மறந்து விட்டார். இவர் எப்போது பார்த்தாலும் அம்மாவுடைய விசுவாசி, அம்மாவுடைய விசுவாசி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.
எப்படி அவர் அம்மாவோட விசுவாசியாக இருக்க முடியும். கழகம் இரண்டாக பிளவுபட்ட போது 1989-ம் ஆண்டு அம்மா தன்னந்தனியாக நின்று அம்மா போடிநாயக்கனூரில் முதல் சட்டமன்ற தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். அம்மா போட்டியிடுகின்ற பொழுது அவரை எதிர்த்து போட்டியிட்டவர் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ஏஜெண்டாக இருந்தவர் தான் அவர். அவர் எப்படி அம்மாவுக்கு விசுவாசமாக இருந்திருக்க முடியும்.
நாங்கள் அம்மாவுடன் இருந்தோம். அப்போது எடப்பாடியில் நான் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். 1984-ம் ஆண்டு முதல் இன்று வரை அணி மாறாமல், கட்சி ஆட்சி இருந்தாலும், இல்லாவிட்டாலும் சோதனை வந்தாலும், வேதனை வந்தாலும் தாங்கி இன்று வரை அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டனாக இருந்து பாடுபட்டு கொண்டிருக்கின்றேன்.
ஆனால், இந்த இயக்கத்திற்கு அவர் துரோகம் நினைத்துக்கொண்டு இருக்கின்றார். அதை நீங்கள் கண்டு கொள்ளுங்கள். இன்றைக்கு ஒன்றாக இணைவோம் என்று சொல்கிறார். எப்படி இணைய முடியும்? உங்களுக்கு கொடுத்தது உயர்ந்த பதவி. முதலமைச்சர் பதவியையும் அனுபவித்தார்.
துணை முதலமைச்சர் பதவியையும் அனுபவித்தார். எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும் இருந்திருக்கிறார். இந்த நிலையில் இவர் டெம்போ ட்ராவல் வண்டியில் தலைமை தாங்கி ரவுடிகளையும், வில்லிகளையும், குண்டர்களையும், காவல்துறையினரோடு இணைந்து புரட்சித்தலைவர்,
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் தொண்டனுக்கு கொடுத்த தலைமைக்கழக அலுவலகத்தை, எம்.ஜி.ஆர் மாளிகையை, அந்த மாளிகையில் உள்ள கேட்டை இவர் முன்னிருந்து உடைக்கிறார். கதவை உடைக்கிறார். அம்மா அறை கதவை காலால் எட்டி உதைத்து உடைக்கிறார்கள்.
அங்கே இருக்கின்ற பொருட்களை எல்லாம் எடுத்து வந்து தீயிட்டு கொளுத்துகிறார்கள். அங்கே இருந்த கம்ப்யூட்டர்களை எல்லாம் அடித்து நொறுக்கிறார்கள். அங்கே இருந்த முக்கியமான ரெக்கார்டுகளை எல்லாம் திருடிகொண்டு போயிட்டார்கள். இவர் எப்படி நம்முடன் இணைய முடியும்.
இந்த இயக்கத்தை காக்கின்ற பொறுப்பில் இருக்கக்கூடியவர். யாராவது தப்பு செய்தால் தட்டி கேட்கின்ற நிலையில் இருக்கின்றவர். அவரே முன்னின்று இந்த கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டால் எப்படி தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். கேட்டால் எடப்பாடி பழனிசாமி விட மாட்டார் என்று சொல்கிறார்கள்.
ஆனால், நான் அப்படி நினைக்கவே இல்லை. நான் தொண்டர்களை போல் இருந்து மேலே வந்தவன். எனவே, யார் கட்சிக்கு விசுவாசமாக இருக்கின்றார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும். நான் கட்சியை உயிராக நினைத்து கொண்டிருக்கின்றேன். இவரை போல் வியாபாரம் செய்யவில்லை.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்காக பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தொண்டனுக்கு கொடுத்த அந்த மாளிகையின் உள்ளே புகுந்து நீங்கள் இவ்வளவு பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தினீர்கள். அதை எப்படி தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. ஏனென்றால் இங்கே இருக்கின்றவர்கள் எல்லாம் கட்சிக்காக உழைக்கின்றவர்கள். கட்சியை நேசிக்கக்கூடியவர்கள்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் உருவாக்கி கட்டிக்காத்த கட்சி. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கின்ற தொண்டர்கள் நம்மிடத்தில் இருக்கின்றார்கள்.
ஆகவே, இன்றைக்கு தி.மு.கவோடு கூட்டணி வைத்துக்கொண்டு இன்றைக்கு இந்த கட்சியை பிளவுப்படுத்தி, கட்சியை சிறுமைப்படுத்தி அழிக்க நினைக்கின்றவர்களுக்கு நீங்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.