தற்போதைய செய்திகள் மற்றவை

சட்டம், ஒழுங்கு சீர்கேட்டில் மோசமான மாநிலம் தமிழகம்-எம்.ஏ.முனியசாமி குற்றச்சாட்டு

மதுரை

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அதிகரித்து வருகிறது என்றும் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டில் மோசமான மாநிலம் தமிழகம் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொகுதி கழகம் சார்பில் தொண்டியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி பேசியதாவது:-

மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று அம்மா மக்களுக்காக திட்டங்களை அளித்தார். குறிப்பாக மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி, பெண்களுக்கு தாலிக்குதங்கம் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் 14 கல்வி உபகரணங்கள், கிராமப்புற மேன்மை அடைய கறவை மாடுகள், ஆடுகள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அதனை தொடர்ந்து அம்மாவின் வழியில் ஆட்சி செய்த எடப்பாடியார் அம்மாவின் திட்டங்களை தொடர்ந்து வழங்கி வந்தார். தொடர்ந்து அம்மாவின் கனவை நனவாக்கும் வண்ணம், உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், ஏழை, எளிய மக்கள் பயன்பெறு வண்ணம் அம்மா மினி கிளினிக், நிலத்தடி நீர் உயர குடிமராமத்து திட்டம், கொரோனா காலங்களில் மக்களின் வாழ்வாதாரரை பெருக்க பல்வேறு பல திட்டங்களை தந்து மட்டுமல்லாது, பொங்கல் பரிசாக 2500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பினை 2 கோடியே 8 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கினார்.

எடப்பாடியார் சிறந்த ஆட்சியை வழங்கியதன் மூலம், மூன்று முறை இந்தியா டுடே மூலம் இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டது. உயர் கல்வி சேர்க்கை முதலிடம், தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் முதலிடம், மருத்துவத் துறையில் முதலிடம், கிராமபுற சாலைகளை மேம்படுத்துவதில் முதலிடம், உள்ளாட்சி துறையில் இந்திய அளவில் 90க்கும் மேற்பட்ட விருதுகள், பெண்களுக்கு பாதுகாப்பு மிக்க மாநிலங்களாக சென்னை, கோவை தேர்வு, சிறந்த காவல் நிலையங்களாக தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டு சட்ட ஒழுங்கில் சிறப்பாக இருந்தது.

ஆனால் தற்போது விடியா தி.மு.க அரசை கொண்டால் எடுத்துக்கொண்டால் எல்லாம் தலைகீழாக உள்ளது. அம்மா அரசின் திட்டங்களை எல்லாம் இந்த விடியா திமுக அரசு முடக்கி விட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம். அதை செய்வோம் என்று 525 தேர்தல் வாக்குறுதியை கொடுத்தனர். எதையும் நிறைவேற்றவில்லை.

மாறாக மக்களுக்கு சொத்து வரிஉயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவை தான் பரிசாக கொடுத்தனர். சட்டம்-ஒழுங்கு எடுத்துக்கொண்டால் மிகவும் மோசமாக உள்ளது. நாள்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பள்ளிகளில் போதைப்பொருட்கள் விற்பனை, இதே வரிசையில் தற்போது பெட்ரோல் குண்டு வீச்சு அதிகரித்து வருகிறது.

இதெல்லாம் மக்கள் நினைத்து பார்த்து வெளியே செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர். அந்த அளவில் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டில் இந்தியாவிலேயே மோசமான மாநிலமாக தமிழகம் உள்ளது. எப்போது தேர்தல் வரும் என்று மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். ஏனென்றால் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சியை அமர்த்த மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.