தற்போதைய செய்திகள்

தி.மு.க.வுக்கு தக்க பதிலடி கொடுப்போம்-மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் சூளுரை

சென்னை

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை திசை திருப்ப ஆ.ராசாவை விட்டு மத பிரச்சினையை கிளப்பும் தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம் என்று வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசினார்.

ஆர்.கே.நகர் பகுதி 42, 47, 41, 38- ஆகிய வட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தண்டையார்பேட்டையில் உள்ள வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் பாசறை மாவட்ட செயலாளர் ஜெஸ்டின் பிரேம்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், பேசியதாவது:-

இயக்கத்தில் பெண்களும், இளைஞர்களும், இணைந்து சமூக நலப்பணிகளுடன் மக்கள் நல பணிகளில் தங்களை முழு நேரமாக ஈடுபடுத்தி கொள்ளும் வாய்ப்பினை உருவாக்க அம்மா அவர்களால் துவக்கப்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறையில் இணைந்து பணியாற்றியதால் பலர் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், மாவட்ட செயலாளர்களாகவும் மக்கள் பணிகளை மேற்கொண்டனர்.

அம்மா அவர்களது வழியில் எடப்பாடியார் அதனை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். கழக ஆட்சியில் பெண்கள் சமுதாயத்தை மேம்படுத்த சுயமாக தொழில் தொடங்கவும் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டது.

கிராமப்புற, நகர்ப்புறங்களில் சுயமாக தொழில் தொடங்கவும் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்த பல திட்டங்களை செயல்படுத்தி உதவிகளை வழங்கியவர் எடப்பாடி கே.பழனிசாமி என்பதை யாரும் மறுத்து விடமுடியாது. கழக ஆட்சியில் அவர் சிறப்பாக செயல்பட்டு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை பெற்று தந்தார். அதனால் 1500 மாணவர்கள் தற்போது பயன் அடைந்து வருகின்றனர்.

ஜாதி, மதங்களை கடந்து இன்றைய சமுதாய சீரழிவை மாற்ற இளம் தலைமுறையினர் இளைஞர்களும், இளம்பெண்களும், கட்சி பணியில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும், சமுதாயத்திற்கு நாம் என்ன செய்தோம் என வரலாறு படைக்க வேண்டும். தீயசக்தி தி.மு.க.வினரை சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்த பொதுமக்களின் இன்றைய நிலை கேள்விக்குறியாகி விட்டது.

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளராக கழக பணிகளை மேற்க்கொண்டு தொடர்ந்து கட்சி பணியாற்றும் தாம் ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுத்து அவர்களோடு இணைந்து அவர்களின் குறைகளுக்கு தீர்வு கண்டுள்ளேன்.

குறிப்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு உதவிகள் செய்துள்ளேன். கல்லூரி படிப்புக்கும் இடஒதுக்கீடு பரிந்துரை மற்றும் மாணவர்களுக்கு உதவித்தொகை, முதியோர், மற்றும் விதவைகளுக்கு உதவித்தொகை, சுய உதவிக்குழுவினருக்கு வங்கி கடனுதவி, தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, நலத்திட்ட உதவிகள் என தனது மக்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளேன்.

ஆனால் ஆர்.கே.நகர், மற்றும் பெரம்பூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணிகளை அறவே தவிர்த்து விட்டு மாநகராட்சி, மற்றும் அரசு கான்ட்ராக்டர் டெண்டர் பணிகளில் கரப்சன், கலெக்சன், வாங்குவதிலேயே குறியாக உள்ளனர். கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அடிப்படை வசதிகள் தான் தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

சொத்து வரி, மின் கட்டண உயர்வை திசை திருப்ப அ.ராசாவை விட்டு மத பிரச்சினையை கிளப்ப முயற்சிக்கும் தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் தக்க பதிலடியை கொடுப்போம். வாக்குறுதியை நிறைவேற்றாமல் தொடர் விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து மக்கள் மீது பெரும் சுமையை சுமத்திய தீயசக்தி தி.மு.க.வை விரட்ட இளம் தலைமுறையினர் கழக நிர்வாகிகளுடன் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். எடப்பாடியாரின் கரங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் மீண்டும் கழக ஆட்சி அமைய உழைப்போம்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசினார்.

இந்த கூட்டத்தில் எம்.என்.சீனிவாசபாலாஜி, ஆர்.நித்தியானந்தம், ஏ.கணேசன், டி.டீ.ஜனார்த்தனன், எஸ்.ஆர். அன்பு, ஜேசிபிஎஸ்.சுரேஷ், எம்.சீனிவாசன், ஏ.வினாயகமூர்த்தி, சண்முகவினாயகம், எம். நாகூர் மீரான், ஏ.கே.சந்திரசேகர், டி.தயாளன், பி.கோவிந்தராஜ், ஆர்.வேல்முருகன், எம். ராமமூர்த்தி, பி.கே.யுவராஜ், மரக்கடை விஜி, கே.ஆர்.வீரமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.