தற்போதைய செய்திகள்

சிஸ்டம் போட்டு திருடுவது திமுகவினரால் மட்டுமே முடியும் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசம்

விருதுநகர்,

ஆட்சியின் தவறுகளை கட்டுப்படுத்தும் இடத்தில் ஸ்டாலின் இல்லை என்றும் சிஸ்டம் போட்டு திருடுவது திமுகவினரால் மட்டுமே முடியும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறி உள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

ரேஷன் கடையில் மாமூல் வசூலிக்கின்றனர். மக்காச்சோளத்தையும் கேழ்வரகையும் போட்ட ஆட்சி திமுக ஆட்சி. சோத்துக்கே கஷ்டத்தை உருவாக்குகின்ற ஆட்சி தான் திமுக ஆட்சி. கலைஞருடைய மகன் தான் ஸ்டாலின் என்ன நல்லது செய்வார் என்று மக்கள் ஓட்டு போட்டார்கள் என்பது தெரியவில்லை.

ஆளும் திமுக கட்சியின் ஒரே நோக்கம் மணல் கொள்ளைய அடிக்க வேண்டும், மொத்தமாக சுருட்டி கொண்டு செல்ல வேண்டும் என்பது தான். வத்திராயிருப்பு பகுதியில் கண்மாய் கரையையே சுருட்டி செல்கின்றனர்.

மண்ணை தூர் வாருகின்றோம் என்று கூறி கண்மாய் கரையை எடுக்கின்றனர். ஒன்று மட்டும் உண்மை. விதைத்தது தான் முளைக்கும். விதைத்த இடத்தில் தான் விதையை தேட வேண்டும். தி.மு.க.வினர் செய்யும் தவறுகளுக்கெல்லாம் நாங்கள் அம்பலப்படுத்தி கொண்டு தான் இருக்கின்றோம். தகுந்த ஆதாரங்களோடு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.

யார் யார் பெயரில் லைசென்ஸ் உள்ளது. யார் யார் பெயரில் ரசீது போடுகின்றனர். எல்லா ஆவணங்களையும் வைத்து கோர்ட்டில் வழக்கு தொடர்வோம். சட்டத்துக்கு உட்பட்டு மணல் எடுக்க வேண்டும். மணல் கொள்ளையை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம். அரசு அதிகாரிகள் விழிப்போடு இருக்க வேண்டும். உப்பை தின்றால் தண்ணீரை குடித்தே ஆக வேண்டும். ஓட்டு போட்ட மக்களை தெருவில் நிற்க வைத்து விட்டு இந்த ஆட்சி அலங்கோலமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

ஆயிரம் ரூபாய் வீட்டு தீர்வை செலுத்தியவர்கள் எல்லாம் இன்று 2000 ரூபாய் செலுத்த வேண்டியதிருக்கிறது. வீட்டு வரி உயர்ந்ததால் வீட்டு வாடகையும் அதிகரித்து விட்டது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த கட்சியை எதற்கு ஆரம்பித்தார்.

மிட்டா மிராசுதாரர்களுக்காகவோ, ஆலை அதிபர்களுக்காகவோ, அம்பானி, அதானி வகைறாக்களுக்காகவோ கிடையாது. ஒட்டிய வயிறோடு, கிழிந்த சட்டையோடு இருக்கின்ற ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்காகவே அண்ணா தி.மு.க.வை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்தார்.

இந்த இயக்கம் இருக்கின்றவரை மக்களை பாதிக்கின்ற செயலை நாங்கள் அனுமதிக்கவே மாட்டோம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆதிமுகவின் எக்கு கோட்டை. வத்திராயிருப்பு பகுதிக்கு ஒரு வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வந்த அரசு எடப்பாடியார் அரசு. வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான்.

நாங்கள் கட்டிய அந்த அலுவலகத்தை திமுகவிவினர் திறந்து வைத்துள்ளனர். ஆளுங்கட்சிக்கு எதிராக எப்போதுமே ஒரு சைலண்டான எதிர்ப்பு அலை வீச தான் செய்யும். என்னதான் நல்லது செய்தாலும் ஒரு எதிர்ப்பு அலைகள் ஓடிக்கொண்டே தான் இருக்கும். பத்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சி நடத்தினாலும் எங்களுக்கு ஐந்து சதவீதம் எதிர்ப்புகள் தான் இருந்தது.

திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் 95 சதவீத எதிர்ப்புகள் எழுந்துள்ளது. திமுக ஆட்சி மீது மக்கள் வெறுத்துப்போய் உள்ளனர். டாஸ்மாக் பார்கள் அனைத்தும் கரூர்காரர்கள் பேரில் தான் செயல்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் எந்த திமுகவினர் பெயரிலும் பார் கிடையாது. தமிழகம் முழுவதிலும் இதே நிலை தான் உள்ளது. பாரை எடுத்து நடத்தும் திமுகவினர் கூட மாதம் மாதம் லஞ்சம் கொடுக்க வேண்டியது உள்ளது.

சிஸ்டம் போட்டு திருடுவது உலகத்திலேயே திமுகவினரால் தான் முடியும். நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கொடுக்கின்றனர். நியாயவிலைக்கடை ஊழியர்களை மிரட்டி தி.மு.க.வினர் பணம் பெறுகின்றனர்.

இதுபோன்ற செயல்கள் ஏழை, எளிய மக்களை தான் பாதிக்கும். பத்து ஆண்டு காலம் உழைத்த தி.மு.க.வினருக்கு எதுவுமே கிடைக்கவில்லை. சத்தம் போடாமல் திருடுகின்ற வேலையில் திமுக ஈடுபட்டுள்ளது. கையை உள்ளே விட்டு கடலையை மட்டும் திருடுகின்றனர். கடலை எடுக்கும் போது தான் வெறும் செடி வருகின்றது.

ஆட்சியின் தவறுகளை கட்டுப்படுத்தும் இடத்தில் ஸ்டாலின் இல்லை. அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் ஆட்சி அதிகாரம் அவரது கண்ட்ரோலில் கிடையாது. முதல்வரை சுற்றி மிகப்பெரிய வட்டம் ஒரு அதிகார மையம் செயல்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த நிலை மாற வேண்டும் என்று சொன்னால் ஒரு நல்ல அரசு வர வேண்டும்.

புரட்சிதலைவர் எம்ஜிஆர் அரசு, புரட்சித்தலைவி அம்மாவுடைய அரசு, எடப்பாடியார் ஆட்சி தமிழகத்தில் வந்தால் தான் ஏழை எளிய மக்கள் நிம்மதியாக வாழ முடியும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும்.

செங்கல் விலை, சிமெண்ட் விலை, மோட்டார் விலை விவசாய பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும். ஏழைகளை பற்றி தெரிந்த ஒருவர், கஷ்டத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் தான் முதலமைச்சராக வர வேண்டும். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி போல ஏழைகளை நேசிக்கின்ற எடப்பாடியார் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வர வேண்டும். அதற்கு எப்போது தேர்தல் வந்தாலும் வாக்காளர் பெருமக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் .

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.