தற்போதைய செய்திகள்

தி.மு.க. உதவியுடன் அரசியல் செய்கிறார் ஓபிஎஸ் -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை,

யாருடைய செல்வாக்கும் இல்லாமல், தி.மு.க. உதவியுடன் தான் ஓ.பி.எஸ். இன்றைக்கு அரசியல் செய்கிறார். துரோகம் செய்வதில் அவர் கை தேர்ந்தவராக இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி: ஓ.பி.எஸ். குறித்து

பதில்: இதயதெய்வம் அம்மா அவர்களின் மறைவிற்கு பின்பு ஓ.பி.எஸ். தர்ம யுத்தம் நடத்தினார். அப்போது கட்சி ஒன்றிணைவதற்காக நான் வகித்த நிதித்துறை இலகாவை விட்டு கொடுத்தேன். ஆனால் ஓ.பி.எஸ்., ஒரு கூட்டத்தில் எனக்கு அமைச்சர் பதவி இவர் கொடுப்பதா என்று கேட்டார். நான் கேட்கிறேன் “இப்படி சொல்பவர் ஏன் ஒன்றாக இணைந்த பின்பு அந்த பதவியை வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமே?”

மேலும் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை என்ற துறை மற்றம் அரசு கருவூலம் என இரண்டு துறைகள் என்னிடம் இருந்தன. அதையும் கேட்டார். நாங்களும் கொடுத்து விட்டோம். அதோடு நின்று விடவில்லை உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இருந்த வீட்டு வசதி துறையையும் கேட்டார் அதையும் கொடுத்தோம்.

ஆனால் இன்றைக்கு ஓ.பி.எஸ். சத்தியம் தவறாத உத்தமர் போல் நடிக்கிறார். இந்த உத்தமரை இனி மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள். வெறும் பொய் பேசுகிறார். தி.மு.க.வுடன் மறைமுகமாக கூட்டணி வைத்து செய்த தவறுகளையும் எல்லாம் மறைக்கிறார்.

ஓ.பி.எஸ்சை பொறுத்தவரை ஒரு நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறாரா என்றால் இல்லவே இல்லை. அம்மாவின் அரசு தோற்க வேண்டும் என்பதற்காக சட்டமன்றத்தில் வாக்களித்தவர் ஓ.பி.எஸ். இதை யாராவது செய்வார்களா?

இவரது மகன் ரவீந்திரநாத் மு.க.ஸ்டாலினை பார்த்து தொகுதி வளர்ச்சி சம்பந்தமாக எதாவது மனு கொடுத்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மிகுந்த அர்ப்பணிப்புடன் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்று பாராட்டியுள்ளார். அவருக்கு இவர் இப்படி சர்ட்டிபிகேட் தந்திருக்கிறார்.

சட்டமன்ற தேர்தலில் ஓ.பி.எஸ். தனது மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய 2 தொகுதியில் வேட்பாளர்களை வெற்றிபெற வைக்கவில்லை. அதேநேரம் அந்த 2 தொகுதியிலும் ரவீந்திரநாத் மட்டும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார்.

அதேபோல் 2021 சட்டமன்ற தேர்தலில் தனது மாவட்டத்தில் இவர் மட்டுமே தான் ஜெயிக்கிறார். தன்னுடைய மாவட்டத்தில் மற்றவர்களை வெற்றிபெற வைக்க முடியவில்லை என்றால் ஒருங்கிணைப்பாளருக்கு இதை விட மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருப்பார்கள்.

இவரிடம் (ஓ.பி.எஸ்.) 10, 15 பேர் தான் தற்போது இருக்கிறார்கள். தனது பண்ணை வீட்டில் நடத்திய கூட்டத்தில் மொத்தமே 50 பேர் தான் கலந்து கொண்டார்கள். அதே வேளையில் எடப்பாடியார் செல்லும் போது எந்த அளவிற்கு மக்கள் வெள்ளம், எழுச்சி இருப்பதை டி.வி.யில் கண்கூடாக காண முடிகிறது அல்லவா?

எனவே இவற்றையெல்லாம் மறைத்து விட முடியாது. ஓ.பி.எஸ். யாருடைய செல்வாக்கும் இல்லாமல், தி.மு.க.வின் உதவியுடன் தான் இன்றைக்கு அரசியல் பண்ணுகிறார். மேலும் துரோகம் செய்வதில் கைதேர்ந்தவராக இருக்கிறார்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.