தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்கள், மக்களுக்கு நெற்றியில் பூச நாமக்கட்டியை வழங்கியிருக்கிறார் ஸ்டாலின்

வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கடும் தாக்கு

வேலூர்

அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் நெற்றியில் பூசிக்கொள்ள நாமக்கட்டியை தான் ஸ்டாலின் வழங்கியுள்ளார் என்று வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பேசி உள்ளார்.

வேலூர் மாநகர் மாவட்டம், காட்பாடி தொகுதி கழக சார்பில், காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அருகில் காட்பாடி வடக்கு பகுதி கழக செயலாளர் பி.ஜனார்த்தனன் தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ்.சுபாஷ், எஸ்.சின்னதுரை, கே.ஸ்ரீசைலம், பகுதி கழக செயலாளர்கள் பி.நாராயணன், எ.இரவி, பேரூராட்சி கழக செயலாளர் எம்.ஜெயராமன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

இக்கூட்டத்தில் வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி.ம.ராசு, கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் டாக்டர் சுனில், தலைமை கழக பேச்சாளர்கள் நடிகை வி.ஆர்.ஜெயதேவி, எம்ஜிஆர். பாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் திமுக அமைச்சர் துரைமுருகன் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் காட்டாட்சி நடைபெற்று கொண்டிருகிறது. காவல்துறை விடியா அரசின் ஏவல் துறையாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது.காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலை விஐடி பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்டது.

ஆனால் திமுகவினர் அண்ணாவின் சிலைக்கு உரிமை கொண்டாடுகின்றனர். அண்ணா அனைவருக்கும் சொந்தமானவர். காவல்துறை அதிகாரிகள் திமுக அமைச்சர் துரைமுருகனுக்கு விசுவாசமாக இருக்கலாம்.

ஆனால் நடுநிலையாக செயல்படுங்கள். காட்பாடியில் உள்ள டிஎஸ்பி கழகத்தினருக்கு அதிகமான இன்னல்களை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றார். கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கடிதத்தை உதவி ஆய்வாளர், காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் வழங்கியுள்ளனர்.

ஆனால் திமுக அமைச்சர் துரைமுருகன் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினர் அனுமதி வழங்காமல் கழகத்தினரை பலமுறை அலைக்கழித்துள்ளனர். காவல்துறையை எப்போதுமே மதிக்கும் இயக்கம் கழகம் என்ற பேரியக்கம்.

ஆனால் அதற்காக தலைகுனிந்து செல்ல மாட்டோம். கொரோனா காலத்தில் தி.மு.க அமைச்சர் துரைமுருகன், தி.மு.க. எம்பி கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்துடன் ஏலகிரி மலையில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, அவர்களுக்கு சொந்தமான மாளிகையில் பாதுகாப்பாக தங்கி இருந்தனர்.

காட்பாடி பகுதியில் இருந்த மக்களை பற்றி திமுக அமைச்சர் துரைமுருகன் என்றுமே கவலைப்பட்டது கிடையாது. தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள ஏலகிரி மலையில் சென்று தங்கினார்.

ஆனால் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் காட்பாடி பகுதியில் இருந்த ஏழை எளிய மக்களை காப்பாற்றுவதற்கு தினம் தினம் இங்குள்ள கழக நிர்வாகியின் திருமண மண்டபத்தில் சமையல் செய்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உணவு வழங்கி பல்வேறு சேவைகளை செய்தனர். அதைப்பற்றி இப்பொழுது உள்ள டிஎஸ்பி மற்றும் மற்ற அதிகாரிகளுக்கு தெரியாது.

இப்பகுதியில் உள்ள காவல்துறையினர் திமுக அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு விசுவாசமாக உள்ளதை பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. ஆனால் அடிமையாக இருக்க கூடாது. காட்பாடி, சத்துவாச்சாரி, நெமிலி உள்ளிட்ட பகுதிகளில் ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு மேல் பண மோசடி நடைபெற்றுள்ளது. இந்த ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் பண மோசடி செய்தவர்களை தப்பிக்க வைத்தது காவல்துறை சார்ந்த அதிகாரிகள் தான். ஆகவே வேலியே பயிரை மேய்ந்துள்ளது.

