தற்போதைய செய்திகள்

சொத்து வரி, மின் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ளுங்கள் எனக்கூறுவதா?

ஸ்டாலினுக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

மதுரை

ஆட்சியில் இல்லையென்றால் ஒரு பேச்சு, இருந்தால் ஒரு பேச்சு பேசும் ஸ்டாலின் சொத்து வரி, மின் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ளுங்கள் எனக்கூறுவதா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரையில் காந்தியடிகள் அரை ஆடை புரட்சி நடத்தி 100 ஆண்டுகள் ஆன நிலையில் காந்தி அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் காந்தியடிகள் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் மலர் தூவி தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி விட்டு ராட்டையில் நூல் நூற்றார்.

இதன்பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எடப்பாடியார் உள்துறை அமைச்சரை சந்தித்து, நடந்தாய் வாழி காவேரி திட்டம், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும் என்றும், சட்ட ஒழுங்கு தமிழகத்தில் கேள்விகுறியாகி உள்ளது என்றும் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளார்.

ஆ.ராசாவின் பேச்சு மிகவும் அபத்தமான பேச்சாக உள்ளது. எந்தவொரு நூலிலும் பிறப்பால் பாகுபாடு உள்ளதாக கூறவில்லை. நாட்டிற்கு தேவையானவைகளை பேசாமல் ஆ.ராசா தேவையற்றவைகளை பேசி வருகிறார். ஆ.ராசாவின் பேச்சால் நாடு கொந்தளித்து இருக்கிறது.

முதலமைச்சர் அனைத்து மதத்திற்கும் பொதுவானவர். இதுவரை முதல்வர் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கவில்லை. திமுகவில் 90 சதவீதம் இந்துக்கள் உள்ளனர் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

அப்படி என்றால் அவர்களையும் சேர்த்து தான் அ.ராசா கூறி உள்ளாரா? அவர் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அவர் பேச யார் உரிமை கொடுத்தது. ஒருவேளை முதலமைச்சர் ஊதுகுழலாக அவர் பேசி உள்ளாரா என்ற கேள்வி தற்போது உருவாகி இருக்கிறது.

ஆ.ராசா சர்ச்சைக்குரிய பேச்சுக்கு குறித்து மன்னிப்பு கேட்கவில்லை. ஆ.ராசாவின் கருத்து ஒட்டுமொத்த திமுகவின் கருத்தாக தான் பார்க்க வேண்டும். எல்லா மதங்களும் அறநெறியை மட்டுமே போதனை செய்கிறது. ஆ.ராசாவை முதல்வர் கண்டிக்கவில்லை என்றால் திமுகவினர் அதற்குரிய தண்டனை பெறுவார்கள்.

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது மின் கட்டணத்தை ஏற்றாதே, சொத்து வரியை ஏற்றாதே என்று கூறினார். இப்போது முதலமைச்சர் ஆன பின் சொத்து வரி உயர்வை ஏற்றுக்கொள்ளுங்கள். மின் கட்டணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். ஆட்சி இல்லை என்றால் ஒரு பேச்சும், ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சும் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு உள்ளது. தட்டுப்பாட்டை நீக்கி காய்ச்சலை குறைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சொத்து வரியை செலுத்த வேண்டும் என்றால் சொத்தை விற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், பாரதி யுகேந்திரா செயலாளர் நெல்லை பாலு, நேதாஜி தேசிய இயக்கம் தலைவர் சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.