சிறப்பு செய்திகள்

நாட்டிற்கே வழிகாட்டியாக இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் பெருமிதம்

சேலம்,

பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்தையும் அளித்து, நாட்டிற்கே வழிகாட்டியாக இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் புறநகர் மாவட்டம், வீரபாண்டி தொகுதி ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ஆற்றிய எழுச்சியுரை வருமாறு:

கழக ஆட்சியிலே நிறைய திட்டங்களை நாங்கள் செயல்படுத்தினோம். ஸ்டாலின் கடந்த 10 ஆண்டு காலத்தில் எதுவுமே நடக்கவில்லை என்று போகும் இடமெல்லாம் பேசுகிறார். 2011லிருந்து 2021 வரைக்கும் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லையாம்.

எவ்வளவு பொய் பேசுகிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். எவ்வளவு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தினோம். அம்மா முதல்வராகவும் அம்மா மறைவுக்குப்பிறகு அம்மாவின் அரசில் ஏராளமான திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கிய அரசு அம்மாவின் அரசு. தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிய ஒரே அரசு அம்மாவின் அரசு தான்.

2011 ல் அம்மா அவர்கள் தெரிவித்தார். நான் முதலமைச்சராக வந்தவுடன் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்குக்கும், அனைத்துத்தரப்பு மக்களுக்கும், குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் கொடுப்பேன் என்று சொன்னார். கொடுத்தாரா இல்லையா.

இது தான் கழக அரசு. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார். பள்ளியில் படிக்கின்ற குழந்தைக்கு சீருடை, காலனி, புத்தகம், புத்தகத்தை கொண்டு போக பை, பள்ளிக்கு போக சைக்கிள், நல்ல அறிவுப்பூர்வமான கல்வி கிடைக்க மடிக்கணினி, இவை அனைத்தையும் அளித்தது அம்மாவின் அரசு. கொடுத்தவர் அம்மா.

இந்த நாட்டிற்கே வழிகாட்டியாக இருந்தார். ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவி கூட உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றிய தலைவி அம்மா. ஒரு நாடு பொருளாதாரத்தில் ஏற்றம் பெற வேண்டும் என்றால் கல்வி நிறைந்திருக்க வேண்டும்.

அந்த கல்வி நிறைவுபெற அம்மா இருக்கின்ற போது ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி என்று அனைத்தையும் திறந்து, இன்றைக்கு குறைந்த கட்டணத்தில் கல்லூரியில் படிக்கின்ற வாய்ப்பை அளித்துள்ள தலைவி அம்மா. உங்களால் முடியுமா, முடியாது.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.