தேர்தல் நேரத்தில் பெண்களுக்கு வழங்க வேண்டிய உரிமை தொகை ரூபாய் 1000, முதியோர் உதவித்தொகை ரூபாய் 1500, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், கல்வி கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, கேஸ் மானியம் ரூபாய் 100, மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றார்.

அவர் மேக்கப் போடுவதற்கே நேரம் போதவில்லை. ஸ்டாலின் சூட்டிங் அரசியல் அரசியல் செய்து கொண்டிருக்கின்றார். அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் நெற்றியில் பூசிக்கொள்ள நாமக்கட்டியை தான் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

காட்பாடி மேம்பாலம் விவகாரத்தில் என்னுடைய தலைமையில் கழகத்தினர் அறவழியில் போராட்டம் நடத்தினர். ஆனால் திமுக அமைச்சர் துரைமுருகன், திமுக எம்பி கதிர்ஆனந்த் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் எங்கள் மீது பொய் வழக்குகளை சுமத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கழகத்தினரை பழி வாங்கும் செயலை விடியா திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். என்னுடைய வீட்டில் என்னை காவல்துறையினர் கைது செய்ய வரும்பொழுது கேட்டை உடைத்துக்கொண்டு அனைவரும் பூஜை அறை உட்பட அனைத்து இடங்களிலும் ஷூ காலுடன் வந்து சோதனை செய்து என்னை கைது செய்தனர்.

திமுக அரசு காவல்துறை உதவியுடன் கழகத்தினரை மிரட்டி பார்க்கின்றனர். இதற்கெல்லாம் அதிமுக தொண்டர்கள் அஞ்ச மாட்டார்கள். திமுகவினரின் பொய் வழக்குகளை சந்திக்க கழகத்தினர் தயாராக உள்ளனர். இன்று தமிழ்நாட்டில் ஸ்டாலின் உட்பட ஐந்து முதலமைச்சர்கள் உள்ளனர்.

ஸ்டாலின் குடும்பத்தில் உள்ள அனைவருமே தமிழகத்தின் முதலமைச்சராக திகழ்கின்றனர். சபரீசன், உதயநிதி ஸ்டாலின், செந்தாமரை, கனிமொழி ஆகியோர் முதலமைச்சராக செயல்படுகின்றனர். உதயநிதி ஸ்டாலினின் இளைஞர் நற்பணி மன்றத்தை கண்காணிக்கவே கல்வித்துறை அமைச்சருக்கு நேரம் போதவில்லை.

காட்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிவறை வசதி இல்லை, விளக்கு வசதி இல்லை. இதனால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கழக ஆட்சியில் நான் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இருக்கும் பொழுது, பள்ளிக்கு கழிவறை, விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தேன்.

ஆனால் திமுக அமைச்சர் உள்ள இப்பகுதியில் இவ்வாறு அடிப்படை வசதிகள் இல்லாமல் அரசு பள்ளிகளில் இருப்பது வேதனையாக உள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளியில் நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட போது மின்வெட்டு ஏற்பட்டது.

அதனால் திமுக அமைச்சர் துரைமுருகன் தூண்டுதலின் பேரில், மின்சார ஊழியர்கள் இரண்டு பேர் ரவிவர்மன், மாற்று திறனாளி ஊழியர் சிட்டிபாபு ஆகியோரை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தார்கள். திமுகவினர் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கையால் இரண்டு அரசு மின் ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு சாலை வசதி இல்லை என அவரே பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார். ஆகவே அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு திமுக அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு செல்லும் வழியில் தார்சாலை அல்லது சிமெணட் சாலை அல்லது பேவர் பிளாக் சாலை அமைத்து தர வேண்டும் என்று கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

விடியா திமுக அரசு மீது மக்கள் கடும் கோபமாக இருக்கின்றனர். சொத்து வரி, வீட்டு வரி பால் விலை, மின் கட்டணம் உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் கழகம் என்ற பேரியக்கம் அமோக வெற்றிபெற்று எடப்பாடியார் தலைமையில் மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி அமைவது உறுதி.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பேசினார்.