தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது

கழக அமைப்பு செயலாளர் என்.முருகுமாறன் ஆவேசம்

கடலூர்

ஆள் பிடிப்பவர்களை வைத்து அ.தி.மு.க.வை அழித்து விட முடியாது. வரும் சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றிபெற்று எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கழக அமைப்பு செயலாளர் என்.முருகுமாறன் கூறி உள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினருமான என்.முருகுமாறன் பேசினார்.

கடலூர் கிழக்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற கழகம் தொகுதி சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினருமான என்.முருகுமாறன் தலைமை தாங்கினார்.

காட்டுமன்னார்கோயில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வாசு.முருகையன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.என்.சிவகுமார் துவக்க உரை நிகழ்த்தினார். காட்டுமன்னார்கோவில் பேரூர் கழக செயலாளர் எஸ்.எம்ஜிஆர்தாசன் தொகுப்புரை வழங்கினார். ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.ஜோதிபிரகாஷ், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பி.சி.நவநீதகிருஷ்ணன், குமராட்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வை. சுந்தரமூர்த்தி, மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன், கழக அமைப்பு செயலாளர் என்.முருகுமாறன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், தலைமை கழக பேச்சாளர்கள் நள்ளாற்று நடராசன், மாத்தூர் சேகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் என்.முருகுமாறன் பேசியதாவது:-

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என சொன்னவர் அண்ணா. தமிழகத்தை தற்போது ஆண்டு கொண்டிருக்கும் திமுக தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று அண்ணா பிறந்தநாள் விழாவை கொண்டாடவில்லை. தனது கொடியில் அண்ணா உருவத்தை பதித்து அண்ணாவின் புகழை தமிழகம் எங்கும் பரப்பிய புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா மற்றும் அவர் வழிவந்த எடப்பாடியார் தலைமையிலான கழகம் தான் இன்று அண்ணா பிறந்தநாள் விழாவை கொண்டாடுகின்றது.

அண்ணா உருவாக்கிய இயக்கத்தை கரையான் புற்றுகட்ட கருநாகம் குடி கொண்டது போல் கருணாநிதி குடும்பம் இன்று திமுகவில் புகுந்து உள்ளது. தமிழ்நாட்டில் இன்று நான்கு முதலமைச்சர் உள்ளார்கள். ரியல் எஸ்டேட் துறைக்கு ஸ்டாலினின் மருமகன் சபரீசன் முதல்வர். சினிமா துறைக்கு உதயநிதி முதல்வர் என அவர்கள் குடும்பத்தில் நான்கு முதல்வர்கள் உள்ளனர்.

நாலேகாலாண்டு காலம் ஆண்ட எடப்பாடியார் ஆட்சி காலத்தில் காட்டுமன்னார்கோயிலில் எம்ஜிஆர் பெயரில் அரசு கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு தொழில்நுட்பக் கல்லூரி, 510 கோடியில் கதவணை என ஏராளமான திட்டங்களை நிறைவேற்றினோம். எங்கள் இந்த பத்தாண்டு கால சாதனைகளை திமுகவால் எத்தனை வருடங்கள் ஆட்சியில் இருந்தாலும் செய்து காட்ட முடியாது. மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் ஸ்டாலின் அல்ல. மக்களுக்கு நல்லது செய்த தகப்பனாருக்கு பிறந்தவரும் ஸ்டாலின் அல்ல. தகப்பன் எவ்வழியோ ஸ்டாலின் அவ்வழி.

ஆள் பிடிப்பவர்களை வைத்து அண்ணா திமுகவை ஒரு காலத்திலும் அழிக்க முடியாது. இது எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம். மனிதப்புனிதர் எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்ட அம்மாவால் பாதுகாக்கப்பட்ட இயக்கம். வெற்றி திருமகனார் எடப்பாடியார் தலைமையேற்றுள்ள இயக்கம். இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. எடப்பாடியாருக்கு 2600 பொதுக்குழு உறுப்பினர்களின் செயற்குழு உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவு இருக்கின்றது. கன்னியாக்குமரி முதல் திருத்தணி மலை வரை இருக்கின்ற ஒட்டுமொத்த கழக தொண்டர்களும் எடப்பாடியார் பக்கம் நிற்கின்றார்கள்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கின்றது. கஞ்சா, வழிப்பறி, கொள்ளை-கொலை என அன்றாடம் செய்திகள் வருகின்றன. இதை தடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கின்றது. ஒன்றும் இல்லை. காட்டுமன்னார்கோவிலில் 24 மணி நேரமும் டாஸ்மாக் திறந்தே உள்ளது. பட்டம் பகலிலே வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் மாட்டு தலையை வெட்டி எறிந்து விட்டு மாட்டை திருடிக்கொண்டு செல்லும் அவலமெல்லாம் இங்கே நடக்கின்றது.

பொதுப்பணித்துறை கஸ்பா வாய்க்கால் கான்சாகிப் வாய்க்காலை சரி செய்யும் பணியில் என்ன செய்ய வேண்டும். வாய்க்காலை ஆழப்படுத்தி தூர்வாரி தண்ணீர் கடை மடைப் பகுதி வரை சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் இங்கே பொதுப்பணித்துறை என்ன செய்தது என்று உங்களுக்கு தெரியும். அதிகாரிகள் இந்த மாவட்ட அமைச்சருக்கு பணிந்து பணியாற்றி கொண்டுள்ளர்கள்.

நாங்களும் பத்து வருடங்களாக இங்கே சட்டமன்ற உறுப்பினராக இருந்தோம் யாரையாவது மதிக்காமல் இருந்தோமா. மனிதநேயமற்ற முறையில் கழக தொண்டன் நடந்தான் என்று சொல்ல முடியுமா. இந்த இயக்கத்தின் பாதுகாவலர்களில் ஒருவரான முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் இந்த தொகுதிக்கு வருகின்றார். இங்கு கொடி கட்டக்கூடாது, அங்கு கொடி கட்டக்கூடாது, பேனர் வைக்கக்கூடாது என்று ஏகப்பட்ட கெடுபிடிகளை காவல்துறையினர் செய்கின்றனர்.

உடையார்குடி மாரியம்மன் கோவில் திருவிழாவில் திமுக அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றது. இது நீண்ட நாள் நீடிக்காது.. இன்று நீங்கள் எதை விதைக்கிறீர்களோ நாளை அதை அறுவடை செய்தே தீர வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் என்.முருகுமாறன் பேசினார்.

இந்த பொதுகூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்வி.இராமஜெயம், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் பி.எஸ். அருள், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கானூர் கோ.பாலசுந்தரம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கா.திருமாறன், மாவட்ட கழக அவை தலைவர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட கழக பொருளாளர் தோப்பு.கே.சுந்தர் மற்றும் பல கலந்து கொண்டனர். முடிவில் ஸ்ரீமுஷ்ணம் பேரூர் கழக செயலாளர் பூமாலை கேசவன் நன்றி கூறினார்.