எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்

சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா சு.ரவி எம்.எல்.ஏ. சூளுரை
ராணிப்பேட்டை
மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர் என்றும், எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி எம்.எல்.ஏ பேசி உள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் கலவை பேருந்து நிலையம் அருகே
பேரூராட்சி கழக செயலாளர் கே.ஆர்.சதீஷ் தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர்கள் சொரையூர் எம்.குமார், ந.வா.கிருஷ்ணன், எஸ்.அன்பழகன், என்.சாரதி, நகர கழகச் செயலாளர் ஜிம்.எம்.சங்கர், பேரூராட்சி கழக செயலாளர்கள் ராமசேகர், கந்தசாமி ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்எல்ஏ, கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், தலைமை கழக பேச்சாளர் ராசகோபால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்எல்ஏ பேசியதாவது:-
ஆற்காடு சட்டமன்ற தொகுதி என்றுமே கழகத்தின் கோட்டை. விரைவில் பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் கழகம் வெற்றி பெறும். அண்ணா இல்லை என்றால் தமிழ்நாடு இல்லை.
ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த சாமானியன் எம்எல்ஏ, எம்பி உள்ளிட்ட உயர்ந்த பதவிகளுக்கு வர வேண்டும். ஏழை எளியவர்களின் கஷ்டங்கள் சாமானிய மக்களுக்கு தான் தெரியும். பேரறிஞர் அண்ணா அரசியல் கட்சியை துவக்கி சாமானிய தொண்டர்களை தேர்தலில் போட்டியிட வழிவகை செய்து
வெற்றி பெற்றவர்களுக்கு எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் பதவிகளை வழங்கி அழகு பார்த்தார்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தமிழகத்தில் பொற்கால ஆட்சியை நடத்தினார். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற கோட்பாட்டில் வாழ்ந்தார். வாரிசு அரசியலை எதிர்த்தார்.
பேரறிஞர் அண்ணா மறைவிற்கு பிறகு தீயசக்தி கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சரானார். அண்ணாவின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு திமுக கட்சியை குடும்ப கட்சியாக மாற்றினார். கருணாநிதிக்கு பிறகு அவருடைய மகன் ஸ்டாலின் இன்று முதலமைச்சராக உள்ளார்.
இன்று தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கின்றது. ஸ்டாலின் குடும்பத்தில் உள்ள அனைவருமே முதலமைச்சராக நினைத்து செயல்படுகின்றனர். காவல்துறை யார் கட்டுப்பட்டு உள்ளது என்பதே தெரியவில்லை. குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் முதலமைச்சர் தான்.
ஸ்டாலின் ஆட்சியில் விவசாயிகள் கண்ணீர் சிந்துகின்றனர். மாவட்டத்தில் 33 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என அறிவித்து இதுவரை ஒரு நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கவில்லை. அதனால் விவசாயிகள் நெல் தானியங்களை தனியாருக்கு குறைந்த விலையில் விற்கின்றனர். மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சியை தமிழக மக்கள் தூக்கி எறிய தயாராகி விட்டனர்.
கழக ஆட்சியில் தான் கலவை பேரூராட்சிக்கு விடிவு காலம் பிறந்தது. முன்னாள் முதலமைச்சர்
எடப்பாடி கே.பழனிசாமி கலவை பேரூராட்சியில், தனி தாலுக்கா உருவாக்கி அதற்கான கட்டிடமும் கட்டிக் கொடுத்தார் . பின் தங்கிய மாவட்டமாக இருந்த வேலூர் மாவட்டத்தை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாக பிரித்து கொடுத்தார்.
வளர்ச்சி திட்டங்கள், பணிகள் விரைவாக மக்களுக்கு சென்று சேர வேலூர் மாவட்டத்தை மூன்று மாவட்டங்களாக உருவாக்கினார். கழக ஆட்சியில் சென்னையில் கட்டி முடிக்கப்பட்ட வேளச்சேரி மேம்பாலம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்று வரை திறக்கவில்லை.
காரணம் கேட்டால் பாலத்திற்கு சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருக்கின்றோம் என்று சொல்கிறார்கள். கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மாவின் மக்கள் நலன் பயக்கும் திட்டங்கள் அனைத்திற்கும் ஸ்டாலின் மூடு விழா நடத்தி கொண்டிருக்கின்றார்.
அறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா,
எடப்பாடியார் ஆகியோர் பின்பற்றி சிறப்பாக ஆட்சி செய்தனர். அண்ணாவின் பெயரில் கட்சியை துவக்கி, கழக கொடியில் அறிஞர் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடும் உரிமையும், தகுதியும் கழகம் என்ற பேரியக்கத்திற்கு மட்டும்தான் உள்ளது. அம்மாவின் ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அமைப்போம் என்று அனைவரும் சபதம் ஏற்போம்.
இவ்வாறு ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ பேசினார்.