வரும் தேர்தலில் ஸ்டாலினை ஓட, ஓட விரட்டியடிப்பார்கள்

சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாசலம் ஆவேசம்
சேலம்
ஸ்டாலினுக்கு ஏன் ஓட்டு போட்டோம் என்று இப்போது மக்கள் புலம்புகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை ஓட, ஓட விரட்டி அடிக்க போகிறார்கள் அரசு ஊழியர்கள் என்று சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாசலம் ஆவேசமாக கூறி உள்ளார்.
சேலம் மாநகர் மாவட்டம், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில், மெய்யனூர் மாரியம்மன் கோயில் அருகில், சூரமங்கலம் பகுதி-2 கழக செயலாளர் ஏகேஎஸ்.எம்.பாலு தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சூரமங்கலம் பகுதி-1 கழக செயலாளர் ஏ.மாரியப்பன் வரவேற்புரையாற்றினார்.
மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஆர்.ராம்ராஜ், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சி.அசோக்குமார், மாநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் என்.ஜமுனாராணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.ஜான் கென்னடி, மாநகர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கே.எஸ்.சதீஸ்குமார், மாநகர் மாவட்ட கழக துணை செயலாளர் டி.லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் கே.சிங்காரம், சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.பாலசுப்ரமணியன், தலைமை கழக பேச்சாளர் காசிநாதன், மாநகர் மாவட்ட கழக அவைத்தலைவர் வி.பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.செல்வராஜ், எல்.ரவிசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இக்கூட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.வெங்கடாஜலம் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தற்போது இந்த விடியா திமுக அரசு மக்களைப்பற்றி சிந்திக்காமல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். ஆனால் கழக ஆட்சியின்போது ஸ்டாலின் இதற்கு கருப்பு கொடி காட்டினார். விடியல் தருகிறோம் என்று மின்கட்டணம், சொத்துவரி, வீட்டுவரி உயர்த்தி உள்ளனர்.
நீட்டை ரத்து செய்கிறோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றி திமுகவினர் ஆட்சிக்கு வந்து உள்ளனர். மக்களைப்பற்றி கவலைப்படாமல் கருணாநிதிக்கு பேனா வைப்பதிலேயே லட்சியமாக உள்ளார் ஸ்டாலின்.
திமுகவினரின் குடும்பத்திற்கு ஆதாயம் இருப்பதால் கஞ்சா விற்பனையை கூட கண்டுகொள்ளாமல் உள்ளனர். பல ஆயிரம் கோடிகள் வருமானம் கிடைப்பதால் ஆன்லைன் ரம்மியையும் தடை செய்யாமல் உள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை நடக்கிறது.
தமிழகம் முழுவதும் கஞ்சா ஆங்காங்கே கிடைக்கிறது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் கொண்டு வருவோம் என்று பொய் வாக்குறுதி கொடுத்து அவர்களையும் ஏமாற்றி கொண்டு உள்ளனர். ஏன் ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டோம் என்று இப்போது புலம்புகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை ஓட ஓட விரட்டி அடிக்க போகிறார்கள் அரசு ஊழியர்கள்.
திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதங்களுக்கு மேல் ஆகி உள்ளது, சேலம் மாநகருக்கு என்று எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஆனால் எடப்பாடியார் சேலம் நகர் முழுவதும் பல்வேறு மேம்பாலங்கள் அமைத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கினார். சேலம் மாவட்டம் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக திகழ எடப்பாடியாரே காரணம். ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் 3 சதவீத வாக்குகளில் வென்ற ஒரு விபத்து முதலமைச்சர்.
திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, ரவுடிசம் போன்றவை அதிகரித்துள்ளது இது மக்களுக்கு தேவைதானா? மேலும் அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம் திட்டம், மானியத்தில் ஸ்கூட்டர் திட்டம் போன்ற மக்களுக்கு பயன்பெற்ற திட்டங்களையெல்லாம் கழக ஆட்சியில் கொண்டு வந்தது என்று பல்வேறு திட்டங்களை ஸ்டாலின் நிறுத்தி விட்டார்.
ஸ்டாலின் அம்மா உணவகத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மூடவும் பார்க்கிறார். கழக முன்னாள் அமைச்சர்கள் மீதும், கழக நிர்வாகிகள் மீதும் பல்வேறு வழக்குகளை போடுகிறார்கள் இதற்கெல்லாம் கழகத்தினர் அஞ்சமாட்டார்கள், அதையெல்லாம் சட்டப்படி சந்தித்து வெற்றி பெறுவோம்.
எடப்பாடியாரின் நான்காண்டு சாதனைகளை, ஸ்டாலின் 40 ஆண்டுகள் ஆனாலும் செய்ய முடியாது.
எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வென்று எடப்பாடியார் முதலமைச்சராக வருவார், மக்கள் அனைவரும் அவரை வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாசலம் பேசினார்.