திட்டங்கள் எதையாவது நிறைவேற்றினாரா ஸ்டாலின்

கழக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி
கிருஷ்ணகிரி
தேர்தல் அறிக்கையில் நிறைய வாக்குறுதிகளை கூறினார். ஆனால் திட்டங்கள் எதையாவது நிறைவேற்றினாரா ஸ்டாலின் என்று கழக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்
நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.
நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கண்ணியப்பன், ரவி, சைலேஷ் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி தொடர்பாளர் சமரசம், தலைமை கழக பேச்சாளர்கள் சபாபதி, ரவி, வெங்கட்ராமன், ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இந்த பொதுக்கூட்டத்தில் கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ பேசியதாவது:-
இந்திய துணை கண்டத்திலேயே கல்வியில் முன்னேற்றம், தொழில் உற்பத்தி என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார். தன்னிடம் அரசியல் பாடம் பயின்ற மாணவனான அண்ணாவை அரசியலுக்கு அழைத்து வந்த பெரியாரின் பகுத்தறிவு சிந்தனையை மாநிலம் முழுவதும் எடுத்து செல்ல 1949ம் ஆண்டு பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ல் திமுகவை தொடங்கினார்.
1956ல் திருச்சி மாநாட்டில் தேர்தலில் போட்டியிட கட்சியினரிடம் கருத்துக்கேட்டார் அண்ணா. 1957ல் 15 எம்எல்ஏக்களையும், 1962ம் ஆண்டு 50 எம்எல்ஏக்களும் கட்சிக்கு கிடைத்தனர். பின்னர் 1967ல் பெரும்பான்மையோடு ஆட்சி செய்தார்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி, ஒருசில மாநிலங்களில் தேசிய கட்சியான கம்யூனிஸ்ட் ஆட்சி செய்தபோது இந்தியாவிலேயே மாநில கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய மாநிலம் தமிழகம், அதுமட்டுமல்லாமல் உலகிற்கே கூட்டணி என்பதை அறிமுகம் செய்து வைத்தவர் பெருந்தகை அண்ணா. 1967 முதல் இன்று வரை 53 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட கட்சிகளை தவிர்த்து தேசிய கட்சிகளால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.
மதராஸ் ஸ்டேட் என இருந்த நம் மாநிலத்தை தமிழ்நாடு என பெயர் சூட்டி மதராஸ் வாலா என அழைத்தவர்களை தமிழ் வாலா என அழைக்க வைத்தார் அண்ணா.. கலப்பு திருமணத்தை சட்ட ரீதியாக அங்கிகரித்து இருமொழி கல்வி கொள்கையை அங்கீகரித்து தனது குருவான பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்தினார்.
அண்ணாவிற்கு பிறகு கிரிமினில் சிந்தனை கொண்ட கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் முதல்வராக வேண்டிய நிலையில் எம்ஜிஆர் மூலம் பதவியை பிடித்துக்கொண்டார்.
அதிமுக தொடங்கி எம்ஜிஆர் தொடர்ச்சியாக 3 முறை ஆட்சியில் அமர்ந்தார் எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்தபோது மீண்டும் அவரிடம் ஆட்சி வழங்கிட எனக்கு வாக்களியுங்கள் என்றார் கருணாநிதி. மீண்டும் முதல்வராக புரட்சித்தலைவர் வருவார் என புரட்சித்தலைவி அம்மா பிரசாரம் செய்தார். முதல்வராகவே தமிழகம் வந்தார் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜானகி அம்மையாரை முதல்வராக்கி மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கவிழ்த்தனர்.
தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்கி சேவல், புறா என தனித்து போட்டியிட்ட பிறகு திமுக ஆட்சிக்கு வந்தது அதிமுகவை பிளவுப்படுத்த பிறர் நினைப்பதை உணர்ந்த ஜானகி அம்மையார் கட்சியை அம்மாவிடம் வழங்கினார் இந்தியாவில் கட்சி உடைந்து மீண்டும் சின்னம் பெற்ற வரலாறு அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது
அம்மா தலைமையேற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது கழகம். இந்தியாவே இரும்பு பெண்மணி என்கிற பட்டத்தை கொடுத்தது. அம்மா அவர்களின் உடனிருந்த சசிகலா உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் உடனிருந்தவர்களுக்கு வழங்கினார். உழைத்தவர்கள் சோர்ந்து போகும் வகையில் சசிகலாவின் செயல்பாடு இருந்தது.
அம்மா இறப்பிற்கு பிறகு சசிகலா முதல்வராக ஓபிஎஸ்சை ராஜினாமா செய்ய வைத்த போது சசிகலாவிற்கு துதிப்பாடி, கப்பம் கட்டுகிறவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்பதால் நான் தான் முதல்முதலில் எதிர்த்தேன். தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ்சிடம் சசிகலாவை கட்சியில் இணைக்க கூடாது என்ற போது சம்மதம் தெரிவித்த பிறகே ஒன்று சேர்ந்தோம்.
2021 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விவாதத்தின் போது சசிகலாவை கட்சியில் இணைக்க ஓபிஎஸ் கூறியபோது நான் எதிர்த்தேன். விலகிக்கொள்வதாக கூறிய பின்பே வைத்திலிங்கத்தை பிடித்துக்கொண்டார் ஓபிஎஸ்.
தஞ்சாவூரில் சசிகலா, டிடிவி தினகரனை எதிர்த்து வைத்தியலிங்கம் அரசியல் செய்ய முடியாததால் ஓபிஎஸ் உடன் இணைந்தார். நான் எனக்காக சசிகலாவை எதிர்க்கவில்லை. ஒட்டுமொத்த இயக்கத்திற்காகவே எதிர்த்தேன்.
தேர்தல் அறிக்கையில் நிறைய வாக்குறுதிகளை ஸ்டாலின் கொடுத்தார். பெண்களுக்கு உரிமைத்தொகை 1000 ரூபாய் கொடுப்பேன். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவோம். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என பல வாக்குறுதிகளை அளித்தார்.
ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னால் எதையாவது செய்தாரா, வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா என்றால் இல்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அவற்றை பார்க்க வேண்டும். அதிகாரிகள் பாராமுகமாக செயல்படாதீர்கள்.
இவ்வாறு கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி பேசினார்.