தற்போதைய செய்திகள்

கழக ஆட்சியை மீண்டும் அமைப்போம்-துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன் சூளுரை

திண்டுக்கல்

விடியா திமுக அரசை அகற்றுவோம், அம்மாவின் ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கொண்டு வருவோம் என சூளுரை எடுத்துக்கொள்வோம் என்று கழக துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன் பேசினார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கூட்டம் நடைபெற்றது. நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு துணைத் தலைவருமான யாகப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி ஆகியோர் தலைமை வகித்தனர்.

கழக அம்மா பேரவையின் மாநில இணை செயலாளர் ஆர்.வி.என் கண்ணன், நிலக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தேன்மொழி சேகர், நிலக்கோட்டை ஒன்றியக்குழுத்தலைவர் ரெஜினா நாயகம், வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர்கள் மோகன், பாண்டியன், அம்மையநாயக்கனூர் பேரூர் கழக செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி உதயகுமார் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் கழக துணை பொது செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் சிறப்புரையாற்றுகையில் பேசியதாவது:-

இன்றைய திராவிட மாடல், ஒன்றிய அரசு என்று பல்வேறு வார்த்தை ஜாலங்களை சொல்லி தி.மு.க மக்களை ஏமாற்றுகிறது. திராவிட இயக்கத்தை ஆளுமை இயக்கமாகவும், மக்கள் இயக்கமாகவும் கொண்டு வந்த சக்தி அண்ணாவுக்கு சேரும். அண்ணாவின் உயிரோட்டமான ஆற்றல் மிக்க பேச்சாற்றலும், தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தை பேரியக்கமாக வளர அரும்பாடுபட்டு முதலமைச்சரானார்.

அந்தத் தருணத்தில் கரையான் புற்று வளர்க்க கருநாகம் புகுந்தது போல் திமுகவிற்கு திருக்குவளையை சேர்ந்த கருணாநிதி கட்சிக்கு வந்து திமுகவை சொந்த கட்சியாக மாற்ற முயற்சி செய்தது விளைவாக தான் அ.தி.மு.க உருவானது.

அதேபோன்று தமிழ்நாடு என்ற பெயர் வருவதற்கு காரணம் பேரறிஞர் அண்ணா தான் காரணம். ஆனால், தமிழ்நாடு என்ற பெயர் வருவதற்கு காரணம் கருணாநிதி தான் என இன்றைய முதல்வர் வரலாற்றை எப்படியாவது அண்ணாவின் புகழை மூடிமறைக்க சூழ்ச்சி செய்து வருகிறார்.

தற்காலிகமாக தி.மு.க வெற்றி பெற்று உள்ளது. அதுவும் தேர்தலின் போது குடும்பத்தலைவிக்கு மாதம்தோறும் ரூ. 1000, நீட் தேர்வு ரத்து, வரி குறைப்பு, கல்வி கடன், மின்கட்டணம் குறைப்பு, சொத்து வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உருவாக்கி வசதியை ஏற்படுத்துவோம் என பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியில் அமர்ந்துள்ளது.

அதேபோன்று தாலிக்கு தங்கம், லேப்டாப், கருவுற்ற தாய்மார்களுக்கு பரிசுப்பெட்டகம், இப்படி புரட்சித்தலைவி அம்மா பெயரில் கழக அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விட்டது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொதுமக்களுக்கு வரிச்சுமையை ஏற்படுத்தி வருகிறார்கள்.

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் தேர்தல் வாக்குறுதிகள் 425ஐ நிறைவேற்றி விட்டதாக சட்டமன்றத்தில் திமுக அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் பொய் பேசினார்கள்.

அப்படி திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தற்போது தமிழகமெங்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை, கள்ளக்குறிச்சி சம்பவம், பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவ-மாணவிகள், உள்பட எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதை மாத்திரை, உள்ளிட்ட பல்வேறு போதை மாநிலமாக தற்போது தமிழ்நாடு மாறி கொண்டிருக்கிறது.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. இந்த விடியா அரசை அகற்றுவோம். புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கொண்டு வருவோம் என சூளுரை எடுத்துக் கொள்வோம்.

இவ்வாறு கழக துணை பொது செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் பேசினார்.