தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார்-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா உறுதி

மதுரை

தி.மு.க.வுக்கு அந்திம காலம் நெருங்கி விட்டது. தமிழகத்தில் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா கூறி உள்ளார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், மதுரை கிழக்கு தொகுதி கழகம் சார்பில் பேறிஞர் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் வண்டியூரில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் தக்கார் பாண்டி தலைமை தாங்கினார்.

மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பகுதி செயலாளர் வண்டியூர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் நிலையூர் முருகன், கார்சேரி கணேசன், வாசு என்ற பெரியணன், பகுதி செயலாளர்கள் கோபி, ஜீவானந்தம், மாவட்ட கலை பிரிவு செயலாளர் அரசு, ஒன்றிய துணைச்செயலாளர் கார்த்திகேயன், ஒத்தக்கடை ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் தனம்போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இந்த கூட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன்செல்லப்பா, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட கழக பொருளாளர் அம்பலம், மாவட்ட துணை செயலாளர் சந்திரன் மற்றும் முத்துகிருஷ்ணன், வண்டியூர் குமார், சேனாபதி, தினேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பேசியதாவது :-

எடப்பாடியாரை கழக இடைக்கால பொது செயலாளராக ஏற்றுக்கொண்டு இன்றைக்கு கழகம் எழுச்சியோடும், புத்துணர்வோடும் வெற்றி நடை போட்டு வருகிறது. அதனை தொடர்ந்து திராவிட இயக்கத்தை தோற்றுவித்த அண்ணாவின் பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் பொதுகூட்டங்களை நடத்தி அவருக்கு புகழை சேர்த்து வருகிறார் எடப்பாடியார்.

மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு இயக்கம் இந்த இயக்கம் தான் என்பதை உலகிற்கு எடுத்துச்சொல்லும் வகையில் இந்த இயக்கத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களும், எடப்பாடியார் ஆணைக்கிணங்க கழக ரீதியில் உள்ள 75 மாவட்டங்களிலும் தி.மு.க அரசின் மின் கட்டண உயர்வை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

சொத்து வரி, மின் கட்டணம் உயர்வால் தமிழகத்தில் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து என்று திட்டத்தை அறிவித்துள்ளனர். தற்போது மக்களுக்கு மேலும் ஒரு சுமையை வித்திடும் வகையில் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

அம்மாவால் கொண்டு வரப்பட்ட உன்னதமான திட்டமான தாலிக்கு தங்கம் திட்டத்தை தி.மு.க நிறுத்தி விட்டது. எடப்பாடியார் ஆட்சியில் கொண்டு வரப்பட்டு மூன்று லட்சம் மக்கள் பயன் பெற்ற இரண்டு சக்கர வாகன திட்டத்தை நிறுத்தி விட்டனர்.

அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர் அதனைத்தொடர்ந்து அம்மா உணவகம் ஆகியவற்றை படிப்படியாக மூடுவிழா காண்கின்றனர். அம்மா மினி கிளினிக்கை முடியதால் திமுக என்ன சாதித்தது?, எடப்பாடியார் ஆட்சியில் மக்களுக்காக இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 70,000 கோடி அளவில் நிதி ஒதுக்கப்பட்டது.

எதற்கெடுத்தாலும் இந்தியாவில் சிறந்த முதலமைச்சர் என்று இவரே கூறிக்கொள்கிறார். ஆமாம் மக்களின் நலத்திட்டங்களை பறித்து விட்டு மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒரே முதலமைச்சர் இந்தியாவில் ஸ்டாலின் தான் என்று இன்றைக்கு மக்கள் கூறி வருகின்றனர்.

மதுரையில் டைட்டல் பார்க் அமைய உள்ள இடம் புரட்சித்தலைவர் காலத்தில் நிரந்தர காய்கறி மார்க்கெட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கழக ஆட்சி காலத்தில் மதுரையில் டைட்டல் பார்க் அமைக்க அவனியாபுரத்தில் 13 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெயரளவில் ரூபாய் 600 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும் முதல்வர் அறிவித்துள்ளார். திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டி திறக்கப்பட்ட திட்டங்கள் ஏதும் உள்ளதா? தமிழக அரசின் தற்போதைய கடன் ஐந்தரை லட்சம் கோடியாக உள்ளது. தமிழக அரசு கடனில் தத்தளித்து வருகிறது. மதுரையில் டைட்டல் பார்க் கொண்டு வந்தால் திமுக மிக திறமையான கட்சியாகும். ஆனால் அவரால் செய்ய முடியாது.

தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வீட்டிலிருந்து வெளியே செல்லும் மாணவர் போதை பழக்கத்துடன் வீட்டுக்கு வருகிறார். ஓ.பி.எஸ் திமுகவுடன் கூட்டணி வைத்ததால் அவரை ஒதுக்கினோம்.

அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை வந்தால் நீதிமன்றத்துக்கு செல்லக்கூடாது என விதி உள்ளது. அதிமுக விதியை மீறி ஓ.பி.எஸ் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார். சிற்பம் வடிக்கும் போது ஒரு சில சிதறல்கள் உள்ளது போல அதிமுகவிலிருந்து ஒரு சிலர் வெளியே சென்றுள்ளனர்.

அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும். அ.தி.மு.க.வுக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் வீறு கொண்டு செயல்படும். திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொரு திசையில் இருப்பதால் திமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியாது.

திமுகவில் வாரிசு அரசியலால் மிகப்பெரிய பூகம்பம் வெடித்துள்ளது தற்பொழுது திமுக மூத்த நிர்வாகி சுப்புலட்சுமி ஜெகதீசன் தி.மு.க.வை விட்டு வெளியே வந்து விட்டார். சில சட்டமன்ற உறுப்பினர்களும், மூத்த நிர்வாகிகளும் உள்ளுக்குள் மனம் நொந்து உள்ளனர் அவர்களும் விரைவில் தி.மு.க.வை விட்டு வெளியே வருவார்கள்,

விளக்கு அணையும் போது பிரகாசமாக எரியும். அது போல் திமுக ஆட்சிக்கு வந்து விட்டோம் என்று உள்ளனர். ஆனால் இந்த ஆட்சியை தொடர முடியாது. ஏனென்றால் தி.மு.க.வுக்கு அந்திம காலம் நெருங்கி விட்டது. அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய பிரகாசமான எதிர்காலம் உருவாகி வருகிறது. நிச்சயம் வருகின்ற தேர்தல் காலங்களில் இந்த இயக்கம் மாபெரும் வெற்றிபெற்று மீண்டும் தமிழகத்தில் முதலமைச்சராக எடப்பாடியார் வருவார்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பேசினார்.