சிறப்பு செய்திகள்

உலகத்தரமான கல்வி கிடைக்கும் வாய்ப்பை தட்டிப்பறித்து முடக்கி விடாதீர்கள்-விடியா அரசுக்கு எடப்பாடியார் வலியுறுத்தல்

சேலம்

மடிக்கணினி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துங்கள் என்றும், உலகத்தரமான கல்வி கிடைக்கும் வாய்ப்பை தட்டிப்பறித்து முடக்கி விடாதீர்கள் என்று விடியா திமுக அரசை, கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று நேற்று சேலம் புறநகர் மாவட்டம், வீரபாண்டி தொகுதி ஆட்டையாம்பாட்டியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ஆற்றிய எழுச்சியுரை வருமாறு:-

இப்போது நாங்கள் அளித்து வந்த மடிக்கணினியை நிறுத்தி விட்டார்கள். ஆட்டையை போட்டிருந்தாலும் போட்டிருப்பார்கள். ஆட்சி மாற்றம் வந்தபிறகு தான் இதற்கும் கணக்கு எழுதி ஊழல் செய்துள்ளார்களா என்று பார்க்க வேண்டும்.

மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும். இன்றைய விஞ்ஞான உலகத்தில், விஞ்ஞான கல்வி நம்முடைய மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்மா அற்புதமாக கொண்டு வந்த மடிக்கணினி திட்டம்.

ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் அரசுப்பள்ளியில் படிக்கிறார்கள். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 12 ஆயிரம் அளித்து மடிக்கணினி வாங்க முடியாது. படிப்பதற்கே அவர்களுக்கு சிரமம்.

குடும்ப சூழ்நிலையால் தவித்துக்கொண்டிருக்கின்ற அந்த குடும்பத்தில் உள்ள மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கும் இந்த விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, தொலைநோக்கு சிந்தனையோடு, சிந்தித்து, சிந்தித்து இந்த மடிக்கணினி திட்டத்தை கொண்டு வந்து சுமார் 52 லட்சம் மாணவர்களுக்கு அளித்த அரசு அம்மாவின் அரசு. இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலேயும் 52 லட்சம் பேருக்கு மடிக்கணினி அளித்த வரலாறு கிடையாது.

அந்த வரலாற்றைப் படைத்த கட்சி அதிமுக அரசு தான் ஸ்டாலின் அவர்களே. இந்த மடிக்கணினி மூலமாக அறிவுப்பூர்வமான கல்வி, நாட்டில் நடக்கும் பிரச்சினையை மடிக்கணினி மூலம் தெரிந்து கொள்ளலாம். வெளிநாட்டில் நிகழும் நிகழ்வுகளை மாணவர்களின் மடியிலேயே தெரிந்து கொள்ளலாம்.

அறிவுப்பூர்வமான கல்வியை அளித்த அரசு அம்மாவின் அரசு. எந்த ஆட்சியில் இதுபோல கிடைத்தது. இந்தியாவில் எத்தனையோ மாநிலம் உள்ளது. இதுபோன்ற அறிவுப்பூர்வமான கல்வி அளித்த வரலாறு கிடையாது. அந்த அறிவுப்பூர்வ கல்வியை அளித்த அரசு அம்மாவின் அரசு. இது தான் எங்கள் சாதனை. எதிர்வரும் காலம் இளைஞர்கள் கையில் உள்ளது.

அவர்கள் தான் இந்த நாட்டை ஆளக்கூடியவர்கள். நாட்டை ஆளக்கூடிய சிற்பிகள். ஒரு கல்லை அளித்தால் எப்படி சிற்பி வடிவமைக்கிறாரோ அதுபோல இன்றைக்கு நமது மாணவர்களுக்கு மடிக்கணினி அளித்து, எதிர்க்கால வாழ்க்கையை, எதிர்கால இந்தியாவை, எதிர்கால தமிழகத்தை அவர் கையிலே ஒப்படைக்கிறோம்.

விஞ்ஞான உலகத்தில் மாணவர்கள் மிதந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காகத்தான் அம்மா அவர்கள் மடிக்கணினியை அளித்தார். இந்த திட்டத்தை நிறுத்தி விட்டீர்களே. மனசாட்சி உள்ள மனிதராக இருந்திருந்தால் நிறுத்தியிருப்பார்களா.

இளைஞர்கள், மாணவர்கள் நலன் கருதி இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அண்ணாவின் பிறந்தநாள் விழாவிலே கேட்டுக்கொள்கின்றோம். இதில் அரசியல் பார்க்க வேண்டாம். தயவுசெய்து அரசியலை பார்க்க வேண்டாம்.

கழக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்று பார்க்காதீர்கள். ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவி ஒரு விஞ்ஞான கல்வி, அறிவுப்பூர்வமான கல்வி, உலகத்தரத்திற்கு ஏற்ற கல்வி அந்த மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை தட்டிப்பறித்து முடக்கி விடாதீர்கள். உங்களை காலம் மன்னிக்காது.

இளைஞர் சமுதாயம் உங்களை மன்னிக்க மாட்டார்கள். இந்த திட்டத்தை தொடர வேண்டும் என்று விடியா திமுக அரசின் முதல்வரை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.